23 November 2016

மகிழ்வும் நெகிழ்வும் 4


உள்ளத்து உள்ளது கவிதை - இன்பம்
உருவெடுப்பது கவிதை என்றார் கவிமணி... 

அப்படிதான் ஏழாம் வகுப்புப் படிக்கும்போது என் உள்ளத்தில் உருவெடுத்தது கவிதை.. எழுதுவது கவிதையா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் அப்போது கவலையில்லை.. கொஞ்சம் எதுகை மோனையோடு எழுதிவிட்டால் அதுதான் கவிதை என்ற தீர்மானமான எண்ணம் மேலோங்கியிருந்ததால் நிறைய கவிதைகள் எழுதினோம்..காணும் காட்சிகளை எல்லாம் கவிதையாக்கினோம்... அவற்றில் இயற்கை துள்ளியது.. அழகியல் ததும்பியது.. கற்பனை மலர்ந்தது, கனவு விரிந்தது.. மெல்ல.. நாட்டு நடப்பியல் உட்புகுந்தது... சமுதாயத்தை சாடினோம்.. அநியாயம் கண்டு பொங்கினோம்.. அறிவுரைகளை அள்ளிக்கொட்டினோம்.. அநாயாசமாய் எழுதித் தள்ளினோம்.. ஏன் எழுதினோம் எழுதினோம் என்கிறேன் என்றால் அது ஒரு குழுவியக்கம். நானும் என் வகுப்புத் தோழிகளுமாய்.. போட்டி போட்டுக்கொண்டு எழுதினோம். அது ஒரு அழகிய கவிதைக்காலம். என் முதல் கவிதையை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.. சிரிப்பு வருகிறது. 

நிஜமென்று நினைத்தே
நின்னை நாடிவந்த என்னை
நின்ற இடத்திலேயே
நிற்கச் செய்துவிட்டாய்!

சிலையென்று உன்னருகில்
சின்னப்பலகை ஒன்றிலே
சிங்காரமாய் எழுதியே நீ
சிரித்திருக்கக் கூடாதோ..

வண்ண நிறங்கள் தீட்டியே
வாலைக்குமரி போலவே
வசந்தம் என்றும் வாடாமல்
லயித்திருக்கும் அழகியே!

கல்லணையில் ஒரு பெண்ணின் சிலையைச் சுற்றி சில ஆண்கள் நின்றுகொண்டு படமெடுத்துக் கொண்டிருந்த காட்சியே சிறுமியான என்னை இப்படி எழுதத் தூண்டியது. இப்படிதான் காண்பதையெல்லாம் கவிதையாக்கினேன்.. அல்லது அதுவே கவிதையென நம்பினேன்.  

பாடப்புத்தகம் தவிர வேறு புத்தகங்கள் வாசிப்பது தடை செய்யப்பட்டு, போனால் போகிறது என்று அம்புலிமாமா மட்டும் வாசிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த பருவம் அது... அத்தோடு கவிதையென எழுதப்படும் யாவும் தணிக்கை செய்யப்படும் அபாயமும் இருந்தது. அச்சூழலில் ஒரு பதின்மவயது சிறுமியின் கவிதைக்களம் எதுவாக இருக்கமுடியும்.. பெரும்பாலும் சிறுவர்களுக்கானப் பாடல்களாகவே அவை அமைந்தன. எனையொத்த சக தோழிகள் வளர்ச்சியின் அடுத்த கட்டமாய்... காதல் கவிதைகளை சர்வசாதாரணமாகப் படைக்க... எனக்கோ காதல் என்ற வார்த்தையைக் காதால் கேட்கவும் துணிவில்லாதிருந்தது. நான் எழுதும் அனைத்தையும் தாள்களில் அல்லாது நோட்டுப் புத்தகத்தில் எழுதும் வழக்கத்தை வைத்திருந்ததால் அவற்றை என் பொக்கிஷங்களெனப் பாதுகாத்தேன். 

திருமணம் என்ற பெயரில், என் அனுமதியின்றியே வேரோடு எனைப் பெயர்த்து வேறிடத்தில் ஊன்றியது காலம். என் இருபது வருட வாழ்வை இரண்டு பெட்டிகளில் அடைத்துக் கிளம்பும்போது என் உடமைகளோடு தவறாமல் என் நோட்டுப் புத்தகங்களையும் வைத்தனுப்பினார் அம்மா. . குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் பிறப்பு, வளர்ப்பு, படிப்பு என்றான நிலையில் கொஞ்சகாலம் நானொரு எழுத்தாளி என்பதையே மறந்துபோயிருந்தேன். குழந்தைகள் சற்று வளர்ந்த பிறகு அவர்களது தொல்லையாலோ.. தொலைக்காட்சித் தொடர்களாலோ... அக்கம்பக்க அரட்டைக் கச்சேரியாலோ.. நண்பகல் உறக்கத்தாலோ.. ஆக்கிரமிக்கப்படாத வாழ்வின் ஓய்வுப்பொழுதுகள் உள்ளிருக்கும் எழுத்தார்வத்தை மீளவும் வெளிக்கொணரத் துவங்கின. கணினி, இணையம் போன்றவற்றின் பரிச்சயம் இல்லாத காலகட்டம் அது. அப்போதும் நோட்டுப்புத்தகத்தில்தான் அத்தனையும் எழுதிவைத்தேன். 

தனியொருத்தியாய் வேரோடு எனைப் பெயர்த்தது போதாதென்று சில வருடங்களுக்குப் பிறகு குடும்பத்தோடு பெயர்த்துக்கொணர்ந்து அயல்மண்ணில் ஊன்றியது அடுத்தொரு காலம். ஆளுக்கிரண்டு பெட்டிகளென்ற நிபந்தனைக்குள் அடங்கவில்லை அந்நாள்வரையிலான என் வாழ்வு. எடுப்பதும் விடுப்பதுமான விளையாட்டின் இறுதியில் பெட்டியில் இடமில்லை என்று கைவிடப்பட்டவற்றோடு கலந்துபோனது என் கவிதைநோட்டு. ஏக்கத்தோடு விட்டுவந்த என் நோட்டுப்புத்தகத்தின் எழுதிய பக்கங்களை மட்டும் கிழித்துத் தன் பெட்டியில் வைத்து எனக்குத் தெரியாமலேயே எடுத்துவந்து என்னிடம் கணவர் சேர்ப்பித்தபோது நெகிழ்ந்துருகிப் போனது நெஞ்சு. இனிதே துவங்கியது மூன்றாவது இன்னிங்ஸ். 

ஒருவகையில் நான் அதிர்ஷ்டக்காரி என்றுதான் சொல்லவேண்டும். எனைச் சுற்றியிருக்கும் அனைத்து உறவுகளும் நட்புகளும் ஏதோவொரு வகையில் என்னை வளர்த்துவிடுபவர்களாகவும், ஊக்கத்துடன் வழிநடத்துபவர்களாகவும், துவளும் பொழுதுகளில் தூக்கி நிறுத்துபவர்களாகவும், என் வளர்ச்சியில் இன்பம் காண்பவர்களாகவும் இருப்பதும் முக்கியக் காரணம். இன்றைய என் மகிழ்வின் சிதறல்களில் வெளிப்படுவதெல்லாம் பின்னிருந்து ஊக்கமும் ஒத்துழைப்பும் கொடுக்கும் அனைத்து நல்லுறவுகளின்.. மற்றும் நன்னட்புகளின் அகமும் முகமுமே.

அந்நாளில் எழுதியவற்றை நோட்டுப்புத்தகத்தில் சேமித்தாற்போன்று இந்நாளில் என் மகிழ்வுகளையும் நெகிழ்வுகளையும் என் வலைப்பக்கத்தின் பதிவேட்டில் பத்திரப்படுத்துகிறேன். நானே தவறவிட்டாலும் என்னிடத்தில் கொணர்ந்துசேர்க்க ஒன்றல்ல, இரண்டல்ல... எண்ணிலா நட்புகள் இங்கிருக்கின்றீர்களே...  

மகிழ்வு 1

 03-10-16 தினமலர் பட்டம் சிறுவர் இதழில் என்னுடைய சிறுவர் பாடல் வெளியாகியிருப்பதொரு மகிழ்வின் சிதறல்.. பட்டம் சிறுவர் இதழின் பொறுப்பாசிரியர் அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுக்கு மிக்க நன்றி. 





மகிழ்வு 2
11.11.2016 இல் கானமயில் என்ற சிறு தகவற்பதிவு.






மகிழ்வு 3

கூகுள் மேப்பில் பயனாளர் பயன்பாட்டுக்காக பகிரப்பட்ட என்னுடைய சில படங்களின் பார்வையாளர் கணக்கு ஐயாயிரத்தைத் தாண்டிவிட்டதாக தகவல் வந்திருப்பது மகிழ்வின் கணக்கில் கூடுதலாய் ஒன்று…



மகிழ்வு 4

கடந்த ஆகஸ்ட் மாதம் சிட்னிக்கு வந்திருந்த கவிஞர் சல்மா அவர்களை உயர்திணையின் மாதாந்திரக்கூடல் வாயிலாய் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. காத்திரமான உடல்மொழி எழுத்துகளால் அறியப்பட்டிருந்தாலும் பழகுதற்கு எவ்வித ஆர்ப்பாட்டங்களுமற்ற மிகவும் எளிய பெண்மணி.. சிநேக சுபாவமும் சிறந்த சொல்லாளுமையும் கொண்ட அவரோடு அளவளாவ அழகியதொரு வாய்ப்பினை உருவாக்கிய உயர்திணை அமைப்பின் செயற்பாட்டாளர் தோழி மணிமேகலாவுக்கும் அவருக்கு உறுதுணையாய் இருந்த நட்புகளுக்கும் மனமார்ந்த நன்றி. கடந்துவந்த பாதைகளின் கரடுமுரடுகளால் மனதாற்சுமந்த வடுக்களையும், வடுக்களை எழுத்தால் வடித்த திறனையும்...சுயம் தேடி அலைந்து சோர்வுற்ற காலத்து சோதனைகளையும், இறுதியாய் தன் அடையாளம் கண்டறிந்த  சாதுர்யத்தையும் சாதனைத்திறனையும் அவர் பகிர்ந்த அனுபவக்கோவைகளினூடே அறிய இயன்றது. அன்றைய சந்திப்பின் ஆவணமாய் சில நிழற்படங்கள்… இரண்டாவது படத்தில் அவர் கையிலிருப்பது என்னுடைய 'என்றாவது ஒருநாள்' புத்தகம். :)))






(இறுதியிரு படங்களுக்காய் உயர்திணை தளத்துக்கு என் நன்றி)

20 comments:

  1. அனைத்தையும் பொறுமையாய்ப் படித்து மகிழ்ந்தேன்.

    நான்குமே மகிழ்வும் நெகிழ்வுமாய்தான் உள்ளன.

    சுண்டெலியும் எறும்பும் மிகவும் சூப்பராக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகைக்கும் அனைத்தையும் பொறுமையாய் வாசித்து மகிழ்ந்தமைக்கும் மிகவும் நன்றி கோபு சார். சுண்டெலியும் எறும்பும் பாடல் உங்களுக்கும் பிடித்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. :)))

      Delete
  2. கல்லணையில் ஒரு பெண்ணின் சிலையைச் சுற்றி சில ஆண்கள் நின்றுகொண்டு படமெடுத்துக் கொண்டிருந்த காட்சியை, சிறுமியாய் இருந்தபோதே தாங்கள் கவிதையாய் வடித்துள்ளதும், அந்தக் கவிதை வரிகள் மிகவும் பொருத்தமாக இருப்பதும், என்னை மிகவும் கவர்ந்தன.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. அக்காட்சி அப்போதே எனக்குள் சிறுகோபத்தை உண்டாக்கியது. அதைத்தான் கவிதை என்ற பெயரில் அப்பெண்ணுக்கு உரைக்கும் புத்திமதி போல சொல்லியிருக்கிறேன்.

      Delete
  3. //ஏக்கத்தோடு விட்டுவந்த என் நோட்டுப்புத்தகத்தின் எழுதிய பக்கங்களை மட்டும் கிழித்துத் தன் பெட்டியில் வைத்து எனக்குத் தெரியாமலேயே எடுத்துவந்து என்னிடம் கணவர் சேர்ப்பித்தபோது நெகிழ்ந்துருகிப் போனது நெஞ்சு.//

    படிப்போர் நெஞ்சையும் நெகிழ்ந்துருகச் செய்யும் செயல் அல்லவா இது ! :)

    //இனிதே துவங்கியது மூன்றாவது இன்னிங்ஸ். //

    சூப்பரோ சூப்பர் ! வாழ்த்துகள். :)

    //ஒருவகையில் நான் அதிர்ஷ்டக்காரி என்றுதான் சொல்லவேண்டும்.//

    எல்லா வகையிலும் தாங்கள் அதிர்ஷ்டக்காரி மட்டுமே !

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html
    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html
    http://gopu1949.blogspot.in/2014/11/part-3-of-4.html

    மேலும் மேலும் தங்களுக்கு பல்வேறு வெற்றிகள் கிடைக்கட்டும். மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் தொடர் பின்னூட்டங்களுக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி கோபு சார். என்னுடைய திறமையை வெளிக்கொணர உதவிய உங்களை நன்றியுடன் இன்றும் நினைத்துக் கொள்கிறேன். சுட்டிகள் வழியே மீண்டுமொரு முறை அன்றைய மலரும் நினைவுகளில் மூழ்கிவந்தேன். தங்கள் அன்புக்கு மிகவும் நன்றி கோபு சார்.

      Delete
  4. அருமையான பதிவு.
    தினமலர் பட்டத்தில் சிறுவர் பாடல் இடபெற்றதற்கு வாழ்த்துக்கள்.
    உங்களுடைய புகைப்படங்கள் எல்லோரால் விரும்பபடுவது உங்கள் திறமைக்கு சான்று.
    மேலும் மேலும் மகிழ்வுகள் தொடரட்டும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஊக்கம் தரும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கோமதி மேடம்.

      Delete
  5. விளையும் பயிர் முளையிலேயே தெரியும்
    என்கிற பழமொழியை நினைவுறுத்திப் போகிறது
    தங்கள் பதிவு.

    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும் ரமணி சார்.

      Delete
  6. மேலும் பல சிகரங்களைத் தொட வாழ்த்துக்கள்!
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் செந்தில்.

      Delete
  7. மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் தனபாலன்.

      Delete
  8. தொடர்ந்து சாதனைகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி ஐயா.

      Delete
  9. பல துறைகளில் சாதனை புரிவதற்குப் பாராட்டு ; மேன்ன்மேலும் உயர வாழ்த்து .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி.

      Delete
  10. பாட்டெழுதுவது ஒரு பாடா பாட்டா என்று என் பேரன் ஒருமுறை கேட்டான் இளவயது முயற்சிகள் எப்போதும் மகிழ்ச்சிதரும் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஐயா.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.