17 December 2014

என்றாவது ஒரு நாள் என்ற என் கனவு


என்றாவது ஒரு நாள்…
என் எழுத்துக்களும் அச்சிலேறும் என்ற 
நம்பிக்கை... ஆசை... கனவு...
எதுவும் பொய்க்கவில்லை...

இதோ...
அகநாழிகை பதிப்பக வெளியீடாக... 
என் முதல் நூல்


என்றாவது ஒரு நாள் 
(ஆஸ்திரேலிய காடுறை கதைகளின் தொகுப்பு)

விரைவில்...


உங்கள் அனைவரின் ஆசிகளையும் ஆதரவையும் 
அன்புடன் எதிர்நோக்குகிறேன்.




கனவை நனவாக்கிய 
அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுக்கு 
மனங்கனிவான நன்றி. 



9 December 2014

பறவைகள் பலவிதம் 2


தின்ன ஏதாவது கிடைக்குமா?
ஆஸ்திரேலிய வெள்ளை அன்றில் (Australian white ibis)


march of penguins
பெங்குயின்கள் (penguins)


மாலைப் பொழுதில் ஓய்வு
வெள்ளை அன்றில் & நாய்சி மைனர் பறவைகள்

நானும் பறவைதான்
பெங்குயின்


ஆப்பிரிக்க நெருப்புக்கோழி
நெருப்புக்கோழி (ostrich)

இது என் ஏரியா -  வாத்துகளை எச்சரிக்கிறார் மேக்பை
ஆஸ்திரேலிய மேக்பை & ஆஸ்திரேலிய காட்டு வாத்துகள்


 ஒரு உற்சாகக் குளியல்
கடற்புறாக்கள் (silver gulls)


விரட்டினாலும் போகமாட்டோம் - வாத்து இணை
ஆஸ்திரேலிய காட்டு வாத்துகள் (Australian wood ducks)


எங்கெங்கு காணினும் சீகலடா...
கடற்புறாக்கள் (sea gulls)



உறவுகள்... உன்னதங்கள் (தொடர்ச்சி)




உறவுகள் தொடர்பான சென்ற பதிவில் உறவென்னும் வட்டத்துள் வரும் அனைவரையுமே பொதுவில் கொண்டு கருத்தளித்திருந்தேன். அந்தப் பதிவுக்கு ஜிஎம்பி ஐயா அளித்திருந்த அவருடைய பின்னூட்டத்தில் கீழ்க்காணுமாறு குறிப்பிட்டிருக்கிறார்.

\\என் பதிவில் தொலைந்து கொண்டு போகும் உறவுகளைப் பெண்கள் நிலை நிறுத்தலாம் என்னும் கருத்தை மறைமுகமாக வைத்தேன் பலரிடம் கேட்டுப் பார்த்தால் ஒரு நிதரிசன உண்மை விளங்கும் அறிந்த உறவுகளில் தாய் வழி உறவே அதிகம் நினைவில் இருக்கும். இதற்கும் தலையணை மந்திரம் முந்தானையில் முடித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் அறிவுரையும் மறைமுகக் காரணங்களாக இருக்க வாய்ப்புண்டா. தெரிய வில்லை. நடைமுறை வாழ்க்கை நிலைகள் பிளவுபடும் குடும்ப உறவுகளுக்குக் காரணமானாலும் அதைச் சீர்செய்ய யாரால் இயலும் என்னும்கேள்வியும் எழுகிறது.சில பல காரணங்கள் தெரிவதைச் சொல்ல பெண்களுக்குத் தைரியம் இருக்கிறதா இல்லை இருக்கும் நிலையை மாத்திரம் சொல்லிக் காரண காரியங்களை அவரவர் சௌகரியத்துக்கு விட்டு விடுவதா எது சரி...?\\

இந்தப் பின்னூட்டத்தைப் பார்த்தபிறகு என் கருத்தை இன்னும் கொஞ்சம் விளக்கமாக அளித்திருக்கலாமோ என்ற எண்ணம் பிறக்கவும் தோன்றியது இந்தப் பதிவு. உறவுகள் பலப்படுவதும் விரிசலடைவதும் பெண்கள் கையில்தான் என்ற அவரது கருத்துக்கு உறவின் தன்மையில் பெண்களுடனான என்னுடைய நிலைப்பாட்டை விளக்க இப்பதிவு போதுமானது என்று நினைக்கிறேன்.

இதில் முழுக்க முழுக்க என்னுடைய அனுபவத்தை மட்டுமே பகிரப்போகிறேன். ஜிஎம்பி ஐயா குறிப்பிட்டுள்ளது போல் தலையணை மந்திரமோ முந்தானையில் முடிந்து வைக்கும் தந்திரமோ எதுவும் என் திருமணத்தின்போது எனக்கு வழங்கப்படவில்லை. என் தாய் மட்டுமல்ல… என்னுடைய பிறந்தவீட்டு உறவுகள் யாருமே அப்படியொரு எண்ணத்தை எனக்குள் விதைக்கவில்லை. எல்லோரும் ஒன்றுபோல் சொன்னது இதுதான்.

நீ வாழ்க்கைப்பட இருக்கும் குடும்பம் பெரியது. மாமியார் மாமனார், இரண்டு கொழுந்தனார், இரண்டு நாத்தனார், அவர்களது குடும்பம், ஓரகத்தி என்று பலரையும் அனுசரித்துப் போகவேண்டும். பிறந்த வீட்டில் எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்குவது பெரிய விஷயமில்லை. புகுந்த வீட்டிலும் எல்லோரிடமும் நல்ல பெண்ணாக நடந்து நல்ல பெயர் வாங்கி பிறந்த வீட்டுக்கு பெருமை சேர்க்கவேண்டும்.

கணவனையும் கணவனது குடும்பத்தாரையும் அனுசரித்துப் போ என்றுதான் அறிவுரைக்கப்பட்டதே தவிர… கவனமாயிரு… கணவனைக் கைக்குள் போட்டுக்கொள் என்று எந்த அறிவுரையும் வழங்கப்படவில்லை. அதனால்தானோ என்னவோ இன்னும் மூன்று வருடங்களில் வெள்ளிவிழா காணவிருக்கும் மண வாழ்க்கையில் இதுவரை புகுந்த வீட்டினருடன் எந்த பிணக்குமில்லாமல் நல்ல மருமகளாய் எல்லோருடைய அன்பையும் நன்மதிப்பையும் சம்பாதித்துவைத்திருக்க முடிகிறது. இதோ இந்தப் பதிவை வாசிக்கும் என் புகுந்த வீட்டு, பிறந்த வீட்டு உறவுகள் நிச்சயம் என்னை ஆமோதிப்பார்கள்.

புகுந்த வீட்டில் ஒவ்வொருவரிடமும் நான் காட்டும் அன்பு அதனினும் பன்மடங்கு என்னிடமே திருப்பித் தரப்படுவது எங்கள் உறவு பலப்பட முக்கியமான காரணமாக நினைக்கிறேன். எனக்குத் திருமணமான புதிதில் என் நாத்தனார்களை குடும்ப வழக்கப்படி அத்தாச்சி என்று அழைத்தேன். அக்கா என்றே அழை என்றார்கள். அந்த வார்த்தைகளுக்கான மதிப்பை இன்றுவரை உணர்ந்து அனுபவிக்கிறேன்.  என் நாத்தனார்களையும் ஓரகத்திகளையும் என் உடன்பிறந்த தமக்கைகளாகவே நினைக்கிறேன். அவர்களும் அப்படிதான் நினைக்கிறார்கள். உடன்பிறந்த சகோதரிகளை விடவும் ஒரு படி அதிகமாகவே பாசம் செலுத்துகிறார்கள்.

உறவுகளுக்குள் சில சமயங்களில் தவறான புரிதலினால் மனக்கிலேசங்கள் ஏற்படுவது இயற்கை. அதை ஊதி ஊதி பெரிதாக்காமல் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு பிரச்சனையைத் தீர்க்கவே முயல்கிறோம். எந்த சூழ்நிலையிலும் யாரும் எவரையும் ஒதுக்க நினைப்பதில்லை. இன்பத்திலும் துன்பத்திலும் எல்லோருமே ஒருமித்துப் பங்கு கொள்கிறோம்.

உறவுகளுக்குள் பந்தம், பாசம், மரியாதை இவற்றைத் தாண்டி நட்புமிருந்தால் உறவு இன்னும் பலப்படும். என் ஓரகத்திக்கும் எனக்கும் இடையில் இன்னதுதான் என்றில்லாமல் எவ்வளவோ கருத்துப் பரிமாற்றங்கள் நிகழும். சிறிய நாத்தனாரும் நானும் குடும்ப விவரங்கள் அல்லாது பொதுவிஷயங்களை ஏராளமாய்ப் பகிர்ந்துகொள்வோம். என் பெரிய நாத்தனாரிடம் உறவைத் தாண்டி இலக்கியம் குறித்தும் பதிவுலகம் குறித்தும் என்னால் ஒருமணி நேரத்துக்கும் மேலாக தொலைபேசியில் பேசமுடிகிறது. ஒவ்வொருவருடனும் பேசும்போது அவர்கள் இன்ன உறவு என்பதோ மூத்தவர்கள் என்பதோ எதுவும் மனத்தில் உறுத்தாமல் ஒரு உற்ற தோழியுடன் பேசுவது போன்ற உணர்வே தோன்றும். அப்படி நட்புணர்வுடன் கூடிய உறவுகள் வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். தாயிடம் பகிரமுடியாத சங்கதிகளைக் கூட தாராளமாய் நான் என் புகுந்த வீட்டு உறவுகளிடம் பகிரமுடியும்.  

தானே கைம்பெண்ணான நிலையிலும் நிராதரவாய் நின்ற கைம்பெண் நாத்தனாரை அவருடைய கடைசி காலம் வரை வைத்துக் காப்பாற்றிய பெண்மணியையும், தாயும் மாமியாரும் பக்கம் பக்கம் அமர்ந்திருக்க, மாமியாரின் மடியில் உரிமையுடன் தலைவைத்துப் படுத்துக்கொள்ளும் மருமகளையும் கணவனுடன் பிறந்தவர்கள் ஏமாற்றி தம்மை சுரண்டுகிறார்கள் என்று தெரிந்தே அனுமதிக்கும் தாராள மனம் கொண்ட பெண்ணையும் அறியும் அதே சமயம் பெற்றவளுடனும் உடன் பிறந்தவர்களுடனும் பேசினால் தற்கொலை செய்துகொள்வேன் என்று கணவனை மிரட்டும் மனைவியையும் அறிவேன்.

குடும்ப உறவுகள் வலுப்படுவது பெண்களின் கையில்தான் இருக்கிறது என்று ஜிஎம்பி ஐயா சொல்வது ஒருவகையில் ஏற்கத்தக்கதுதான் என்றாலும் அதில் ஆண்களின் பங்கு எதுவுமே இல்லை என்று சொல்வதற்கில்லை.

நான் என் புகுந்த வீட்டாரிடம் எப்படி நடந்துகொள்கிறேனோ அதுபோலவே என் கணவர் என் பிறந்த வீட்டாரிடம் நடந்துகொள்கிறார். அதை நான் எதிர்பாராதபோதும் என்பதுதான் சிறப்பு. என் தம்பியை தன் சொந்த சகோதரனைப் போலவும் என் தாய் தந்தையை தன்னுடைய தாய் தந்தையைப் போலவும் மதிக்கிறார்… பாசம் காட்டுகிறார். உதாரணத்துக்கு ஒரு விஷயம் சொல்கிறேன்.. என் தம்பிக்கு திருமணம் முடிவான சமயம். என் கணவர் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா?

"உனக்கு நாத்தனார்களாகிய என் அக்காக்கள் உன்னிடம் எப்படி பாசமாக பரிவாக நடந்துகொள்கிறார்களோ அப்படியே நீயும் வரவிருக்கும் உன் தம்பி மனைவியிடம் பாசமும் பரிவுமாக நடந்துகொள்ளவேண்டும். அந்தப்பெண் உன்னை விடவும் சிறிய பெண். தவறு செய்தால் நீ பெரியவள் என்ற முறையில் அனுசரித்துப்போ. எந்த சூழ்நிலையிலும் உங்கள் இருவருக்குள்ளும் பிரச்சனை வராமல் பார்த்துக்கொள். அது உன் பிறந்த வீட்டிலுள்ள மற்ற உறவுகளுக்குள்ளும் ஒரு ஆரோக்கியமான பிணைப்பை உருவாக்கும்."

எந்த அளவுக்கு என் குடும்பத்தின்மேல் அவருக்கு அக்கறை இருந்திருந்தால் இப்படி சொல்லத் தோன்றும்? என் தம்பி மனைவி என்னை அத்தாச்சி என்றபோது நானும் என்னை அக்கா என்றே அழைக்கச்செய்தேன். இன்றுவரை என் சகோதரியாகவே பார்க்கிறேன். எங்கள் இருவருக்குள்ளும் உள்ள நட்பும் பாசமும் இந்த பதினைந்து வருடங்களில் பலப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்வேன்.

நான் வீட்டுக்கு வருகிறேன் என்று சொன்னால் உற்சாகமாக என்னை வரவேற்க தயாராகிவிடுகிறார் தம்பி மனைவி. எப்போது வருவேன் என்று எதிர்பார்த்திருக்கிறார். கணவனின் உறவுகள் வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டிருந்தால் எந்தப் பெண்ணாவது இப்படி ஆர்வத்துடன் நாத்தனாரை வரவேற்கக் காத்திருப்பாரா?

இந்தியாவிலிருக்கும்போது குழந்தைகளுக்கு காலாண்டு அரையாண்டு விடுமுறைகளில் தாய்வீட்டுக்குப் போவதற்கு நிகராக மாமியார் வீட்டுக்கு நானும் பிள்ளைகளும் குஷியாகக் கிளம்பிவிடுவோம். என்னைப் பலரும் கிண்டல் செய்திருக்கிறார்கள்… மாமியார் வீட்டுக்கும் நாத்தனார் வீடுகளுக்கும் போக இவ்வளவு ஆர்வத்துடன் கிளம்பும் ஓரே ஆள் நீங்களாகத்தான் இருக்கமுடியும் என்று. என்ன செய்ய? என் தாயின் வளர்ப்பு அது. பிறந்த வீட்டை விடவும் புகுந்த வீட்டுக்கு மரியாதை செய்யும்படி சொன்ன அறிவுரையின் காரணம் அது.

ஒருவேளை எதிர்மறையாய் அறிவுறுத்தப்படும் பெண்களின் செயல்பாடுகள் உறவுகளில் விரிசல் விழக் காரணமாயிருக்கலாம். அதைப் பற்றிய கருத்துகள் என்னிடமில்லை. ஏனெனில் என்னுடைய அனுபவத்தில் பிறந்த வீடு புகுந்த வீடு என்ற பாகுபாடில்லாமல் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழும் பெண்களைத்தான் வெகுவாக நான் பார்த்திருக்கிறேன். 


8 December 2014

உறவுகள்.. உன்னதங்கள்!





வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான நம் பதிவுலகத் தோழமையான ஜிஎம் பாலசுப்பிரமணியம் ஐயா அவர்கள் உறவுகள் சார்ந்த பதிவொன்றுக்கு தொடர் பதிவு எழுத அழைப்பு விடுத்துள்ளார். அவருடைய அனுபவங்களும் சிந்தனைகளும் என்னை மிகவும் கவர்பவை. அவருடைய நிதானமான அழுத்தமான எண்ணப்பகிர்வுகளும், கருத்துக்களை மிகத்துல்லியமாக எழுத்தாக்கும் திறமும் என்னை வியப்பில் ஆழ்த்துபவை.

உறவுகள் என்ற தலைப்பில் சமீபத்தில் அவர் எழுதிய பதிவின் தொடர்ச்சியாக சில பெண் பதிவர்களின் கருத்துகளைக் கேட்டு எழுதியுள்ளார். அப்பெண் பதிவர்களுள் நானும் ஒருத்தி என்பதறிந்து வியந்தேன். ஜிஎம்பி ஐயா அவர்கள் எங்களை பெண் பதிவர்களின் பிரதிநிதிகளாகக் கருத்துக்களைக் கூறுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பெண் பதிவர்களின் மட்டுமல்ல பெண்களின் பிரதிநிதியாகவும் இந்த விஷயத்தில் கருத்தளிக்க இயலுமா என்பது சந்தேகமே. ஏனெனில் இதுபோன்ற சிந்தனைகளிலெல்லாம் இதுவரை நான் ஈடுபட்டதே இல்லை. வாழ்க்கையை அதன்போக்கில் ஏற்றுக்கொண்டு வாழுந்தன்மை உடையவள் நான்.

என்னைப் பொறுத்தவரை கணவன் மனைவியாகட்டும், பெற்றோர் பிள்ளைகளாகட்டும், உடன்பிறந்தவர்களாகட்டும், நண்பர்களாகட்டும், மற்ற உறவுகளாகட்டும்… எந்த உறவுநிலையையும் இது இப்படிதான் என்ற வரையறைக்குள் கொண்டுவருவது அசாத்தியம். உறவுகள் நீட்டிப்பதும் வெட்டுப்படுவதும் அவரவர் வளர்ந்த விதம், வாழும் சூழல், தேவைகள், சூழ்ந்துள்ள மற்ற உறவுகளின் இயல்பு போன்ற பல காரணிகளைப் பொறுத்தே அமைகிறது.

ஒரு குடும்பக் கட்டமைப்பில் பெண் ஆணை ஆட்டுவிப்பதோ ஆண் பெண்ணை அடிமைப்படுத்துவதோ அவரவர் தனிப்பட்ட குணநலன் சார்ந்த நிலைப்பாடாக எடுத்துக்கொள்ள முடிகிறதே தவிர பொதுவான கருத்தாக கொள்ளமுடியவில்லை. பெரும்பான்மை என்று சொன்னால் பல இடங்களில் பெண்கள் ஆணைச் சார்ந்து வாழும் நிலையிலும் சரி, சாராத நிலையிலும் சரி.. ஏதோ ஒரு விதத்தில் அல்லல்படுவதையும் அடிமைப்படுவதையும் அறிந்தேயிருக்கிறோம். உரிய மரியாதை கிட்டாமல் உதாசீனப்படுத்தப் படுவதோடு இன்னும் சில பெண்கள் வெளியில் சொல்லமுடியாத வேதனையை அனுபவிப்பதுமான பல வாழ்க்கை அனுபவங்களை கண்டும் கேட்டும் அறிந்திருக்கிறோம். சில இடங்களில் நிலைமை தலைகீழாக இருப்பதும் நமக்குத் தெரியும். பெற்ற தாயுடனும் பேசும் உரிமை மறுக்கப்பட்டு வாழும் ஆண்களின் மனக்குமுறலும் வேதனையும் வெளிப்படக் கேட்டு வருந்தியிருக்கிறோம். அதனால் உறவுகள் தொடர்பறுந்து போவதன் ஒட்டுமொத்தப் பழியைத் தூக்கி பெண்களின் மீதோ அல்லது ஆண்களின் மீதோ சுமத்துவதில் எனக்கு உடன்பாடில்லை.

உறவுகள் விட்டுப்போவதற்கு மாறிவரும் வாழ்க்கைச்சூழல் ஒரு முக்கியக் காரணம். அவசர யுகம் எந்திரமயம், உலகமயமாக்கல் என்றெல்லாம் மாறிவரும் சூழலில் எந்த உறவையும் தொடர்பெல்லைக்குள் தக்கவைத்துக்கொள்ள நம்மால் முடியவில்லை. நின்று நிதானித்துப் பேசவும் நமக்கு நேரமில்லை… அல்லது நேரமில்லாதது போல் பாசாங்கு செய்து கொண்டிருக்கிறோம். உண்மையில் சோம்பேறிகளாகிக் கொண்டு வருகிறோம். பட்டனை அழுத்தவும் அலுப்புப் பட்டு தொடுதிரைகளைத் தொட்டுத் தடவி காரியமாற்றிக் கொண்டிருக்கும் காலமிது.

நேரமில்லை என்பது ஒரு சாக்கு. நேரமில்லாமலா நெடுந்தொடர்களிலும் முகநூலிலும் இணையத்திலும் எங்கோ ஒரு முகந்தெரியாத நண்பருடன் அரட்டை அடிப்பதிலும் நேரத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறோம். அவசரம் அவசரம் என்று எதிலும் நிற்க நேரமில்லாமல் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கும் நாம்தான் சினிமா, அரசியல், மதம் சார்ந்த பல வெட்டி சர்ச்சைகளில் இறங்கி நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.
ஒற்றைப் பிள்ளை போதுமென்று முடிவெடுத்த நாம்தான் அந்த ஒற்றைப் பிள்ளைக்கும் ஓய்வுப்பொழுதை ஒதுக்காமல் வீடியோ கேம் வாங்கிக் கொடுத்து ஒண்டியாய் விளையாட விட்டிருக்கிறோம். குழந்தையிலிருந்தே தனிமைப்படுத்தப்பட்ட பிள்ளைக்கு குடும்பத்தின் அருமை தெரியுமா? உறவுகளின் உன்னதம் புரியுமா? நாமோ இன்றைய பொழுதுகளை இழந்துகொண்டு நாளைப் பொழுதுகளுக்காய் சேமித்தபடி நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறோம்.

பெரும்பாலும் தேவைகளின் நிமித்தமே உறவுகளின் தேவையும் தீர்மானிக்கப்படுகிறது. அது கணவன் மனைவி உறவானாலும் சரி மற்ற உறவுகளானாலும் சரி. தேவை எது என்பதும் ஆளுக்காள் மாறுகிறது. சிலருக்கு பொருளாதாரம்.. சிலருக்கு கௌரவம்.. சிலருக்கு ஆள்மாகாணம்.. சிலருக்கு வேறு ஏதாவது.. வெகு சிலருக்கே அன்பின் அடிப்படையில் உறவுகளின் தேவை தேவைப்படுகிறது. 

குடும்ப அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாய்த் தொலைந்துகொண்டு வரும் இக்காலத்தில் திருமணத்தின் மீதான நம்பிக்கையும் மதிப்பிழந்துகொண்டு வருவது உண்மை. இப்படியானதொரு நிலையில் கணவன் மனைவி குழந்தை என்ற முக்கோணத்தின் உள் நுழைய தாத்தா பாட்டி அத்தை மாமா சித்தப்பா சித்தி உறவுகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அது அம்மா வழியா அப்பா வழியா என்ற பேதமில்லாமல் ஒட்டுமொத்தமாகவே உறவுகள் ஒதுக்கித் தள்ளப்படுவது நிதர்சனம். 

புகுந்த வீடு பிறந்த வீடு என்ற பேதம் பாராமல் அனைத்து உறவுகளையும் அனுசரித்தும் அன்பு செலுத்தியும் வாழும் குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளுக்கு உறவுகளின் உன்னதம் பற்றி நாம் எடுத்துச் சொல்லவேண்டிய அவசியமேற்படுவதில்லை. ஒருதலைப் பட்சமான உறவுப்பேணலில்தான் உரசல்களும் மனக்கசப்புகளும் உண்டாகின்றன.

கூட்டுக்குடும்பங்களின் அருமை பற்றி ஆதங்கித்துக்கொண்டும், பெற்றோர் வயதான காலத்தில் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்படும் அவலம் குறித்து விவாதித்துக் கொண்டுமிருக்கும் கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம். உறவுகளின் அருமை பெருமை அறிந்த காரணத்தாலேதான் இன்னமும் அவற்றைப் பற்றிய நம் ஏக்கத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறோம்.

வளரும் தலைமுறைக்கு அண்ணன் அக்கா தம்பி தங்கை போன்ற எந்த உறவுகளோடும் வளரும் வாய்ப்பு கொடுக்கப்படா நிலையில் அதற்கடுத்த தலைமுறையில் அத்தை மாமா சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா போன்ற உறவுகளைப் பற்றியும் எந்தக் குழந்தைக்கும் தெரிந்திருக்கப் போவதில்லை. அண்ணன் தம்பிகளுக்குள் சொத்துத் தகராறோ.. அக்கா தங்கைகளுக்கு சீர் செய்வதில் சிரமமோ… தாய்மாமனை சபையில் முன்னிறுத்தவில்லை என்ற சங்கடங்களோ எதுவுமே நேரப்போவதில்லை… ஒன்றே ஒன்றுதான்.. பெற்றவர்களை முதுமைக் காலத்தில் பேணுவது குறித்தான சிரமம் ஒன்றுதான் பிரதானமாகப் போகிறது.

பெற்ற ஒற்றைப் பிள்ளைக்கும் உடல்நிலை சரியில்லை என்றால் சென்ற முறை நான் விடுப்பெடுத்தேன் இந்த முறை நீ விடுப்பெடுக்கவேண்டும் என்ற ஒப்பந்தப்படி தாயும் தந்தையும் விடுப்பெடுத்து குழந்தை வளர்க்கும் சூழலில் பெற்றவர்களைப் பேணுவதும் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை எனில் விடுப்பெடுப்பதும் பிரதான பிரச்சனையாகப் போவதில் வியப்பில்லை.

போகப்போக மேலை நாடுகளைப் போல இங்கும் பெற்றவர்கள் பிள்ளைகளுக்கென்று தனிக்குடும்பம் உருவாகிவிட்ட பிறகு அவர்களை விட்டு ஒதுங்கி வாழ தங்களை மனத்தளவிலும் பொருளாதார அளவிலும் தயார்படுத்திக் கொள்ளும் சூழல் விரைவில் உருவாகும்.

காலமாற்றத்தால் ஆட்டுக்கல் அம்மிக்கல் போன்றவை புழக்கத்திலிருந்து விடுபட்டு கிரைண்டர் மிக்ஸி என உருமாற்றம் பெற்றது போல் உறவுகளும் காலத்துக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்கின்றனர். இப்போது எந்த உறவின் திருமணத்துக்கு ஒரு வாரம் முன்னதாக… ஒரு வாரம் வேண்டாம் இரண்டு நாட்கள் முன்னதாகப் போகிறோம்? நேராக மண்டபத்துக்குப் போகிறோம்.. வீடியோவில் நம் வருகையைப் பதிவு செய்கிறோம். மொய் கவரைக் கொடுக்கிறோம். விருந்துண்கிறோம். விடைபெறுகிறோம். அந்த அளவில்தான் உள்ளது தற்போது நமக்கு உறவுகளுடனான பிணைப்பு. இனிவருங்காலத்தில் அதுவும் விடுபட்டுப்போகும் வாய்ப்புகள் அதிகம்.

இதற்கு காலமாற்றம் அல்லாது யாரை குறை சொல்ல முடியும்? ஒற்றையாய் வளரும் குழந்தைகளுக்கு விட்டுக்கொடுத்தல் பற்றியோ பகிர்தல் பற்றியோ என்ன தெரிந்திருக்கப் போகிறது? திருமணமானவுடன் கணவன் மனைவிக்குள்ளே கூட அந்த விட்டுக்கொடுத்தலும் பகிர்தலும் பிரச்சனைக்குரியவைகளாக மாறுகின்றன. அவர்கள் இருவருக்குள்ளும் பரஸ்பர புரிதல் உருவாகாமல் பல திருமணங்கள் ஆரம்ப கட்டத்திலேயே விவாகரத்துக் கோரி வழக்குமன்றங்களின் வாயில்களில் காத்திருக்கின்றன. இந்த நிலையில் மற்ற உறவுகளோடு அவர்களுக்கு எப்படி பிணைப்பு உண்டாகும்? 

ஆகவே இன்னும் ஓரிரு தலைமுறையோடு ஒழியப்போகும் உறவுச்சிக்கல்களைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டிருக்காமல் காலமாற்றத்தைக் கருத்தில் கொண்டு நடைமுறை வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்று நடப்பதே இப்போதைக்கு நம்மால் இயன்றது என்பேன். 

1 December 2014

பறவைகள் பலவிதம் 1


ஆஸ்திரேலிய பாம்புத்தாரா

பாம்புத்தாரா (Australian darter)



சிரிக்கும் கூக்கபரா
சிரிக்கும் கூக்கபரா (laughing kookaburra)

லாரிகீட்
வானவில் லாரிகீட் (rainbow lorikeet)




கொண்டைப்புறா
கொண்டைப்புறா (crested pigeon)




ஆஸ்திரேலிய மேக்பை
ஆஸ்திரேலிய மேக்பை (Australian magpie)




சிட்டுக்குருவிகள்
சிட்டுக்குருவிகள் (house sparrows)



அரிவாள் மூக்கன் (அன்றில் வகை)
ஆஸ்திரேலிய வெள்ளை அன்றில் (australian white ibis)




ஆள்காட்டி குருவி
மஞ்சள் தாடை ஆட்காட்டி (yellow wattled lapwing)



சீகல் 
கடற்புறா (silver gull)