26 January 2016

மானடியன்ன.. மயிலடியன்ன…


அவசரத்தில் மானாட.. மயிலாட என்று வாசித்திருந்தால் திருத்திக் கொள்ளுங்கள்.. மானடி பற்றியும் மயிலடி பற்றியும்தான் இங்கு நாம் பார்க்கவிருக்கிறோம்.

மானின் குளம்பினைப் போன்று பிளவுபட்டத் தோற்றங்கொண்ட இலைகளைக் கொண்ட அடும்பங்கொடியில் மலர்ந்திருக்கும் பூக்களைப் பார்த்தால் குதிரையின் கழுத்துமணிகளைப் போன்று இருக்கிறது. ஒளிபொருந்திய அம்மலர்களைச்சூடியிருக்கும் பெண்கள் கடற்கரையில் மணல்வீடுகட்டி விளையாடுவர். பறவைகள் அங்கு பெரிதாய் ஒலியெழுப்பிக் கொண்டிருக்கும். அப்படிப்பட்டப் பரந்தக் கடற்கரைக்கு உரிய தலைவனை நான் எந்நேரமும் நினைந்துகொண்டிருப்பதால்தான் உறக்கமிழந்து தவிக்கின்றன என் கண்கள். அவனை இனி நினைக்கமாட்டேன்.. ஆதலால்.. என் கண்களே… உறங்குங்கள் என்கிறாள் ஒரு தலைவி. ஓயாமல் தலைவனை எண்ணியபடி துயிலாதிருக்கும் தலைவியை சற்றே துயிலுமாறு வற்புறுத்தும் தோழிக்கு அவள் அளிக்கும் பதில் இது.

மானடி யன்ன கவட்டிலை யடும்பின்    
தார்மணி யன்ன வொண்பூக் கொழுதி    
ஒண்டொடி மகளிர் வண்ட லயரும்    
புள்ளிமிழ் பெருங்கடற் சேர்ப்பனை     
உள்ளேன் றோழி படீஇயரென் கண்ணே

(நம்பி குட்டுவன்குறுந்தொகை 243)

இந்தப் பாடலில் அடும்பின் இலைக்கும் பூவுக்கும் காட்டப்பட்டிருக்கும் உவமைகள்தாம் என்னவொரு அழகு. அடம்பன் கொடியைப் பலரும் பார்த்திருக்கக்கூடும். இது கடற்கரையோரங்களில் மணற்பாங்கான பகுதிகளில் வெகுபரவலாய்ப் படர்ந்து காணப்படும். பூத்திருக்கும் நாட்களில் கத்தரிநிற மலர்க்கூட்டம் கண்களுக்கு வெகு அழகு. அதனால்தான் அடம்பன்கொடியும் திரண்டால் மிடுக்கு என்கிறது ஒரு பழமொழி.




இக்கொடி அடும்பு என்ற பெயரில் சங்க இலக்கியங்களில் நெய்தல் திணைப் பாடல்களில் இடம்பெற்றுள்ளது. இதன் இலை ஆட்டின் பிளவுபட்டக் குளம்பின் அடித்தடத்தைப் போலிருப்பதால் ஆங்கிலத்தில்  goat’s foot என்று குறிப்பிடப்படுகிறது. சங்க கால புலவர் ஒருவருக்கு இது மானின் பிளவு பட்ட குளம்பையொத்து இருப்பதாகத் தோன்றுகிறது. இப்போது ஆடுகளை இயல்புவாழ்க்கையில் எளிதாகப் பார்க்கமுடிவது போல் இயற்கையோடு இயைந்துவாழ்ந்த அந்நாளில் மான்களையும் மிக எளிதாகப் பார்க்கமுடிந்திருக்கிறதுபோலும். அதனால் தன் பாடலில் அடும்பிலைக்கு உவமையாக மானின் காலடியைக் குறிப்பிடுகிறார். அது மட்டுமா?



அடும்பின் புனல் வடிவப் பூக்களைப் பார்க்கும்போது அவருக்கு என்ன தோன்றுகிறதாம்? குதிரையின் கழுத்தில் கட்டியிருக்கும் மணியைப் போல் இருக்கிறதாம். என்ன அழகான பொருத்தமான உவமைகள்.

மானடி பார்த்தோம். அடுத்து மயிலடி பற்றி சங்க இலக்கியப்பாடல் சொல்வதென்ன?

கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே-
எம் இல் அயலது ஏழில் உம்பர்,
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே 

(கொல்லன் அழிசி – குறுந்தொகை 138)

முந்தைய இரவு, தலைவனின் வருகையை எதிர்பார்த்து தலைவியும் தோழியும் உறங்காமல் காத்திருந்தும் தலைவன் வரவில்லை. மறுநாள் தோழி தலைவனை சந்திக்கிறாள். நான் வந்தேன் ஆனால் நீங்கள் உறங்கிவிட்டீர்கள் என்று அவன் சொல்வதற்கு இடந்தராமல் தோழி சொல்கிறாள், “இந்தப் பெரிய ஊரே தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாலும் நாங்கள் நேற்றிரவு உறங்கவில்லை. எங்களுடைய வீட்டிற்கு அருகிலிருக்கும் ஏழில்குன்றின் மேலுள்ள, மயிலின் காலடியைப் போன்ற இலைகளைக் கொண்ட கரிய பூங்கொத்தை உடைய நொச்சியின் மெல்லிய காம்புகள் நீலமணி போன்ற மலர்களை உதிர்க்கும் ஓசை கூட எங்களுக்குக் கேட்டது. நீ வந்திருந்தால் எங்களுக்கு எப்படி தெரியாமல் போயிருக்கும் “ என்று அவன் வரவில்லை என்பதை உறுதிபடக் குறிப்பிடுகிறாள்.




மேலும் சில காட்டுகள்..
மயிலடி யன்ன மாக்குர னொச்சியும்
(நற்றிணை 115)
மயிலடி யிலைய மாக்குர னொச்சி
(நற்றிணை – 305 – கயமனார்)

இந்தப் புலவர்களுக்கு நொச்சியிலையைப் பார்த்தால் மயிலின் காலடி நினைவுக்கு வருகிறது என்றால் இன்னொரு புலவருக்கு மயிலின் காலடியைப் பார்த்தால் நொச்சியிலை நினைவுக்கு வருகிறதாம்.

நொச்சிப்பா சிலையன்ன பைந்தாண் மஞ்ஞை 
(திருவிளையாடற்புராணம் -417 –பரஞ்சோதி முனிவர்)
(நொச்சியின் பசுமையான இலைகளைப் போன்ற பசிய கால்களை உடைய மயில்)

நொச்சியின் இலையும் மயிலின் காலடியும் ஒன்றுக்கொன்று உவமையாகக் காட்டப்படுவது ரசிக்கவைக்கிறது அல்லவா? எந்த அளவுக்கு இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கூர்ந்து கவனித்திருந்தால் இவற்றைப் போன்ற இயல்பான.. வெகு பொருத்தமான உவமைகளைத் தங்கள் பாடல்களில் ஏற்றிப் பாடியிருக்க முடியும்? 


&&&&&&&&&&&
(படங்கள் உதவி - இணையம்)

13 January 2016

தமிழர் வளர்த்த ஆடற்கலைகள் - நூலறிமுகம்





நான் சமீபத்தில் வாசித்த, தமிழர் வளர்த்த ஆடற்கலைகள் என்ற நூலை இங்கு அறிமுகம் செய்ய விரும்புகிறேன். இந்நூலின் முதல் பதிப்பு 1969-இலும் இரண்டாம் பதிப்பு 2014 -இலும் வெளியாகியுள்ளது. நூலாசிரியர் நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் அவர்கள். அவர் எழுதியுள்ள பிற நூல்கள்  காலந்தோறும் நாட்டியக்கலை (1979), இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு (1985), நாட்டியக்கடலில் புதிய அலைகள் (1988) ஆகியவை.

திருமதி கார்த்திகா கணேசர் அவர்கள் சிறுமியாயிருந்த காலத்திலிருந்தே நாட்டியத்தின்பால் ஈடுபாடு கொண்டு முதலில் இயல், இசை வாருதி ஸ்ரீ வீரமணி ஐயர் அவர்களிடமும் பின்னர் குருகுல வாசம் முறையில் பரதநாட்டியக் கலையில் பெருவிருட்சம் போன்று மிளிர்ந்த பத்மஸ்ரீ வழுவூர் இராமையா பிள்ளை அவர்களிடம் அவருடைய வீட்டிலேயே தங்கியும் நாட்டியம் பயின்றுள்ளார்.

வெகுஜன மக்களுக்கு பழமை மரபின் மேலிருக்கும் ஈடுபாடு குறையக் குறைய… புதுமையின் நவீனத்துவம் மீது மோகம் அதிகரிக்க அதிகரிக்க… மரபு சார்ந்த எந்தக் கலையும் நாளாவட்டத்தில் அழிந்தேபோகும் சாத்தியம் உண்டு. உயரிய கலைகள் அங்ஙனம் வீணே அழிந்துவிடாமல் வழிவழியாய்த் தொடரவேண்டுமானால் காலத்துக்கேற்பத் தன்னை தகவமைத்துக்கொள்ளுதல் அவசியம் என்பதும், மக்களின் நடப்பு வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகவும் சமகாலப் பிரச்சனைகளைப் பேசுவதாகவும் அக்கலைகள் மாறவேண்டும் என்பதும் நூலாசிரியரின் கருத்து. தக்கன பிழைக்கும் என்பது ஜீவராசிகளுக்கு மட்டுமல்ல… ஜீவனுள்ள கலைகளுக்கும் பொருந்துமல்லவா?. 

ஆடற்கலையைப் பொறுத்தவரையில் அது மக்கள் மத்தியில் வாழவேண்டுமெனில் அதன் கருப்பொருளானது… பொதுமக்களின் சமகால வாழ்க்கையையும் இன்ப துன்பங்களையும் மையமாய்க்கொண்டு அமைவதோடு அடித்தட்டு மக்களையும் சென்றடையும் வண்ணம் எளிமையாக இருத்தல் வேண்டும். கலைஞர்கள், இசை வல்லுநர்கள், ஆடற்கலைஞர்கள் ஒன்றுபட்டால் கிராமியக் கூத்துக்காட்டும் பாதையில் நாம் சென்று மக்களின் கவன ஈர்ப்பைப் பெற்றிடமுடியும் என்பது கார்த்திகா கணேசர் அவர்களின் உறுதியான நம்பிக்கை.

இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழிலக்கியத்தில் நாடகத்தமிழ் என்பது ஆடற்கலையையே குறிக்கும். இந்த ஆடற்கலை பற்றி பண்டைக்காலத்தில் பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன என்பதையும், அவை பரதம், அகத்தியம், முறுவல், சயந்தம், குணநூல், இசை நுணுக்கம், இந்திர காவியம், பஞ்சமரபு, பரத சேனாபதீயம், மதிவாணர் நாடகத்தமிழ் போன்ற நூல்கள் எனவும் இந்நூல் வாயிலாக அறியமுடிகிறது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நாட்டிய சாஸ்திர நூல்கள் பலவும் அழிந்துபோய்விட்டன என்பதை அறியும்போது… தமிழின் அரிய பொக்கிஷங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டோமே என்று ஆற்றாமை எழுவது உண்மை.

இந்திரவிழாவில் மாதவி ஆடியதாக பதினோரு வகையான நாட்டியங்களை  சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. அவையெல்லாம் என்னென்னவென்று தெரியுமா? இதோ கார்த்திகா கணேசர் பட்டியலிடுகிறார்..

  • பரமசிவன் திரிபுரத்தை எரித்தபின் சுடுகாட்டில் பார்வதி அருகில் நிற்க, கைகொட்டிக்கொண்டு ஆடிய ஆனந்த நடனமான  கொடுகொட்டி.

  • பிரம்மாவின் முன் வெண்ணீறணிந்து பரமசிவன் ஆடிய இன்னொருவகை ஆடலான  பாண்டுரங்கம்.

  • கம்சனைக் கொல்லும் பொருட்டு கம்சன் அனுப்பிய யானையின் தந்தங்களை ஒடிப்பதற்காக அதன் எதிரில் நின்று கண்ணன் ஆடிய நடனமான அல்லிக்கூத்து

  • வாணாசுரனுடன் மல்யுத்தம் செய்து அவனை வென்ற களிப்பில் கண்ணன் ஆடிய நடனமான  மல்லாடல்

  • கடல் மத்தியில் நின்ற சூரனுடன் பொருதுமுன் கடலையே ஆடலரங்காகக் கொண்டு முருகனால் ஆடப்பட்டதான துடிக்கூத்து

  • போரில் தோல்வியுற்ற அசுரர்களின் முன்பு, குடையைத் திரையாகக் கொண்டு முருகன் ஆடியதான குடைக்கூத்து

  • வாணாசுரன் அநிருத்தனைச் சிறை கொண்டபோது திருமால் வீதிகளிலே குடத்தை வைத்துக்கொண்டு ஆடிய குடக்கூத்து

  • மன்மதன் பெண்ணுருவில் நின்றாடிய பேடிக்கூத்து

  • அசுரர்களின் கொடுமைகளைக் கண்டு சகியாத துர்க்கை சினங்கொண்டு மரக்கால் மீது நின்றாடிய  மரக்கால் கூத்து

  • இந்திராணி ஆடிய கடையம் என்னும் ஒருவகைக் கூத்து

  • அசுரரின் வெம்மையான போர்க்கோலம் நீங்க செந்நிற உடையில் திருமகள் வடிவில் நின்றாடிய பாவைக்கூத்து

 இவைதாம் அந்த பதினொரு வகை நாட்டியங்கள்.

சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியார் ‘ஆடல்’ என்பது தேசி, வடுகு, சிங்களம் என்று மூவகைப்படும் என்று குறிப்பிட்டிருப்பதை ஆதாரம் காட்டி சிங்களத்திலும் பரதம் சார்ந்த ஆடல்முறையொன்று அந்நாளில் சிறப்புற்று இருந்திருப்பதை நூலாசிரியர் குறிப்பிட்டு சிலாகிக்கிறார். அத்துடன் உலகப் புகழ் பெற்ற கண்டி நடனமும் நாட்டிய சாஸ்திரத்தில் கூறப்படும் தாண்டவ வகைகளுடன் நெருங்கிய தொடர்புடையதே என்கிறார். பரதம், பண்டைக்கூத்து இவற்றோடு வடமோடி, தென்மோடி போன்ற ஈழத்தின் இருபெரும் கூத்துகளையும் குறிப்பிடுவதோடு ஈழத்தில் பரதத்தின் நிலையில் ஏற்பட்ட மாற்றங்களையும் வரலாற்றின் அடிப்படையில் விவரிக்கிறார்.

பரதத்தைப் பொறுத்தவரை அது தமிழ்நாட்டில் ஆடப்பட்டு வந்த தொன்மையையும் சைவ சமண சித்தாந்தங்களின் நுழைவால் சமூகத்தில் மக்கள் மனங்களில் நிகழ்ந்த மாற்றங்களையும், அம்மாற்றங்களால் பரதம் பொதுமக்களிடமிருந்து ஒதுக்கப்பட்டு பொதுமகளிரை அடைந்த தன்மையையும், தேவதாசிகளின் அயரா அர்ப்பணிப்பால் பரதத்தின் தொடர்ச்சி அறாமல் தலைமுறைகளைத் தாண்டி எவ்வாறு மறுபடியும் தலையெடுத்துள்ளது என்பதையும் தெள்ளந்தெளிவாகப் பகிர்ந்துள்ளார்.

பரத சாஸ்திரத்தில் காணப்படும் 64 ஆம் கரணமாகிய லதா திலகம்  என்பது என்ன தெரியுமா? ஒரு காலை உயர்த்தி, கால்விரலால் நெற்றியில் திலகம் இடுவதாம். எவ்வளவு கடினமான ஒரு கரணம். நடராஜனின் ஊர்த்துவத் தாண்டவ நிலையை இக்கரணத்தோடு ஒப்பிடுகிறார் நூலாசிரியர்.

சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிதம்பரம் கோவிலின் கோபுர வாயில்களில் நாட்டிய சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள நூற்றெட்டு வகை கரண நிலைகளையும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் விமானத்தின் கீழ் 81 கரண நிலைகளையும் கொண்ட சிற்பங்களைக் காணமுடியும் என்றும் குறிப்பிடுகிறார்.

பண்டைக்காலத்தில் இருந்த தேவதாசி முறையைப் பற்றி விரிவாக விவரிக்குமிடத்து… தேவதாசிகள் கற்றுவைத்திருக்க வேண்டிய கலைகள், அவர்களுடைய கடமைகள், அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள், சமூகத்தில் அவர்களுக்கு இருந்த மரியாதை என்று பலவற்றையும் பேசுகிறது இந்நூல். ஆடற்கலையின் முக்கிய வடிவமான பரதத்த்தை ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை அழியாமல் வளர்த்து வந்தவர்கள் தேவதாசிகளே என்கிறார் கார்த்திகா கணேசர்.

தாசிகள் பற்றி அவர் குறிப்பிடுபவற்றுள்ளிருந்து சில வரிகள்…

\\ தாசி என்பவள் என்றுமே விதவையாவதில்லை. இவளின் தாலி மிகவும் புனிதமானது. அதிர்ஷ்டமுடையதெனவும் கொள்வார்கள். இதனால் ஏனைய குலப்பெண்களின் திருமணத்துக்கு வேண்டிய தாலிச்சரட்டை தாசி ஒருத்தியிடம் கொடுப்பார்கள். அவளே வேண்டிய தாலிக்கயிற்றைத் தயாரித்து தனது கழுத்து மணியிலிருந்து ஒன்றை இதில் சேர்த்து தாலி கோர்த்துக் கொடுப்பாள். இவ்வாறு பெற்ற தாலி மிகவும் அதிர்ஷ்டம் உடையதாகக் கொள்ளப்படும். திருமண ஊர்வலத்தின்போது தாசியே முன்னுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவாள்.

தாசிப்பெண் இறந்தவுடன், கோவில் விக்கிரகத்தினின்றும் அகற்றிய தூய சீலையினால் அவளின் உடல் போர்க்கப்படும். அவள் பணிபுரியும் கோவிலில் இருந்து மலர்கள் வரவழைக்கப்பட்டு உடலுக்கு சாத்தப்படும். பிரேதம் அகற்றும் வரை அன்று கோவிலில் பூசை நடைபெறாது. கோவில் தெய்வமே அவளின் நாயகனாக கொள்ளப்படுவதால் அன்று கோவிலுக்கும் தெய்வத்திற்கும் துக்கமாகக் கொள்ளப்படும். மேலும் கோவிலில் இருந்தே கொள்ளி கொண்டுவரப்பட்டு அவளுக்குத் தீ மூட்டப்படும்.\\

பரதத்தின் கூறுகளான கரணங்கள், அடவுகள், அபிநயங்கள், முத்திரைகள் போன்றவற்றை விரிவாகவும் பாமரர்க்கும் எளிதில் புரியும்படியும் எழுதப்பட்டிருப்பது நூலின் சிறப்பு. பரதப்பாடல்களின் சிறப்பு பற்றிச் சொல்லும்போது “பரதத்தில் நேரடியாக ஈடுபாடற்றவர்களும் பாடல்களின் இலக்கியச்சுவை கருதி இரசிக்க விரும்புவர்” என்று குறிப்பிடும் கார்த்திகா அவர்கள் உதாரணப் பாடல்களையும் தந்து ரசிக்கவைக்கிறார்.

சதுரக்கை இரண்டு கையில் தருமிகு நுனியுங் கூட்டி
அதனில் தர்ச் சனிகள் இரண்டும் அங்குட்டம் இரண்டும் நீட்டில்
இது கட்டுவக்கை யென்றே இயம்பினர், வினியகங்கேள்,
மெதுவுறு கட்டிலுக்கே விளம்பினர் பரதத்தோரே.

இரண்டு சதுரக் கைகளின் நுனிகளைக் கூட்டி, அவற்றில் சுட்டு விரல்களையும் கட்டை விரல்களையும் நீட்டல் இம்முத்திரை எனவும் இது கட்டில் அல்லது விசிப்பலகையைக் குறிக்கும் எனவும் பாடல் கூறுகிறது.

இவற்றைப்போல ஏராளமான சுவாரசியமான நாட்டியத் தகவல்களை அறியத்தருகிறது இந்நூல். நாட்டியம் பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர்களும் கூட இந்நூலை ரசித்து வாசிக்கக்கூடிய எளிமையான எழுத்து. தமிழர் வளர்த்த ஆடற்கலைகளைப் பற்றி மட்டுமல்லாது நாட்டியக்கலை தொடர்பான சிற்பக்கலை இசை போன்ற பல்வேறுபட்ட களங்களுடனுமான நாட்டியக்கலையின் பிணைப்பையும்  சிறப்பம்சங்களையும் இந்நூல் வாயிலாய் அறிந்துகொள்ளமுடிகிறது.

ஆடற்கலை மக்கள் மத்தியில் பரவத்தக்க வடிவங்களில் சமுதாயப் பணியை நோக்காகக் கொண்டு செல்லும்போது விமர்சனங்களும் மக்களிடையே தோன்றும். இதனால் ஆடற்கலை மேலும் மேலும் பரிணமித்துச் சிறப்புற்று விளங்கும் என்று நூலை முடிக்கும் கார்த்திகா கணேசர் இலங்கையிலும் சென்னையிலும் ஆஸ்திரேலியாவிலும் பல நாட்டியப் பள்ளிகளை நிறுவி பல நாட்டிய நாடகங்களைத் தயாரித்தவர், இப்போதும் தயாரித்துக்கொண்டிருப்பவர், பல நர்த்தகிகளை உருவாக்கியவர்… இப்போதும் உருவாக்கிக் கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நூல் பெயர் – தமிழர் வளர்த்த ஆடற்கலைகள்
ஆசிரியர் – நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்
பதிப்பகம் – ஞானம் பதிப்பகம், இலங்கை
பக்கங்கள் - 122
விலை – இலங்கை ரூ.400/- 



11 January 2016

பயணங்கள் முடிவதில்லை - தொடர்பதிவு





பயணங்கள் முடிவதில்லை என்னும் தொடர்பயணத்துக்கு என்னை அழைத்திருக்கும் தங்கை மைதிலிக்கு என் அன்பான நன்றி. சமீப காலமாக எதையும் எழுதவோ வாசிக்கவோ ஆர்வமின்றி சுணங்கியிருக்கும் மனத்தை உசுப்பிவிடும் சிறு உந்துதலுக்காய் கூடுதல் நன்றி. நானொரு பயணப்பிரியை. ஆனால் என் அப்பாவுக்கும், கணவருக்கும் பயணங்களில் அவ்வளவாக விருப்பமில்லை என்பதால் பயண அனுபவங்கள் எனக்கு மிகவும் குறைவே. இருப்பினும் கிடைக்கும் சிறு சிறு பயணப்பொழுதுகளையும் ரசிப்பதில் நான் குறைவைப்பதில்லை. அவசரங்களும் அழுத்தங்களும் நிறைந்த இயந்திர வாழ்க்கையில் அடுத்தத் தெருவுக்கு செல்லும் சிறுநடைப்பயணமோ.. அரைமணிநேரக் குறும்பயணமோ கூட மனத்துக்கு ஆசுவாசமளிக்கும் மந்திரத்தை தன்னகத்தேக் கொண்டிருக்கும் என்பது நான் அனுபவபூர்வமாய்க் கண்டறிந்த உண்மை.  சரி. இப்போது கேள்விகளுக்கு வருகிறேன். 

1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?

என்னுடைய அப்பா தென்னக ரயில்வே பணிமனையின் ஊழியர் என்பதால் எங்கள் குடும்பத்துக்கு இந்தியா முழுமைக்கும் சென்றுவர இலவச ரயில்வே பாஸ் உண்டு. அதனால் எங்கு செல்வதாக இருந்தாலும் ரயில்தான். பிறந்ததிலிருந்தே ரயில் பயணம் செய்துவருவதால் முதல் ரயில் பயணம் என்பது, நான் மூன்று மாதக் குழந்தையாயிருக்கும்போது நீடாமங்கலம் முதல் திருச்சி பொன்மலை வரையில் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். 

2. மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?

மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் என்னுடைய பத்தாவதுவயதில் அமைந்தது. ரயில்வே ஊழியர்களின் பிள்ளைகளுக்கான தனித்தப் பயண ஏற்பாடு அது. ரயில்வே பள்ளியின் ஆசிரியர்கள் வழிநடத்த, அண்டை மாநிலமான கேரளாவுக்கு சுற்றுலா ஏற்பாடு. தனி கம்பார்ட்மெண்ட் வசதி.

புதிய தோழமைகள், புதிய அனுபவங்கள், புதிய இடங்கள், புரியாத மொழி என இரண்டுவாரங்கள் இனிமையான பயண அனுபவம். முதன்முதலாக நீராவிப்படகில் பயணித்தபோது ஏற்பட்ட திகிலான உணர்வுசிறு சாரலாய் மழை ஆரம்பித்ததும் படகு மூழ்கிப்போய்விடுமோ என்று நினைத்ததும், வெளியில் சொல்ல பயந்து உள்ளுக்குள் அழுததும், ஒரு தீவுத்திட்டோரம் ஒதுங்கியிருந்த, உடல் உப்பிப்போன பிரேதமொன்றைப் பார்த்து எல்லோரும் பயந்தலறி வீறிட்டதும்… மலம்புழா அணைக்கட்டின் பிரமாண்டமான, பெண்ணின் நிர்வாண சிலையைப் பார்த்து வெட்கத்துடன் பெண்பிள்ளைகள் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு ஓடிப்போனதும்ஓய்வுப் பொழுதுகளில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பாட்டுப்பாடி விளையாடியதும்

தோழமையுடன் கொண்டாடிய அந்த இரண்டு வாரங்களுக்குப் பின் அனைவரும் பிரிந்துபோனோம். ஆளுக்கொரு மூலையில் மறுபடி ஐக்கியமானோம்ஆனால் பால்யத்தில் உண்டான அனுபவம் என்பதாலோ என்னவோ.. பசுமரத்தாணி போல இன்றைக்கும் மனத்தில் பசுமையாய்ப் படிந்திருக்கும் நினைவலைகள் அத்தனையும்.

3. எப்படிப்  பயணிக்கப் பிடிக்கும்?

உறவுகள் நட்புகளோடு எனில் எல்லோரும் ஜாலியாகப் பேசி, அரட்டை அடித்து, பாட்டுப்பாடி, ஒருவரை ஒருவர் கேலி செய்தபடி பயணிப்பது பிடிக்கும். தனிமை எனில் ஜன்னலோரம் அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டு வர பெரிதும் பிடிக்கும்.

4. பயணத்தில் கேட்க விரும்பும் இசை?

மனத்துக்கு இதம் தரும் பழைய பாடல்களை குறைந்த சத்தத்தில் கேட்கப் பிடிக்கும். ஆனால் ஹெட்செட்டில் கேட்கப்பிடிக்காது.

5. விருப்பமான பயண நேரம்?

பயணத்தின் ஒவ்வொரு நொடியையும் ரசிப்பதால் எந்தப் பொழுதும் எந்த நேரமும் ரசனைக்குரியதே… எனினும் பெருமழை பெய்தோய்ந்த பொழுதின் பிறகான பயணம் மிகவும் பிடிக்கும்.

6. விருப்பமான பயணத்துணை?

நம்மைப் போலவே பயணத்தை ரசிக்கும் நட்பும் உறவும்.

7. பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?

கூடுமானவரை பயணத்தின்போது புத்தகம் தொடமாட்டேன். வாசிப்பில் மனம் லயிக்காது + தலைவலியும் வரும். திரைப்படம் பார்ப்பதிலும் விருப்பம் இல்லை. வெளியில் வேடிக்கை பார்த்துவரவே பிடிக்கும். விமானப்பயணத்தின்போதும் அப்படிதான். பிள்ளைகள் கணவருடன் பேசிக்கொண்டு வருவேன். அல்லது சும்மா மற்றப் பயணிகளை வேடிக்கைப் பார்த்தபடி…

8. விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?

இலக்கு நிர்ணயிக்காது மனம் போன போக்கில் இயற்கையை ரசித்தபடி பயணிக்கும் பயணம் எதுவும்.

9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?

பிடித்தப் பாடல்கள் எல்லாமே வரிசைகட்டிக்கொண்டு பின்னணியில் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்றாலும் வாய்விட்டு முணுமுணுப்பது அரிது.

10. கனவுப் பயணம் ஏதாவது?

அப்படி எதுவும் இல்லை.. அமையும் பயண வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையை ரசனைக்குரியதாக்கிக் கொள்ளவேண்டும், அவ்வளவே.




இத்தொடரைத் தாமதமாகத் தொடர்ந்திருப்பதால், எனக்குத் தெரிந்த நட்புகள் பலரும் அழைக்கப்பட்டுவிட்டனர். இருப்பினும் தொடர் அறுந்துவிடாமலிருக்கும் பொருட்டு மூவரை இங்கே அன்புடன் அழைக்கிறேன். இவர்களும் முன்பே அழைக்கப்பட்டிருக்கலாம் எனினும் என்னுடைய அழைப்பையும் ஏற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி 



2 January 2016

பறவைகள் பலவிதம் - 5


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்து.



 என்னுடைய பறவைத்தொகுப்பு புகைப்பட ஆல்பத்தில் 
புதிதாய்ச் சேர்ந்துள்ள அழகுப்பறவைகள் சிலவற்றோடு 
அவற்றைக் குறித்த சிறு தகவல்களும்  
உங்கள் பார்வைக்கு...



அத்திப்பழப்பறவை ஆண் (austrasian figbird male)


அத்திப்பழப்பறவை பெண் (australasian figbird female)


அத்திப்பழப்பறவைக்குஞ்சு (australasian figbird juvenile)

அத்திப்பழங்களைப் பிரதான உணவாகக் கொண்டுவாழும் இப்பறவைக்கு அத்திப்பழப்பறவை என்றே பெயராகிவிட்டது. ஆலிவ் பச்சை மற்றும் அடர்சாம்பல் வண்ண உடலையும்,  கண்களைச் சுற்றியுள்ள பளீர் சிவப்புநிறத்தையும் கொண்டு ஆண்பறவைகளையும், உடலும் கண்களைச் சுற்றியப் பகுதிகளும் மங்கிய சாம்பல் வண்ணத்தில் காணப்படும் பெண்பறவைகளையும் வேறுபடுத்திக் கண்டறிதல் எளிது. இவற்றின் குரல் மிக இனிமையானது. 

வாலாட்டி - முதிராபருவம்  (willie wagtail juvenile)

Willie wagtail எனப்படும் வாலாட்டிப் பறவையினம் ஆஸ்திரேலியாவையும் சுற்றியுள்ள தீவுகளிலும் காணப்படுவது. பெரிய பறவைகளான கழுகு, காக்கை போன்றவற்றையும் தன் எல்லையிலிருந்து துரத்தியடிக்கும் வல்லமை கொண்டது. ஆஸ்திரேலியப் பூர்வகுடிகள் மத்தியில் இப்பறவை துர்சகுனத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. 


செந்தவிட்டுவண்ணக் கிளுவை - ஆண் (chestnut teal male)


செந்தவிட்டுவண்ணக் கிளுவை - பெண் (chestnut teal female)

இப்பறவையினத்தில் ஆண் பறவை chestnut எனப்படும் செந்தவிட்டுவண்ணக் கொட்டைகளின் நிறத்தில் இருப்பதால் இப்பறவையினத்துக்கு இது பொதுவான பெயர். ஆனால் பெண்பறவை சாம்பல் வண்ணத்தில் இருக்கும். அதனால் சில வேளைகளில் சாம்பல்வண்ணக் கிளுவையினம் என்று தவறாகக் கணிக்கப்படும். 


வெள்ளைக்கண் வாத்து ஆண் (White eyed or hardhead duck male)

முக்குளிக்கும் வாத்தினத்தைச் சார்ந்தது இந்த வெள்ளைக்கண் வாத்து அல்லது கடுந்தலை வாத்து. பார்ப்பதற்கு ஆண் பெண் இரண்டுமே ஒரே மாதிரி சாக்லேட் பழுப்பு நிறத்தில் காணப்பட்டாலும் கண்களின் நிறத்தைக் கொண்டு வேறுபாடு கண்டறியலாம். ஆண்பறவையின் கண்கள் பளீர் வெள்ளை நிறத்திலும் பெண் பறவையின் கண்கள் பழுப்பு நிறத்திலும் காணப்படும்.





 பசிபிக் கருப்பு வாத்து - ஆண் ( pacific black duck male)

கண்களுக்கு மைதீட்டியது போன்ற கருவரிகளைக்கொண்டு இவற்றை இனம் கண்டறியலாம். இறக்கையின் கீழே பளீர் பச்சை நிற இறகுகள் சிலவற்றைக் காணலாம். இவ்வினத்தில் ஆண்பெண் இரண்டும் ஒரே மாதிரி இருப்பதால் வேறுபாடு காண்பது அரிது. இந்த வாத்துகள் ஆஸ்திரேலியாவிலும், அக்கம்பக்கத் தீவுகளிலும், நியூசிலாந்திலும் காணப்படுகின்றன.


நீலத்தாழைக்கோழி (purple swamphen)

ஆஸ்திரேலியாவிலும் அதைச்சுற்றியுள்ள தீவுகளிலும் காணப்படும் நீலத்தாழைக்கோழியினம் இது. நீர்த்தாவரங்களோடு சிறு உயிரிகளான தவளை, நத்தை, வாத்துக்குஞ்சுகள் போன்றவற்றையும் தின்னும். மற்றப்பறவைகளின் முட்டைகளைத் திருடித் தின்பதிலும் கில்லாடி. 


ஆஸ்திரேலியப் புதர்க்கோழி (Australian brush turkey)

மற்றப் பறவைகளைப் போல கூடு கட்டி அதில் முட்டையிடும் பறவையினமல்ல இது. மண்ணையும் குப்பைக்கூளங்களையும் கொண்டு ஒரு பெரிய மண்மேட்டைக் கட்டுகிறது. நான்கு மீட்டர் விட்டமும், ஒரு மீட்டர் உயரமும் கொண்ட பெரிய மேடு. குப்பைகளையும் இலைதழைகளையும் மண்ணையும் குவித்து உருவாக்கப்படும் இம்மண்மேட்டைக் கட்டிக்கொண்டிருக்கும்போது வெகு மூர்க்கமாய் செயல்படும். 


சாம்பல்வண்ண கசாப்புக்காரப்பறவை (grey butcherbird juvenile)

இப்பறவைகளுக்கு ஏன் இப்படியொரு பெயர்? கசாப்புக்காரன் தான் வெட்டிய இறைச்சியைக் கொக்கியில் தொங்கவிட்டிருப்பதைப் போன்று தாங்கள் வேட்டையாடிய இரையை பெருமுட்களிலோ, மரக்கிளைகளிலோ.  மர இடுக்குகளிலோ தொங்கவிடுவதால் இப்பறவைகளுக்கு கசாப்புக்கார பறவைகள் (Butcher birds) என்று பெயர். இரையைத் தின்ன ஏதுவாகவோ, நிறைய இரையைச் சேமித்துவைக்கவோ, அல்லது தன் இணையைக் கவரவோ இதுபோன்று செய்கின்றன.

கரண்டிவாயன் (அ) துடுப்புவாயன் (Royal spoonbill)

Royal spoonbill எனப்படும் இந்த வகை கரண்டிவாயன்கள் ஆஸ்திரேலியாவிலும் சுற்றியுள்ள தீவுகளிலும் காணப்படுகின்றன. நீரில் நின்றபடி, அதிர்வு உணர்விகள் (vibration detectors) கொண்ட தன்னுடைய தட்டையான அலகால் நீருக்குள் துழாவி, சிற்றுயிர்களைக் கண்டறிந்து பிடித்துத் தின்கின்றன. அதனால் இரவிலும் அவற்றால் நீருக்குள் இரைதேடுவது எளிதாகிறது.  


சிரிக்கும் கூக்கபரா (Laughing kookaburra)

இப்பறவை மனிதர்கள் சிரிப்பது போல் ஒலியெழுப்பினாலும் உண்மையில் அது சிரிப்பல்ல. மற்ற பறவைகளுக்கு தன் எல்லைப்பகுதியை அறிவிக்கும் எச்சரிக்கை ஒலியே அது. கூக்கபரா மீன்குத்தியினத்தைச் சார்ந்த பறவை. உலகிலுள்ள 90 மீன்குத்தியினங்களுள் மிகப்பெரிய பறவை ஆப்பிரிக்காவின் ராட்சத மீன்குத்திப்பறவைதான் என்றாலும் உடல் எடையில் மற்ற எல்லாவற்றையும்விடப் பெரியது ஆஸ்திரேலியாவின் சிரிக்கும் கூக்கபராதான்.

பறவைகளை ரசித்தீர்களா? மற்றுமொரு பறவைத்தொகுப்போடு மீண்டும் சந்திப்போம்.