21 April 2014

மலாக்கி என்றொரு அசடன் - ஆஸ்திரேலியக் காடுறை கதை 6




நெகுநெகுவென்று வளர்ந்த ஒடிசலான தேகமும், கூன் விழுந்தாற்போன்று உட்பக்கம் குழிந்த தோள்பட்டைகளும், பரட்டைத்தலைமயிரும் மலாக்கியை சற்றே அசாதாரணமாய்க் காட்டிக்கொண்டிருந்தன. கால்நடைப் பண்ணையிலிருந்த பையன்கள் அனைவரும் மலாக்கியை மிகப்பெரிய அசடனென்று கருதினோம். அவனொரு மூடன் என்பதிலும் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை

ஒரே ஒருமுறை ஒரு சிறிய பயணமாக சிட்னி நகரத்துக்குப் போய்வந்திருந்ததைத் தவிர, அவன் தன் வாழ்நாளில் தான் பிறந்துவளர்ந்த குறுங்காட்டுப்பகுதியை விட்டு வெளியே எங்கும் சென்றது கிடையாது. நகரத்திலிருந்து அவன் திரும்பிவந்தபோது அவனுடைய நரம்புகளில் ஒருவித அதிர்வை உணர்ந்திருந்தான் என்பது உண்மை. நகரத்துக்குப் போய்வந்த அனுபவத்தைப் பற்றி அவன் வாயிலிருந்து ஒற்றை வார்த்தையைப் பெறுவதென்பது அத்தனை எளிதான காரியமன்று

அவனுக்கு அதைச் சொல்லும் திறமையில்லை என்று சொல்லிவிடமுடியாது. அது அவனுடைய விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டிருந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம்அவன் போய்வந்து பல வருடங்களாகிவிட்ட நிலையில், அதைப்பற்றி இப்போது கேட்டாலும் அவன் முகம் மாறிவிடும். கண்களை இடுக்கி, தலையைச் சொறிந்தபடி மிகவும் மெலிதான நிதானமான குரலில் சொல்வான், “ம்சந்தேகமேயில்லைஅபாயத்தின் அறிகுறி அது!” நகரங்கள் இருக்கும்வரைக்கும் மலாக்கியின் வருத்தமும் இருந்துகொண்டுதான் இருக்கும்.

மலாக்கி உணவுக்காகவும் தங்குவதற்காகவும் வாரத்துக்கு ஒரு பவுண்டு செலவழிப்பது போக வேறெதற்கும் செலவு செய்வதில்லை. அவன் எப்போதும் பழைய நைந்துபோன உடுப்புகளையே உடுத்தியிருப்பான். பையன்களாகிய நாங்கள் எங்களுக்கு விருப்பமின்றிக் கொடுக்கப்படும் வேலைகளைக் காலவரையறையின்றி ஒத்திப்போட, “மலாக்கி புதிய உடை வாங்கும்போது….” என்னும் உவமையைக் கையாண்டோம். நாங்கள் எப்போதும் அவனைக் கேலிபேசுவதில் இன்பம் கண்டோம். அவன் 

எங்களுக்காகவே படைக்கப்பட்ட கோமாளியென்றே எண்ணினோம். அவன் மிக அரிதாகவே குறைப்பட்டுக்கொள்வான். அதற்கு மேல் போனால்என்னிடம் வம்பு வளர்க்காதீங்கஎன்பதை திரும்பத் திரும்ப சொல்வதன் மூலமே தன் கண்டனத்தைத் தெரிவிப்பான்நாங்கள் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காவிடில் அவனிடத்தில் மிகவும் கொடூரமான முறையில் வரம்பு மீறி நடந்துகொள்வோம். அப்போது அவன் தன்னைத்தானே நொந்தபடி மிகவும் வருத்தம் தொணிக்கும் குரலில் முணகிக்கொள்வான், “ம்சந்தேகமேயில்லைஅபாயத்தின் அறிகுறி அது!” 

மலாக்கி தூங்கும்போது அவனறியாமல் அவன் கால்சட்டையின் இரு குழாய்களையும் ஒன்றாகத் தைத்துவிடுவது, கட்டிலின் கால்களைக் கழற்றுவது, அவனுடைய புகைபிடிக்கும் குழாயில் வெடிமருந்தை நிரப்பிவைப்பது போன்ற எளிய வேடிக்கைகளில் எங்கள் மனம் திருப்தியடையவில்லை. வேடிக்கை வித்தைகளில் தேர்ந்த கலைஞர்களைப் போன்று நாங்கள் மேலும் முன்னேற விரும்பினோம்மலாக்கிக்கு அதிக எழுத்துக்களைக் கொண்ட நீளமான வார்த்தைகளின் மேல் தீராத வெறுப்பு உண்டு என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். அவன் பெருமதிப்பு வைத்திருக்கும் ஒருவர் அத்தகைய வார்த்தைகளை உபயோகிப்பதொன்றே போதுமானது, அவர்மீதான மதிப்பை இவன் மீளப்பெற்றுக்கொண்டுவிட.

நான் நீளமான வார்த்தைகளை வெறுக்கிறேன்என்பான் அவன். “என்னிடம் ஒரு புத்தகம் இருக்கிறது. எனக்குத் தேவையென்றால் அந்தப்புத்தகத்திலிருந்து வார்த்தைகளை எடுத்து என்னால் உபயோகிக்கமுடியும், ஆனால் நான் அதை விரும்புவதில்லை.” அவன் குறிப்பிடுவது ஒரு பழைய அகராதியைத்தான். நீளமான வார்த்தைகளை வெறுப்பதற்கு நிகராக அவன் எதிர்பாலினத்தினரையும் வெறுத்தான். இதை அறிந்திருந்த நாங்கள் ஒரு பெண்ணின் கையெழுத்தைக் கொண்டு நீள நீளமான வார்த்தைகள் அமைத்து, அவன் மீறிவிட்டதாக பல்வேறு வாக்குறுதிகளைக் குறிப்பிட்டு பயங்காட்டி அவனுக்கு கடிதம் எழுதுவோம்.

இவற்றையெல்லாம் செய்வதன் மூலம், அவனுடைய வாழ்க்கையை அவன் சுமையாக உணர்வதில் நாங்கள் ஆனந்தமும் களிப்பும் அடைந்தோம். நாங்கள் சொல்லும் எல்லாவற்றையும் அவன் நம்பினான். நாங்கள் முகத்தில் எந்த மிகையுணர்வும் காட்டாமல் இயல்பாய் சொல்லும்  நம்பமுடியாத கட்டுக்கதைகளை அவன் ஏற்றுக்கொண்டான். சிலநேரங்களில் எங்கள் கதைகள் அத்தனையும் அபாயத்தின் அறிகுறிகள் என்பான். அவ்வளவுதான், வெறோன்றும் சொல்வதில்லை.

பண்ணைவீட்டுக்கு ஏதோ வேலையாக கொத்தனார் ஒருவர் வந்தபோதுதான் மலாக்கியின் மீதான எங்கள் வேடிக்கைகள் உச்சமாய் அரங்கேறின. கொத்தனார் ஒருவகையில் மண்டையோட்டு நிபுணத்துவம் பெற்றவராயிருந்தார். மண்டையோட்டு நிபுணத்துவம் என்பது ஒருவருடைய மண்டையோட்டின் அமைப்பைக் கொண்டு அவருடைய குணாதிசயங்களைக் கணிப்பது. எதிரிலிருப்பவனின் முகபாவங்களைக் கொண்டும் அவனுடைய குணாதிசயங்களை மிகத்துல்லியமாய் எடைபோடக்கூடியவராயிருந்தார். அவர் ஆவிகளோடும் பேசக்கூடியவராய் இருந்தார். அவருடைய இதுபோன்ற செய்கைகளால் அதிருப்தி அடைந்திருந்த முதிய முதலாளிகள் இருவரும் அவரோடு இனி எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்வதில்லை என்று முடிவெடுத்திருந்தனர்.

கொத்தனாரைக் கண்டாலே பீதியில் உறையும் மலாக்கி, ஆரம்பத்திலிருந்தே அவர் பார்வையில் படாமல் மிகவும் எச்சரிக்கையோடு தவிர்த்துவந்திருந்தான். ஆனால் ஒருநாள் அவர், பையன்களுக்கு ஆவி தொடர்பான சில விநோத வேடிக்கைகளை செய்துகாட்டிக் களிப்பூட்டிக்கொண்டிருந்தபோது அறையில் அவனும் இருக்கநேர்ந்தது. அவர் ஆவிகளோடு பேசும் சமயம், மலாக்கி பயத்தில் உறைந்த முகத்துடன் அமர்ந்திருந்தான். அது முடிந்ததும் நாங்கள் அவரிடம் மலாக்கியின் மண்டையோட்டைப் படித்துச் சொல்லும்படி கேட்டுக்கொண்டோம்

மலாக்கி தப்பியோடிவிடுமுன் அவனைப் பிடித்து அறையின் நடுவில் நாற்காலியில் அமர்த்தினோம். கொத்தனார் தன் விரல்களை அவன் தலை முழுவதும் ஓடவிட்டார்அவரின் கைவிரல்களுக்கு மத்தியில் மலாக்கியின் தலைமுடிகள் ஒவ்வொன்றும் குத்திட்டு நின்றதை என்னால் இன்னும் மறக்கமுடியவில்லை. பலத்த நம்பிக்கையோடு பார்வையாளர்கள் வியந்து ஆர்ப்பரிக்க, பெண்கள் தங்களுக்குள் நகைத்துக்கொண்டனர். சிறிது நேரத்தில் மலாக்கி தனக்குத்தானே முணுமுணுத்தான், “ம்சந்தேகமேயில்லைஅபாயத்தின் அறிகுறிதான் இது!’

மறுநாள் மலாக்கி வேலைநேரத்தில் தன் மண்வாரியில் சாய்ந்தபடி, தொப்பியை ஒருகையால் முன்னிழுத்துக்கொண்டு மறுகையால் பின்மண்டையை அடிக்கடி தொட்டுப்பார்த்துக்கொண்டிருந்தான். நாங்கள் மலாக்கியிடம் ஓடிச்சென்று கொத்தனார் தன் மண்டையோட்டு நிபுணத்துவத்தில் வெறியாக இருப்பதாகவும், ஆராய்ச்சிக்காகப் பலரைக் கொன்று அவர்களது மண்டையோட்டை எடுத்துச்செல்வதாகவும் சொன்னோம். மேலும் மலாக்கியின் மண்டையோடு மிகவும் அபூர்வமானது என்று அவர் குறிப்பிட்டதாகவும் சொல்லி அவனை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கச்சொன்னோம்

மலாக்கியின் குடிசை பண்ணையிலிருந்து சற்று தொலைவில் இருந்தது. ஒருநாள் இரவு மலாக்கி தன்வீட்டில் கணப்படுப்புக்கு அருகில் அமர்ந்து புகைத்துக்கொண்டிருந்தான். கதவை மெல்லத் திறந்தபடி உள்ளே நுழைந்தார் கொத்தனார். அவர் கையிலிருந்த துணிப்பைக்குள் ஒரு சிறிய பரங்கிக்காய் இருந்தது. அவர் அந்தப்பையை தன் கால்களுக்கிடையில் தொம்மென்று தரையில் வைத்துவிட்டு பலகையில் அமர்ந்தார். மலாக்கி பேரச்சத்தால் பீடிக்கப்பட்டிருந்தாலும் ஒருவாறு சமாளித்துத் திணறியபடிவணக்கம்என்றான்.

வணக்கம்!” என்றார் கொத்தனார்அங்கே பயமுறுத்தும் வகையில் அமைதி நிலவியது. சற்றுநேரத்தில் அமைதியை உடைத்தபடி கொத்தனார் கேட்டார், “எப்படியிருக்கிறாய் மலாக்கி?”

.. நன்றாக இருக்கிறேன்பதிலளித்தான் மலாக்கிசற்றுநேரம் இருவரும் எதுவும் பேசவில்லை. தன் படபடப்பைக் கட்டுப்படுத்தியபடி மலாக்கி கொத்தனாரிடம் அவர் எப்போது பண்ணையை விட்டுப்போவார் என்று கேட்டான்.

நாளை விடியற்காலையில் கிளம்புகிறேன், இப்போது ஜிம்மி நோலெட்டின் வீட்டுக்குப் போய்விட்டு வருகிறேன். வழியில் உன் வீட்டைப் பார்க்கவும் உன்னை விசாரித்துவிட்டு உன் தலையைக் கேட்டுப் போகலாம் என்று வந்தேன்என்றார்.

என்ன?”

நான் உன் மண்டையோட்டுக்காக வந்திருக்கிறேன்.”

மலாக்கி அதிர்ச்சியில் உறைந்துநின்றான்.

இதோ பார், ஜிம்மி நோலெட்டின் தலை இதில்தான் இருக்கிறது” 

அவர் பையைத் தூக்கி, உள்ளிருப்பதை பெரும் ஆர்வத்துடன் தொட்டுக்காட்டினார். அது கிட்டத்தட்ட நாற்பது பவுண்டுகள் எடையுள்ளதாய் இருக்கும்.

நான் கோடரியால் வெட்டும்போது அவனுடைய மண்டையின் ஒருபகுதியை சிதைத்துவிட்டேன். இரண்டுமுறை வெட்டியிருந்திருக்க வேண்டும். ஆனால் போனதை நினைத்து இனி வருந்தி என்ன லாபம்?”

சொல்லிவிட்டு மரப்பிடி கொண்ட சுத்தியலை பையிலிருந்து வெளியே எடுத்து அதிலிருந்த இரத்தம் போன்ற எதையோ தன் சட்டையில் துடைத்துக்கொண்டார். மலாக்கி வெளியில் ஒடும் முயற்சியாக வாசலை நோக்கி விரைந்தான். ஆனால் அவனுக்கு முன் அங்கே அந்த மண்டையோடுவிரும்பி வந்து நின்றார்.

கடவுளின் பெயரால் சொல்கிறேன். நீங்கள் என்னைக் கொன்றுவிடக்கூடாதுதிணறினான் மலாக்கி.

இல்லையென்றால் வேறெந்த வழியில் உன் மண்டையோட்டைப் பெறுவது?”

..” தவித்தான் மலாக்கி. அப்போதுதான் அவனுக்கு அர்த்தமற்றதும் அதேசமயம் வேடிக்கையானதும் விசித்திரமானதுமான ஒரு உபாயம் தோன்றியது. அதை அவன் இயலாமையுடன் தெரிவித்தான்

இங்கே பாருங்கள், நான் சாகும்வரைக்கும் நீங்கள் காத்திருந்தால் என் மண்டையோடு என்ன, என் எலும்புக்கூடு முழுவதையுமே நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.”

எனக்கு இப்போதுதான் வேண்டும்கொத்தனார் அழுத்தமான குரலில் சொன்னார், “என்னை என்ன முட்டாளென்று நினைத்தாயா? இந்த ஏமாற்று வேலையெல்லாம் என்னிடத்தில் ஆகாது. நீ அமைதியாயிருந்தால் வேலை சீக்கிரம் முடியும், இல்லையென்றால்…”

மிச்சத்தை அவர் சொல்லிமுடிக்கும்வரை மலாக்கி காத்திருக்கவில்லை. குடிசையின் பின்புறம் புதிதாய் அடைத்திருந்த பெரிய மரவுரிப்பலகையைப் பெயர்த்துக்கொண்டு பாய்ந்து வெளியில் ஓடினான். “அபாயத்தின் அறிகுறி அது!” அவனுக்குப் பின்னால் எழுப்பப்பட்ட சத்தத்தை அவன் கேட்டிருக்கலாம். ஆனால் ஒரு கலவரப்பட்ட கங்காருவைப் போன்று அவன் காட்டுக்குள் ஓடி மறைந்தான். பண்ணைவெளியை அடையும்வரை அவன் எங்கேயும் நின்றிருக்கமாட்டான்.

ஜிம்மி நோலெட்டும் நானும் அவன் பெயர்த்துக்கொண்டு ஓடிய பின்புற பலகை விரிசல் வழியே எட்டிப்பார்த்தபோது அது எங்கள் மேல் சரிந்துவிழுந்து காயமுண்டாக்கியது. ஆனாலும் எங்கள் வேடிக்கை விளையாட்டு அதனால் சிறிதும் குறைந்துவிடவில்லை. ஜிம்மி நோலெட் மரவுரிப்பலகையின் அடியிலிருந்து தவழ்ந்து வெளியேறி, மலாக்கியின் படுக்கையில் படுத்தபடி சிரித்தான். இவன் செத்துத் தொலையமாட்டானா என்று நாங்கள் எண்ணுமளவுக்கு அதன்பிறகு ஜிம்மி பாதியிரவுகளில் எழுந்தமர்ந்து ஓயாமல் சிரித்துக்கொண்டிருந்தான்.

கதையை இத்துடன் முடித்துவிடத்தான் விரும்புகிறேன், ஆனால் மலாக்கியைப் பற்றிச் சொல்வதற்கு இன்னும் சில மீதம் உள்ளன.
பண்ணை வீட்டில் சிறந்த பசுக்களில் ஒன்று, கன்று ஈன்றிருந்தபோது பெரும் அமளியை உண்டாக்கிக்கொண்டிருந்தது. பொதுவாக அது மிகவும் அமைதியானதும் எளிதில் பழக்குவதற்கு இடந்தரக்கூடியதுமான பசு என்றாலும் கன்று ஈன்றபிறகு அது மூர்க்கமாய் மாறியிருந்தது. யாரும் எதிர்பாராத வகையில் அது எல்லோரையும் முட்டிக் காயப்படுத்திக் கொண்டிருந்தது.

ஒருநாள் பண்ணைமுதலாளியின் மகளும் சிட்னியைச் சேர்ந்த அவளுடைய பகட்டுக் கணவனும் அந்த பசு இருந்த புல்வெளிப்பக்கம் உலவிக்கொண்டிருந்தனர். பகட்டுக்காரனின் அநாகரிக உடையா, பெண்ணின் சிவப்புநிறக் குடையா, அவளது மேடிட்ட வயிற்றை மறைத்திருந்த உடுப்பின் விநோத வடிவங்களா எது அந்தப்பசுவை வெறுப்பேற்றியது என்று தெரியவில்லை. அது அவர்களை நோக்கி ஆத்திரத்துடன் முன்னேறியது. பசுவை முதலில் பார்த்த பகட்டுக்காரன், தன் மனைவியை அம்போவென அங்கேயே விட்டுவிட்டு உடனடியாய் வேலியின் வாயிற்புறத்தை நோக்கி ஓடித் தப்பிவிட்டான். மலாக்கி மட்டும் சமயத்தில் வந்திருக்காவிட்டால் அப்பெண்ணின் கதி அதோகதிதான். அவள்  ஆபத்திலிருப்பதை உணர்ந்தநொடியே நிராயுதபாணியாக முரட்டுப்பசுவை எதிர்கொண்டான் மலாக்கி.

போராட்டம் நெடுநேரம் நீடிக்கவில்லை. ஒரு உறுமல், ஒரு சீறல்…  புழுதிப்படலத்திலிருந்து வெளிவந்த பசு ஒரே பாய்ச்சலில் தன் கன்று மறைந்திருக்கும் குறுங்காட்டுப் பகுதியை நோக்கி ஓடிப்போனது.  

நாங்கள் மலாக்கியை வீட்டுக்குள் தூக்கிவந்து படுக்கவைத்தோம். அடிவயிற்றில் காயம் மிக ஆழமாயிருந்தது. தண்ணீரைப்போல் நிற்காமல் வெளியேறிய குருதி கட்டுக்களை நனைத்துக்கொண்டிருந்தது. நாங்கள் எங்களால் இயன்ற எல்லாவற்றையும் செய்தோம். பையன்கள் குதிரைகளை அடித்துவிரட்டிக்கொண்டு மருத்துவரை அழைக்கச் சென்றார்கள். ஆனாலும் பயனில்லை. மலாக்கியின் வாழ்க்கையின் கடைசி அரைமணி நேரத்தில் நாங்கள் அனைவரும் அவனுடைய படுக்கையைச் சுற்றிக் குழுமியிருந்தோம். அவனுக்கு வயது இருபத்தியிரண்டுதான்.

அவன் சிரமத்துடன் சொன்னான், “என் அம்மா இனி எப்படி சமாளிப்பாள்?”

ஏன்? உன் அம்மா எங்கே இருக்கிறாள்?” யாரோ மென்மையாய்க் கேட்டார்கள்

மலாக்கியை நேசிக்கவும், பெருமிதப்படவும் இந்த உலகத்தில் யாராவது இருப்பார்கள் என்று நாங்கள் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.

பாதர்ஸ்டில் இருக்கிறாள்அவன் தொய்ந்த குரலில் சொன்னான், “அவள் மோசமாக பாதிக்கப்படுவாள். அவள் என்மேல் அளவுகடந்த பிரியம் வைத்திருக்கிறாள், நானும் அவளுமாகத்தான் கடந்த பத்து வருடங்களாக குடும்ப பாரத்தை இழுத்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் என் தம்பி ஜிம்முக்கு எல்லாவற்றையும் சரியாக அமைத்துத்தர விரும்பியிருந்தோம். ஆனால்பாவம் ஜிம்!”

 “ஏன், ஜிம்முக்கு என்ன?” யாரோ கேட்டார்கள்.

அவனுக்குப் பார்வை கிடையாது. அவன் வளர்ந்து பெரியவனாகும்போது அவனுக்குத் தேவையான எல்லாவற்றையும் சரியாக அமைத்துக்கொடுக்க வேண்டுமென்று நாங்கள் நினைத்தோம். நான் எப்படியாவது வருடத்துக்கு நாற்பது பவுண்டுகள் அனுப்பிக்கொண்டிருந்தேன். ஒரு சின்ன இடம் வாங்கியிருந்தோம். ஆனால்.. ஆனால்.. நான் இப்போது போகிறேன். ஹாரி.. அவர்களிடம் சொல்.. இது எப்படி நடந்…” 

நான் வெளியே வந்துவிட்டேன். என்னால் இதைத் தாங்கமுடியவில்லை. என் தொண்டைக்குழியில் ஏதோ அடைத்தது. மலாக்கியை வேதனைப்படுத்திய வேடிக்கைகளிலிருந்து என்னுடைய பங்கை அழித்துவிட விரும்பினேன். ஆனால் இப்போது காலம் கடந்துவிட்டிருந்தது

நான் மீண்டும் உள்ளே சென்றபோது மலாக்கி இறந்துவிட்டிருந்தான். அன்றிரவு பண்ணைமுதலாளியின் பணத்தோடு கூடுதலாய் வசூலித்தபடி அவனுடைய தொப்பி அனைவரிடமும் ஒரு சுற்று போய்வந்தது. அதைக்கொண்டு நாங்கள் மலாக்கியின் தம்பி ஜிம்முக்குத் தேவையான எல்லாவற்றையும் சரியாக அமைத்துக்கொடுத்தோம்.

****************

(ஆஸ்திரேலியப் பிரபல கவிஞரும் கதாசிரியருமான ஹென்றி லாசன் (1867-1922) எழுதிய  The Story of Malachi  என்னும் ஆங்கிலக் காடுறை கதையின் தமிழாக்கம்)

(படம்: நன்றி இணையம்)

19 April 2014

கட்டுரைப் போட்டியில் மூன்றாம் பரிசு

வணக்கம் நண்பர்களே...

தைப்பொங்கலை முன்னிட்டு ரூபன் பாண்டியன் இணைந்து நடத்திய மாபெரும் கட்டுரைப் போட்டியில் 'இன்றைய சினிமாவும் சமூக பாதிப்புகளும்' என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட என் கட்டுரை மூன்றாம் பரிசு பெற்றுள்ளது என்பதை, தொடர்பரிசுகளால் மகிழும் இவ்வேளையில் அறிவிப்பதில் மேலும் மகிழ்கிறேன். 

கட்டுரைக்கான கால அவகாசம் கடைசித்தருணத்தில் கவனத்துக்கு வர அவசர அவசரமாக எழுதிப் பதிவிட்டேன். நான் எழுத நினைத்திருந்த இன்னும் சில விஷயங்கள் கட்டுரையில் விடுபட்டுப்போயின என்பதை நண்பர்கள் பின்னூட்டக் கருத்துரைகளின்மூலம் எடுத்துரைத்தபோது உணர்ந்தேன். அனைவருக்கும் என் அன்பான நன்றி. 


எடுத்துக்கொண்ட தலைப்பை ஒட்டிய என் எண்ணவோட்டங்களைத் தெளிவாகவே முன்வைத்தேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் உள்ளது. சிந்தனையை செப்பனிடும் வகையில் சிறப்பான களம் அமைத்துக் கொடுத்து, பலருடைய எழுத்துத் திறமையையும் வெளிக்கொணரும் வகையில் நல்லதொரு நட்புணர்வுடன் நடத்தப்பட்ட இப்போட்டியின் மூலம் வலையுலக நட்புறவு பலப்படுத்தப்பட்டிருக்கிறது என்றால் மிகையில்லை. 

 ஆக்கபூர்வமானதொரு போட்டியை அறிவித்து, 
அதை முன்னிறுத்தி சிறப்பாக நடத்திய 
சகோதரர் ரூபன் அவர்களுக்கும் 
சகோதரர் பாண்டியன் அவர்களுக்கும் 
மற்றும் பின்னணியில் உழைத்த 
திரு. ரமணி சார் அவர்களுக்கும் 
சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் 
மற்றும் பல நண்பர்களுக்கும் 
மனமார்ந்த பாராட்டுகள். 


பொறுப்பினைத் திறம்பட வகித்து
பரிசுக்குரிய கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துள்ள நடுவர்கள் 
கவிஞர் திரு. முத்துநிலவன் அவர்கள், 
கவிஞர் திரு.இராய செல்லப்பா அவர்கள், 
விஞர் திரு. வித்யாசாகர் அவர்கள் 
அனைவருக்கும் நம் உளப்பூர்வ நன்றி. 







பரிசு பெற்ற சக பதிவர்களுக்கும், கலந்துகொண்ட அனைவருக்கும் இதயப்பூர்வ நல்வாழ்த்துக்கள். 


பதிவர் திறமையை மேம்படுத்தச் செய்வதான 
முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் 
பதிவுலகின் சார்பில் பாராட்டுகள்!
***************
(படங்கள்: நன்றி இணையம்)

14 April 2014

சிறுகதை விமர்சனப் போட்டிகளில் ஹாட்ரிக் பரிசு.

வணக்கம் நண்பர்களே!
அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

பரிசுமழை  பரிசுமழை என்பார்களேஅந்த மழையில்தான் சொட்டச்சொட்ட நனைந்து மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கிறேன். மழையில் நனைந்த பின்னும் மடக்க மனமின்றி தோகை விரித்தாடிக்கொண்டிருக்கிறது மனமயில். 



திரு.வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களின் தளத்தில் நடத்தப்பெறும் சிறுகதை விமர்சனப் போட்டியை அனைவரும் அறிவீர்கள் அல்லவா? 



எழுத்துழவர்களான நம்மனைவருக்கும், தனக்கு உரித்தான சிறுகதைகளென்னும் பண்பட்ட நன்னிலத்தை பெருந்தன்மையுடன் வழங்கி, விமர்சனமென்னும் விதைகளை மட்டும் நம்மைத் தூவச்செய்து, ஊக்கமெனும் உரமளித்து, உற்சாகமெனும் நீர்பாய்ச்சி, அக்கறையுடன் வளர்த்து, தானே அறுகூலி தந்து, பரிசெனும் அறுவடைகளை நம்மை அனுபவிக்கச் செய்யும் பதிவுலக மிராசுதாரரான கோபு சார் அவர்களுக்கும் வாராவாரம் சிறந்த விமர்சனங்களை, முகம் காட்டாது தன் அகம் காட்டி செவ்வனே தேர்வுசெய்யும் நடுவர் அவர்களுக்கும் இவ்வேளையில் என் நன்றியையும் பாராட்டுகளையும் இனிதே தெரிவித்து மகிழ்கிறேன்.

இதுவரை நடத்தப்பெற்றுள்ள 10 போட்டிகளில் 8 போட்டிகளில் கலந்துகொண்டு மூன்று முதல் பரிசுகளும் மூன்று இரண்டாம் பரிசுகளுமாக மொத்தம் 6 பரிசுகள் பெற்றுள்ளேன் என்பதோடு கோபு சாரின் சிறப்புப் பரிசு அறிவிப்பான ஹாட்ரிக் பரிசையும் வென்றுள்ளேன் என்பதை நினைக்கையில் எனக்கே வியப்பாக உள்ளது

இந்த விமர்சனப் போட்டியானது எழுதுபவர்களின் எழுத்துத்திறமையோடு தன்னம்பிக்கையையும் வலுப்படுத்துகிறது என்பது உண்மை. இதுவரை விமர்சனப்பாதையில் அடியெடுத்து வைக்கத் தயங்கியிருந்த என்னை வழிநடத்துகின்றன நடுவர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் விமர்சனங்களும் (முக்கியமாய் ரமணி சார் அவர்களின் விமர்சனங்கள்), விமர்சனங்களுக்கான விமர்சனங்களாய் வரும் பின்னூட்டங்களும் (முக்கியமாய் ஜீவி சார் அவர்களின் பின்னூட்டங்கள்).

திரு.வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், விமர்சனங்களுக்குரிய கதைகளின் சுட்டிகளையும் பரிசுகளுக்கு உரியவையாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட என் விமர்சனங்களின் சுட்டிகளையும் எனது மீள்பார்வைக்கென ஒரு தொகுப்பாய்த் தொகுக்கவிரும்பியதன் விளைவாகவும் உருவாகியுள்ளது இப்பதிவு.






















பல்வேறு அற்புதமான பதிவர்கள் கலந்துகொள்ளும் இப்போட்டியில் எனக்கும் ஒரு சிறப்பான இடம் கிடைத்திருப்பதில் அளவில்லாத மகிழ்ச்சி. பல்வேறு விமர்சனங்களையும், விமர்சனம் குறித்த கருத்துக்களையும் இன்னும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது. சிந்திக்கவும் எழுதவும் ஆயாசமாயிருக்கும் சில தருணங்களில், இப்போட்டியை நடத்தும் கோபு சாரின் கடுமையான உழைப்பையும் கணக்கானத் திட்டமிடலையும், நேர்த்தியான நேரமேலாண்மையையும் நினைத்துக்கொள்வேன். அடுத்தநொடியே ஆயாசமெல்லாம் பறந்துபோய் உற்சாகமாய் உள்ளம் தயாராகிவிடும். 

பதிவுலகில் ஒரு சிறப்பான முன்னுதாரணமாய்த் திகழும் 
கோபு சார் அவர்களுக்கு 
அளவிலாத நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வதில் மிகவும் மகிழ்கிறேன். 

நம் அனைவரின் சார்பிலும் அவருக்கு ஒரு அழகானப் பூங்கொத்து!



வாருங்கள் நட்புக்களே… தொடர்ந்து களமிறங்குவோம்… 
நம் எழுத்துத்திறனை ஏற்றம் பெறச்செய்வோம்.  

**************************

(படங்கள்: நன்றி இணையம், நன்றி கோபு சார்)


தொடர்ந்து வாசிக்க...
இரண்டாவது சுற்று பரிசுகள்