23 May 2015

ஒண்டவந்த பிடாரிகள் - 13 (முயல்கள்)




முயல்கள் சாதுவான பிராணிகள். அவற்றால் பெரிதாய் என்ன பாதகம் விளைந்துவிடும் என்றுதானே நினைக்கத்தோன்றுகிறது? ஆனால் ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் சொந்த மண்ணின் தாவரங்கள் பலவும் அழியும் நிலையில் உள்ளதற்கு முயல்கள் முக்கியக்காரணம் என்றால் வியப்பாக உள்ளதல்லவா? ஆம். முயல்களின் கொறிக்கும் குணத்தால் பல அரிய தாவரங்களின் விதைகளும் குருத்துகளும் சிதைக்கப்படுகின்றன. வம்சவிருத்தி பாதிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாய் அந்த இனமே அழிந்துபோகிறது. அப்படி அழியக்கூடிய அபாயத்திலிருக்கும் தாவர இனங்கள் ஒன்றிரண்டல்ல கிட்டத்தட்ட 121 வகை என்கிறது 2007 இல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு.


முதல் கப்பற்தொகுதியுடன் கொண்டுவரப்பட்ட வளர்ப்பு முயல்களை விடவும் வேட்டைக்கென அறிமுகப்படுத்தப்பட்ட பெருமுயல்கள்தாம் ஆஸ்திரேலிய பொருளாதாரத்தில் பெரும் சரிவை உண்டாக்குவதாக உள்ளன. 1859 இல் இருபத்து நான்கே நான்கு காட்டுமுயல்கள் விக்டோரியா மாநிலத்தில் விடப்பட்டன. அறுபது வருடங்களுக்குப் பிறகு 1920 இன் கணக்கெடுப்புப்படி ஆஸ்திரேலியாவில் அவற்றின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஆயிரம் கோடிக்கும் மேலாம். அதன்பிறகு ஒரு நூற்றாண்டு கடக்கவிருக்கும் நிலையில் இப்போது அவற்றின் எண்ணிக்கை என்னவாக இருக்குமென்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். முயல்களின் எண்ணிக்கை பெருகும் வேகத்தை கீழே உள்ள வரைபடம் மூலம் அறிந்துகொள்ளலாம். 



முயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஆகும் செலவும், முயல்களால் ஏற்படும் பொருளாதார நட்டமுமாக ஆஸ்திரேலிய அரசுக்கு ஏற்படும் இழப்பு ஆண்டுக்கு 113 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 565 கோடி ரூபாய்). நாட்டின் பல பகுதிகளிலும் மானாவாரியாய் பெருகிக்கொண்டிருந்த முயல்கள் மேலும் பரவுவதைத் தடுக்க பல யோசனைகள் பலராலும் முன்வைக்கப்பட்டது. ஏற்கனவே முயல்கள் ஏகமாய்ப் பரவிக்கிடக்கும் குவீன்ஸ்லாந்துக்கும் நியூ சௌத் வேல்ஸுக்கும் இடையில் இனியும் முயல்கள் பரவாமல் தடுக்க ஒரு பலத்த கம்பிவேலி போடப்படவேண்டும் என்று அப்போதைய (1884) எம்.எல்.ஏ ஒருவர் முன்வைத்த ஆலோசனையைக் கிண்டல் செய்து ஒரு கேலிச்சித்திரம் வரையப்பட்டது. படத்தைப் பார்த்தால் உங்களுக்கும் சிரிப்பு வருகிறதுதானே? ஆனாலும் முயல் தடுப்பு வேலி போடப்பட்டது. அதனால் முயல்கள் கட்டுப்படுத்தப்படவில்லை என்றாலும் டிங்கோ மற்றும் நரிகளின் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.



கிழக்குப் பகுதி முழுவதும் ஆக்கிரமித்த முயல்கள் மேற்கு ஆஸ்திரேலியப் பக்கம் படையெடுப்பதைத் தடுக்கவும் மேற்கு ஆஸ்திரேலியாவின் விளைநிலங்களைப் பாதுகாக்கவும் மாநிலத்தின் குறுக்கே தெற்குக் கடற்கரையிலிருந்து வடக்கு கடற்கரை வரை நீண்ட இரும்புக் கம்பிவேலி போட முடிவுசெய்யப்பட்டது. 1901 இல் தொடங்கிய அந்த வேலை முடிய ஆறு ஆண்டுகள் பிடித்தன. இன்றும் உலகிலேயே மிக நீளமான கம்பிவேலி என்ற பெருமைக்குரியது அந்த 1837 கி.மீ. நீளமுள்ள வேலி. கூடுதல் பாதுகாப்புக்காக அத்துடன் மேலும் இரண்டு கம்பிவேலிகள் கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் போடப்பட்டன.


மொத்தமாக மூன்று வேலிகளின் நீளத்தையும் கணக்கிட்டால் 3,256 கி.மீ. நீளம் வரும். நூறு வருடங்களுக்கு முன் இதற்காக செலவு செய்யப்பட்ட தொகை அப்போதைய மதிப்பில் சுமார் நான்கு கோடி ரூபாய். பணியில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள் 120 பேர்,  ஒட்டகங்கள் 350, குதிரைகள் 210, கழுதைகள் 41. இந்த வேலியை அடைத்ததோடு நிம்மதியாக இருந்துவிட முடியவில்லை. தொடர்ச்சியாய் அந்த வேலிகளைப் பராமரிப்பது பெரும் பிரச்சனையாகவே இருந்துவந்தது.



myxomatosis என்னும் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு வேலிபராமரிப்புக்கான அவசியம் அவசியமற்றுப்போயிற்று. முயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு இந்த கொடிய வைரஸ் முயல்களிடையே பரப்பப்பட்டது. வைரஸால் பாதிக்கப்பட்ட முயலைக் கடிக்கும் கொசு மற்றும் உண்ணிகள் மூலம் மற்ற முயல்களுக்கும் நோய் பரவும். பாதிக்கப்பட்ட முயல்களின் உடலில் கட்டிகள் தோன்றி கண்பார்வை இழந்து, காய்ச்சல் கண்டு இரண்டுவாரத்தில் இறந்துபோகும். ஒரேயடியாக சாகாமல் சித்திரவதைப்பட்டு சாவது எவ்வளவு கொடுமை! மனிதர்களின் சுயநலத்துக்கு இதுவும் ஒரு சான்று.



மேற்கு ஆஸ்திரேலியாவின் முயல்தடுப்பு வேலியையும் கடத்தப்பட்ட மூன்று சிறுமிகளையும் மையமாக வைத்து 2002 இல் rabbit proof fence என்றொரு திரைப்படம் வெளியானது. தாயிடமிருந்து பிரித்துக் கொண்டுசெல்லப்பட்ட மூன்று சிறுமிகள், அவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாமிலிருந்து தப்பித்து தங்கள் தாயைத் தேடிவருவதுதான் கதை. கிட்டத்தட்ட 2400 கி.மீ. தூரத்தை உணவின்றி உறக்கமின்றி பாலையிலும் குளிரிலும் மிகவும் கஷ்டப்பட்டு கிட்டத்தட்ட ஒன்பது வாரங்கள் நடையாய் நடந்து தாயை வந்தடைகின்றனர் சிறுமிகள். அவர்களுக்கு அடையாள வழிகாட்டியாய் இருப்பது இந்த முயல்தடுப்பு வேலிதான். இந்தத் திரைப்படம் 1931-இல் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முயல்தடுப்பு வேலி முயல்களைத் தடுத்ததோ இல்லையோ… ஆனால் அந்த அபலைச் சிறுமிகளுக்கு வழிகாட்டியாய் இருந்து தாயிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. 


சரி. சிறுமிகள் ஏன் கடத்தப்படவேண்டும்யார் கடத்தினார்கள்? அதைப் புரிந்துகொள்வதற்கு ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் தவிர்க்கமுடியாத பக்கமான  stolen generation பற்றிக் கொஞ்சம் தெரிந்திருக்கவேண்டும்.




Stolen generation என்பது காணாமற்போன ஒரு தலைமுறையைக் குறிக்கும் சொல். வெள்ளையருக்கும் பூர்வகுடிகளுக்கும் பிறந்த கலப்பினக் குழந்தைகளை வலுக்கட்டாயமாக தாய்மார்களிடமிருந்து பிரித்துக்கொண்டு சென்று தனியே வளர்த்து அவர்களுடைய பழக்கவழக்கங்களை, நடை உடை பாவனைகளை வெள்ளையரைப் போலவே மாற்றும் ஒரு முயற்சி ஆரம்பகால ஐரோப்பிய ஆதிக்கத்தால் மேற்கொள்ளப்பட்டதுஅக்குழந்தைகளுக்கு ஆங்கிலவழிக் கல்வி போதிக்கப்பட்டது. ஆங்கிலேய வழக்கப்படியான வாழ்க்கைமுறை பயிற்றுவிக்கப்பட்டது. அவர்களது பூர்வகுடி கலாச்சார பாரம்பரிய ஆன்மீக அடையாளங்கள் அனைத்தும் மறக்கடிக்கப்பட்டன. தாய்ச்செடியிலிருந்து ஒடித்து வேறிடத்தில் பதியனிடப்பட்ட செடிகளைப் போல கடைசிவரை தங்கள் உற்றார் பெற்றோரைக் காணாமலேயே முடிந்துபோனது அவர்களுடைய வாழ்க்கை.


ஒரு குழந்தை காணாமல் போனாலேயே பதறும் தாய்மனம். ஒரு தலைமுறையே காணாமல் போவதென்றால்…அம்மக்களின் வேதனையை என்னவென்று சொல்வது? ஆஸ்திரேலிய வரலாற்றில் கறைபடிந்த காலகட்டமாகவே அது கருதப்படுகிறது. பூர்வகுடி மக்களின் ஆழ்மனத்தில் நீறு பூத்த நெருப்பாக இன்றளவும் கனன்றுகொண்டிருக்கும் வேதனைமிகு நிகழ்வு அது.


(தொடரும்)
(படங்கள் உதவி; இணையம்)

முந்தைய பகுதி:
ஒண்டவந்த பிடாரிகள் - 12 (ஆடுகள்)

அடுத்த பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 14 (லாண்டானா, பிட்டூ & லிசியம்)

11 May 2015

ஒண்டவந்த பிடாரிகள் - 12 (ஆடுகள்)



மற்ற கால்நடைகளின் கதையைப் போன்று ஆடுகளின் கதையும் 1788 இல் முதல் கப்பல் தொகுதி வந்திறங்கியதிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. ஐரோப்பியக் குடியேறிகளின் பால் மற்றும் இறைச்சித் தேவைக்காக வெள்ளாடுகளும், ரோமத்தொழிலுக்காக அங்கோரா மற்றும் காஷ்மீரி இன ஆடுகளும் கொண்டுவரப்பட்டன.

ரோமத்தொழிலில் உலகெங்கும் அதிகரித்த போட்டியால் தொழிற்சாலைகள் சில வருடங்களில் இழுத்து மூடப்பட்டன. ஆடுகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இருப்புப்பாதை அமைப்பவர்களும் சுரங்கத்தொழில் செய்பவர்களும் பணிகளை முடித்து முகாம்களை காலிசெய்துவிட்டுப் போகும்போது அங்கிருந்த வெள்ளாடுகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இப்படியாக ஆங்காங்கு கட்டவிழ்த்து விடப்பட்ட ஆடுகள் இன்று கண்டம் முழுவதும் பரவலாகப் பெருகி உள்ளூர் தாவர உண்ணிகளுக்குப் போட்டியாக களத்தில் உள்ளன.



வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈனும் ஆடுகளின் எண்ணிக்கை மளமளவென்று பெருகி, 2010 –ன் கணக்கெடுப்புப்படி ஆஸ்திரேலியாவில் மட்டும் சுமார் முப்பது இலட்சம் இருக்கலாம் என்றும் குவீன்ஸ்லாந்தில் மட்டுமே ஐந்து இலட்சம் இருக்கலாம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அக்கம்பக்கத் தீவுகளில் இருப்பவை தனிக்கணக்கு.

ஆடுகள் தாங்கள் வாழும் பகுதிகளில் விளைச்சலுக்கும் நீர்நிலைகளுக்கும் பெரும் சேதம் உண்டாக்குவதோடு நாட்டின் சொந்த விலங்குகளான கங்காருகளுக்கு உணவுப்போட்டியாகவும் களத்தில் இருப்பதால் குவீன்ஸ்லாந்தில் இவை விவசாயத்துக்கும் சுற்றுப்புறச்சூழலுக்கும் கேடுவிளைவிக்கும் உயிரினம் (agricultural and environment pest) என்று வரையறுக்கப்பட்டுள்ளன. இவை பண்ணையாடுகளின் மேய்ச்சல் நிலங்களையும் அபகரித்துக்கொண்டுவிடுவதாலும் இவற்றிடமிருந்து பண்ணையாடுகளுக்கு கோமாரி நோய், குளம்புநோய் போன்ற நோய்கள் பரவுவதாலும் பண்ணை உரிமையாளர்கள் பெருத்த நஷ்டம் அடைகின்றனர்.



காட்டாடுகள் தங்கள் உறைவிடங்களாய் பாறையிடுக்குகளையும் மலைப்பொந்துகளையும் தேர்ந்தெடுப்பதால் பாறைவாழ் வல்லபிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டு போவதாக அறியப்பட்டுள்ளது. இயல்பிலேயே கூச்ச சுபாவம் கொண்ட பாறைவாழ் வல்லபிகள் உணவும் உறைவிடமும் அற்று வாழ வழியின்றி அழிந்துபோகின்றன. பல அரிய தாவரங்களின் இளஞ்செடிகளையும் துளிர்களையும் ஆடுகள் தின்றுவிடுவதால் அவற்றின் இனப்பெருக்க சங்கிலி தொடர்பறுந்து போயிருக்கிறது பல பகுதிகளில். சில வகை மரங்கள் தங்கள் அடுத்த சந்ததியைக் காணாமலேயே மடிந்துவிடுகின்றன.

ஆஸ்திரேலிய நிலப்பரப்பு தவிரவும் அதைச் சுற்றியுள்ள பல தீவுகளிலும் ஆடுகள் காணப்படுகின்றன. பக்கமாய் இருக்கும் தீவுகளுக்கு ஆடுகள் நன்னீர்தேடி நீந்தியே சென்றுவிடுகின்றனவாம். சில தீவுகளில் பெரும் முயற்சி எடுக்கப்பட்டு ஆடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் சில தீவுகளில் வாழும் பூர்வீக மக்களால் அவர்களுடைய வேட்டை விளையாட்டுக்காகவும் இறைச்சிக்காவும் விட்டுவைக்கப்பட்டுள்ளன.



ஒருபக்கம் காட்டாடுகளால் ஏற்படும் சேத மதிப்பு ஆண்டுக்கு இருபத்தைந்து மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 125 கோடி ரூபாய்) என்றாலும் இன்னொரு பக்கம் அவற்றை உயிருடனோ இறைச்சியாகவோ ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு  கிடைக்கும் ஆண்டுவருமானம் சுமார் இருபத்தொன்பது மில்லியன் டாலர்கள் (சுமார் 145 கோடி ரூபாய்) என்பதை மறுக்கமுடியாது. இறைச்சி தவிர ரோமத்தால் கிடைக்கும் உபரி வருமானம் கூடுதல் வரவு.

இந்த காட்டாடுகளால் சில நன்மைகளும் உண்டு. களைத்தாவரங்கள் பலவற்றை செலவில்லாமல் கட்டுப்படுத்த ஆடுகள் உதவுகின்றன. குறிப்பிட்ட சில களைத்தாவரங்கள் ஆடுகள் விரும்பியுண்ணும் உணவாக இருப்பது சிறப்பு.

வருடாவருடம் ஆடுகளின் எண்ணிக்கையைக் குறைக்குமுகமாக அவற்றில் முப்பது சதவீதம் வேட்டையாடப்படுகின்றன. ஆடுகளைக் கொல்வதற்கு பல உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. இனப்பெருக்க காலம் தவிர மற்ற காலங்களில் கிடா ஆடுகள் தனி மந்தையாகவும் கிடேரி ஆடுகள் தனி மந்தையாகவும் பிரிந்து வாழ்கின்றன. அவற்றின் இருப்பிடத்தை அறிந்து கொண்டு தக்க தருணத்தில் வேட்டை நடத்தப்படுகிறது.



குதிரைகளில் சவாரி செய்தபடி ஆடுகளை விரட்டி ஒன்றுதிரட்டி பட்டியில் அடைத்து பின்னர் கசாப்பு இடத்துக்கு அனுப்புகிறார்கள். கசாப்புக்குத் தேவைப்படாத காலத்தில் ஹெலிகாப்டர்கள் மூலம் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறார்கள். பொதுவாக ஆடுகள் நீர்நிலைகளின் அருகிலேயேதான் வாழும் என்பதால் கோடைக்காலங்களில் எளிதாக அவற்றின் இருப்பிடத்தை அறிந்துகொள்ள முடியும். மற்றக் காலங்களில் அவற்றின் இருப்பிடத்தை அறிய ‘judas goat’ என்ற யுத்தி பயன்படுத்தப்படுகிறது. 

பொதுவாக யூதாஸ் ஆடு என்பது காட்டு ஆடுகளை வழிநடத்திக் கசாப்புத்தளத்துக்கு அழைத்துக்கொண்டு வருவதற்கெனவே பழக்கப் படுத்தப்படும் ஆடு. ஆனால் ஆஸ்திரேலியாவின் யூதாஸ் ஆடு அப்படியல்ல. மந்தையிலிருந்து ஒரு ஆடு மட்டும் பிடிக்கப்பட்டு அதன் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு மீண்டும் மந்தையோடு சேர்த்துவிடப்படுகிறது. அதன் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன. வேட்டைக்காலத்தில் சரியாக ஆட்டுமந்தையின் இருப்பிடம் அறியப்பட்டு வேட்டை நடத்தப்படுகிறது.

வெள்ளாட்டுக் கூட்டத்தில் ஒரு கருப்பாடு! முப்பது வெள்ளிக்காசுகளுக்காக முத்தமிட்டு ஏசுவைக் காட்டிக்கொடுத்தார் யூதாஸ். ஆனால் இந்த யூதாஸ் ஆடோ தன்னையறியாமலேயே தன் கூட்டத்தையும் காட்டிக்கொடுத்து தானும் பலியாகிவிடுகிறது.


(தொடரும்)
(படங்கள் உதவி: இணையம்)

முந்தைய பகுதி:
ஒண்டவந்த பிடாரிகள் - 11 (மான்கள்)

அடுத்த பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 13 (முயல்கள்)

4 May 2015

ஒண்டவந்த பிடாரிகள் - 11 (மான்கள்)




ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகாவைத் தவிர அனைத்துக் கண்டங்களிலும் வாழ்ந்திருந்த விலங்கினம் மான். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பா மற்றும் ஆசியாவிலிருந்து வேட்டைக்கென ஆஸ்திரேலியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட மான்கள் இப்போது ஆஸ்திரேலிய மழைக்காடுகளிலும் யூகலிப்டஸ் காடுகளிலும் பண்ணைநிலங்களிலும் பரவலாகக் காணப்படுகின்றன. கங்காரு, வல்லபிகளின் உணவுக்குப் போட்டியான மான்களின் எண்ணிக்கை மளமளவென்று பெருகுவது வியப்புக்குரிய விஷயமன்று. முன்பே சொன்னது போல் இங்கு சிங்கம், புலி, சிறுத்தை போன்ற பெரிய அளவிலான வேட்டையாடும் விலங்கினங்கள் கிடையாது என்பதுதான் இயற்கை சமநிலை குலைந்துபோனதற்கு முக்கியக் காரணம்.

ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பதினெட்டு மானினங்களில் புதிய இடத்தில் பொருந்தாமல் அழிந்தவை போக தற்போது உள்ளவை Fallow, Red, Sambar, Rusa, Hog, Chital என ஆறு வகை மானினங்கள் மட்டுமே. சூழலுக்கு அழகு சேர்க்கவும் வேட்டையாடிக் களிக்கவும் என இறக்குமதி செய்யப்பட்ட இவை, இப்போது நாட்டின் மிகப்பெரும் உபத்திரவங்களுள் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டிருப்பது வருத்தம் தரும் செய்தி.


ஆஸ்திரேலியாவில் இறக்குமதியான அந்நிய விலங்குகளான ஒட்டகம், ஆடு, மாடு, எருமை, குதிரை, கழுதை, மான், பன்றி போன்ற பெரும்பான்மையான விலங்கினங்கள் குளம்புள்ள விலங்கினங்கள். அதனாலேயே பல இடங்களில் மண் அரிப்புகளும் நீர்நிலைகளின் கரைகள் இடிந்துபோவதுமான நிகழ்வுகள் ஏற்படுகின்றன. மேலும் களைவிதைகள் பரவ குளம்பு விலங்குகள் ஒரு முக்கியக் காரணம். குளம்புள்ள விலங்குகளுக்கே வரக்கூடிய சில நோய்கள் காடுவாழ் விலங்குகளின் மூலம் கால்நடைகளுக்கும் பரவலாம் என்ற பயமும் பண்ணையாளர்களிடம் உள்ளது. ஆஸ்திரேலியாவின் சொந்த விலங்கு எதற்குமே குளம்பு கிடையாது என்பது கவனிக்கத்தக்கது.


ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதிகளில் பலவும் மான்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் அங்கு கங்காரு, வல்லபி உள்ளிட்ட மற்ற தாவர உண்ணிகள் வாழ்வது அரிதாகிவிட்டது. மேலும் விவசாய நிலங்களைப் பாழ்படுத்துவதாலும், கால்நடைப் பண்ணைகளின் மேய்ச்சல் நிலங்களையும் பங்குபோட்டுக் கொள்வதாலும் விவசாயிகளும் பண்ணை உரிமையாளர்களும் இவற்றைக் கண்டதும் சுடத் தவறுவதில்லை.  சில விவசாயிகள் வருடத்துக்கு நூறு மான்களைக்கூடக் கொல்கிறார்களாம். 

கங்காருகளின் எண்ணிக்கை அளவில்லாமல் பெருகும்போது கங்காரு அறுவடை என்ற பெயரில் அரசு கங்காருக்களை வேட்டையாடிக் கொல்வதைப் போல மான்களின் எண்ணிக்கை பெருகும்போதும் மான் அறுவடை நடத்தப்படுகிறது. 2011 இல் விக்டோரியா மாநிலத்தில் மட்டும் 41,000 மான்கள் கொல்லப்பட்டனவாம். அவற்றில் 34,000 மான்கள் சம்பார் இன மான்கள். 


அரசே மான்களைக் கொல்கிறதே நாம் கொன்றால் என்ன என்று யார் வேண்டுமானாலும் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு மான்வேட்டைக்குப் போய்விடமுடியாது.  எந்தெந்த மானினங்கள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளதோ அவற்றை மட்டும்தான் வேட்டையாட அனுமதி. அதுவும் அரசிடமிருந்து முறைப்படி வேட்டைக்கான உரிமத்தைப் பெற்றிருக்கவேண்டும். ஒரு பக்கம் சொந்த உயிரினங்கள் அழிந்துகொண்டிருக்கின்றன. மறுபக்கம் வந்த உயிரினங்கள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. முடிவில் மிஞ்சப்போவதுதான் என்ன?


(தொடரும்)
(படங்கள் உதவி: இணையம்)

முந்தைய பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 10 (பன்றிகள்)

அடுத்த பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 12 (ஆடுகள்)

2 May 2015

கீதமஞ்சரி வலைப்பூவில் சில சேர்க்கைகள்!





கீதமஞ்சரியின் தொடர்வாசகர்களான அனைவருக்கும் அன்பான வணக்கம். இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென்று என்னுடைய பல பதிவுகள் தங்களுடைய டாஷ்போர்டில் வரிசையாக வந்துநிற்பதைப் பார்த்து பலருக்கும் வியப்பு. எப்படி தவறவிட்டோம் இத்தனைப் பதிவுகளை என்று அல்லது எப்படி இத்தனைப் பதிவுகள் அதுவும் பிப்ரவரி, மார்ச் மாதப்பதிவுகள் இப்போது என்று. அனைத்துப் பதிவுகளுக்கும் சலிக்காமல் பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த கோபு சார் அவர்களுக்கும் ஜிஎம்பி ஐயா அவர்களுக்கும் அன்பான நன்றி. இருவரும் இந்த சந்தேகத்தைக் கேட்டிருந்தார்கள். விளக்கம் அளிக்கவேண்டியது என் கடமை அல்லவா?




நான்கைந்து மாதங்களுக்கு முன் 'விசும்பின்கீழ் விரியும் உலகு' என்ற பெயரில் வலைப்பூ ஒன்று துவங்கி அதில் நான் எடுக்கும் புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு வந்தேன். அவ்வப்போது புகைப்படங்கள் குறித்த சிற்சிறு தகவல்களும் வெளியிட்டுவந்தேன். எதற்கு தனித்தனியாக வலைப்பூக்கள் என்று நினைத்து என்னுடைய ஆக்கங்கள் அனைத்தையும் ஒரே வலையில் சேகரிக்கும் முயற்சியாக அவ்வலைப்பூவையும் கீதமஞ்சரியுடன் இரண்டுநாட்களுக்கு முன் இணைத்துவிட்டேன். அதன்காரணமாகவே அந்தப் பதிவுகள் புதிதாக தங்களுடைய டாஷ்போர்டில் தொடர்பதிவுகளாக காட்சியளித்திருக்கின்றன. இப்படி வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. பதிவுகளைப் பார்வையிட்ட கருத்திட்ட பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் மிகவும் நன்றி. 



வலைப்பூ சேர்க்கையுடன் இன்னொரு சேர்க்கையும் கீதமஞ்சரியில் நிகழ்ந்திருக்கிறது. ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் (ATBC) என்னும் இணைய வானொலியில் காற்றினிலே வரும் கீதம் என்ற பெயரில் வாரந்தோறும் ஒருமணி நேர திரையிசை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதாக முன்பே தெரிவித்திருந்தேன் அல்லவா? அந்த நிகழ்ச்சியைக் கேட்க நேரம் ஒத்துவராத பல நண்பர்கள் அவற்றை வலையில் பகிர்ந்தால் கேட்டு மகிழமுடியும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்கள். அவர்களுக்காக இந்த வலையின் விட்ஜெட்களில் ஒன்றாக காற்றினிலே வரும் கீதம் என்ற தலைப்பில் வானொலி நிகழ்ச்சிகள் (ஏற்கனவே ஒலிபரப்பானவை) சிலவற்றை இணைத்திருக்கிறேன். வாரமொருமுறை புதிய நிகழ்ச்சிகள் மாற்ற உத்தேசம்.  



நேரமும் ஆர்வமும் உள்ளவர்கள் கேட்டு மகிழுங்கள். வானொலி நிகழ்ச்சி பற்றிய கருத்தோ திருத்தமோ ஆலோசனையோ தெரிவிக்க விரும்புபவர்கள் கீதமஞ்சரியின் எந்தப் பதிவின் பின்னூட்டத்திலும் வானொலி நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு தெரிவிக்கலாம் அல்லது jgeetham71@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தெரிவிக்கலாம். அனைவரின் ஆதரவையும் அன்புடன் எதிர்நோக்குகிறேன். நன்றி.