8 July 2015

அல்பைனோ (albino)


அல்பைனோ வல்லபி 


மரபணுக்கோளாறால் நிறமிகள் செயலிழந்து உருவாகும் அல்பினிசம் (albinism) என்னும் வெண் தோல்நோய் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். உலக அளவில் பதினேழாயிரம் பேர்க்கு ஒருவர் என்ற விகிதத்தில் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதை நோய் என்பதை விடவும் குறைபாடு என்பதே சரி. இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வெளிறிக் காணப்படும் மக்கள் அல்பைனோ என்று குறிப்பிடப்படுகின்றனர். 

மகாபாரதக் கதையில் வரும் பாண்டுவும் ஒரு அல்பைனோ மனிதர்தான். பாண்டு என்றால் வடமொழியில் வெளிறிய நிறமுடையவன் என்று பொருள். அவர் ஏன் அப்படி வெளிறிய நிறமுடையவராய்ப் பிறந்தார் என்பது பலரும் அறிந்த கிளைக்கதை. அந்தக் கதைகளுக்குள் நாம் இப்போது போகப்போவதில்லை. பொதுவாக அல்பைனோ பற்றிப் பார்ப்போம்.

அல்பைனோக்களுக்கு எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு என்பதால் சிறிய சிராய்ப்பும் பெரிய அளவில் பாதிப்புண்டாக்கும். தோல் புற்றுநோய், நுரையீரல் நோய் போன்ற நோய்களால் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். பார்வைக்குறைபாடு, செவிப்புலன் குறைபாடு போன்றவற்றுக்கு ஆட்படும் அவர்களுடைய வாழ்நாள் மற்றவர்களைக் காட்டிலும் மிகக் குறுகியதே.

மனிதர்களைப் போல விலங்கு, பறவைகளிலும் அல்பைனோக்கள் உண்டு. வழக்கமான நிறத்தை இழந்து வெண்ணிறத்தில் காணப்படும் அவை மிகவும் அரிதாகவே காணப்படும். வெள்ளைப்புலி, வெள்ளைமயில் எல்லாம் இப்படிப்பட்டவையே. ஒருவன் வெள்ளைக்காக்காவைப் பார்த்தேன் என்று சொன்னால் அவனை பொய்யன் என்று இகழவோ பைத்தியம் என்று இழிக்கவோ வேண்டிய அவசியமில்லை. அவன் சொல்வதிலிருக்கும் உண்மை ஏற்கப்படக்கூடியதே.

ஆஸ்திரேலியாவில் 20,000 –க்கு ஒன்று என்ற விகிதத்தில் அல்பைனோ கங்காருகள் காணப்படுகின்றன. நிறமிக்குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் தவிரவும் அல்பைனோ விலங்குகளுக்கு இன்னுமொரு பிரச்சனை உண்டு. அது எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வது. வெள்ளை வெளேரென்று இருப்பதால் எதிரியின் கண்களிடமிருந்து தப்புவதென்பது கூடுதல் சவாலான விஷயம்.

லில்லி

மேலே உள்ள படங்களில் காணப்படுவது ஒரு அல்பைனோ வல்லபி. கங்காரு இனத்தில் சிறியவை வல்லபிகள். இரண்டாண்டுகளுக்குமுன் வனவிலங்குப் பூங்கா ஒன்றில் செங்கழுத்து வல்லபிக்குப் பிறந்துள்ள இந்த அரிய வெண்வல்லபிக்குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று பொதுமக்களிடையே ஒரு சர்வே நடத்தப்பட்டது. பரிந்துரைக்கப்பட்ட பல பெயர்களுள் லில்லி என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு சூட்டப்பட்டுள்ளது.     

12 comments:

  1. உறவினர் ஒருவருக்கு புற்றுநோய் விரைவிலேயே பரவி விட்டது உண்மை...

    லில்லி அழகான பெயர்...

    ReplyDelete
    Replies
    1. வருந்தத்தக்க விஷயம். மருத்துவம் இன்னும் பல துறைகளில் முன்னேற்றம் காணவேண்டியிருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  2. கீதா,

    இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றதா ! ஒன்றிரண்டு பேரைப் பார்த்திருக்கிறேன். எழுத்துக்களைப் படிக்கவே சிரமப்படுவார்கள்.

    லில்லி அழகா இருக்கார்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சித்ரா. என் பள்ளியில் கூட ஒரு பெண் படித்தாள். மிகவும் சிரமப்படுவாள். அப்போதெல்லாம் வெண்குஷ்டம் என்று சொல்லி பலரும் அவளை ஒதுக்கிவைப்பார்கள். அப்போது ஒன்றும் தெரியவில்லை. இப்போது நினைத்தால் வருத்தமாக உள்ளது.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா.

      Delete
  3. முக்கியமான விடயங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் கச்சிதமாகவும் சொல்லி விட்டீர்கள்.சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்பது இது தான் போலும்!
    ஆனால் எனக்கு அந்த மகாபாரதத்துக் கிளைக்கதையை அறிய ஆவலாக இருக்கிறது கீதா.
    (Albinoஎன்று வேலைத்தலத்தில் எனக்கொரு நண்பர் இருக்கிறார்.)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மணிமேகலா. மகாபாரதக் கிளைக் கதையை அடுத்தமுறை சந்திக்கும்போது கட்டாயம் சொல்கிறேன்.

      அல்பைனோ என்று பெயரிருப்பது ஆச்சர்யம்தான். பாண்டு என்று தமிழில் வைப்பது போல் என்று நினைக்கிறேன்.

      Delete
  4. தெரியாத ஒருவிஷயம்! அறிந்து கொண்டேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கும் மிகவும் நன்றி சுரேஷ்.

      Delete
  5. எனக்குக் கூட பாண்டு பற்றிய கதை தெரியாது. அல்பைனோ பற்றிய தகவல்கள் எனக்குப் புதிய செய்திகள். வெள்ளைப்புலி, மயில் இவை கூட அல்பைனோ என்று இன்று தான் தெரிந்து கொண்டேன். லில்லி அழகாயிருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. பாண்டு கதை உங்களுக்குத் தெரியாது என்பது வியப்பாக உள்ளது. அக்கதையை விரைவில் சுருக்கமாக எழுதியனுப்புகிறேன் அக்கா. தங்கள் வருகைக்கும் பதிவையும் லில்லியையும் ரசித்ததற்கும் மிக்க நன்றி.

      Delete
  6. புதிய புதிய செய்திகள்.

    அறிவிற்கு விருந்தாகக் கூடியவை.

    உங்கள் பெயரோடு என் மாணவரிடத்தில் பகிர்வேன்.

    நிறமிக் குறைபாடுள்ள மாணவன் என் வகுப்பிலும் உண்டு.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பதிவை மாணவர்களோடு பகிர்வது குறித்து மிகவும் மகிழ்ச்சி. நெகிழ்வான நன்றிகள் பல தங்களுக்கு.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.