20 February 2014

இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்




இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும் என்னும் 
தலைப்பே கட்டுரையின் சாராம்சத்தை சொல்லிவிடுகிறது. இன்றைய சினிமாவின் போக்கால் சமூகம் பாதிப்புக்காளாகிறது என்பது எவரும் மறுக்கவியலாத உண்மை. தலைப்பில் சினிமா என்று பொதுவாக இருப்பதால் அது குறிப்பது தமிழ்த் திரைப்படங்களையா? இந்தியத் திரைப்படங்களையா? அல்லது உலகத் திரைப்படங்களையா? என்று ஆரம்பம் முதலே ஒரு தடுமாற்றம் இருந்தது. ஒரு தமிழ் இணையதளத்தில் நடத்தப்படும் ஒரு போட்டி என்பதாலும் உலக சினிமா பற்றிய அலசலை முன்வைக்கும் தகுதி எனக்கில்லை என்பதாலும் தமிழ்த் திரைப்படங்களைக் குறிப்பதாகவே எண்ணிக்கொண்டு களத்தில் இறங்கிவிட்டேன்.

திரைப்படம் என்பதே சமூகத்தின் பிரதிபலிப்புதானே என்று ஒருசிலர் வாதிடலாம். அதில் ஓரளவு உண்மை இருந்தாலும் முற்றிலும் உண்மையாகிவிடாது. சமூகத்தைப் பிரதிபலிக்கும் எத்தனையோ நல்ல சிறப்பான அம்சங்கள் இருக்க, சமூகத்தைப் பாதிக்கும் அம்சங்கள் மட்டுமே பிரதானப்படுத்தப்படுவது வருத்தத்துக்குரிய விஷயம். எங்கோ நம் கண்ணுக்குத் தெரியாமல் நடந்துகொண்டிருக்கும் சமுதாயச் சீர்கேடு ஒன்றைக் காட்டுகிறேன் என்று துவங்கி, இறுதியில் ஒட்டுமொத்த சமுதாயமும் சீர்கெட்டது என்ற தீர்ப்பை வழங்குதல் நியாயமன்று. எல்லாத் திரைப்படங்களும் அப்படித்தானா என்றால் இல்லை, ஆனால் நூற்றுக்கு தொண்ணூறு படங்கள் அப்படித்தான் உள்ளன. அவற்றைப் பற்றிய என் பார்வையே இது.

இன்றைய பல திரைப்படங்கள் தவறான உதாரணங்களை முன்வைத்து இளைஞர்களைத் தவறான பாதைகளில் திசைதிருப்பிவிடுகின்றன. இன்றைய இளைஞர்களுக்கு அவர்கள் ஆண்களாகட்டும், பெண்களாகட்டும்எதையும் நின்று நிதானித்து யோசிக்க அவகாசமில்லை. அவசர யுகத்தில் வாழ்கிறார்கள். சரியான புரிதல்களும் தெளிவான சிந்தனைகளும் காலங்கடந்தபின்னரே கவனத்துக்கு வருகின்றன. ஆனால்அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை மிக அதிகம். உடல்நலம் கெட்டு, மனநலம் கெட்டு, கைப்பொருள் இழந்து, நிம்மதி இழந்து, உறவுகளை இழந்து, இறுதியில் தங்கள் வாழ்க்கையையே தொலைத்து நிற்கிறார்கள். அதற்கு சினிமா போன்ற ஊடகங்களின் பங்கு பெரும்பான்மை என்றால் அது மிகையில்லை. திரைகளில் அவர்கள் தங்களையே பார்க்கிறார்கள். எப்படி ஒரு இல்லத்தரசி மெகா தொடர்களைப் பார்த்து மனம் பேதலித்து அதில் தன் வாழ்க்கையைப் பிணைத்துக்கொண்டு மன நிம்மதி இழந்து தவிக்கிறாளோஅதற்கு துளியும் குறைவிலாத அவலம் திரைப்படங்கள் மூலம் இளைய தலைமுறைக்கு நேர்கிறது.

இன்றைய தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனைப் பற்றிய ஒரு மோசமான சூத்திரம் உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதை சமீபகாலமாக நாம் பார்க்கும் சில திரைப்படங்கள் மூலம் உணரமுடிகிறது. பழைய திரைப்படங்களில் கதாநாயகன் என்பவன் அன்பு, பண்பு, பாசம், தியாகம், லட்சியம், வள்ளன்மை போன்ற பல உயரிய குணங்களைக் கொண்டவனாக இருந்தான். ஒருசில படங்களில் ஆரம்பத்தில் கெட்டவனாக இருக்கும் கதாநாயகன், ஏதோவொரு சந்தர்ப்பத்தில் திருந்தி, நல்லவனாக மாறிவிடுவான். சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் கூட, கதாநாயகன் என்பவன் உத்தமனாய் இல்லாவிடினும், ஓரளவு நல்லவனாய், மனசாட்சிக்குப் பயந்தவனாய், சந்தர்ப்ப சூழலினால் மட்டுமே தவறிழைப்பவனாய் காட்டப்பட்டுக்கொண்டிருந்தான்.

ஆனால் இப்போது….  கதாநாயகன், உலகத்திலுள்ள அனைத்து அயோக்கியத்தனங்களும் கொண்டவனாக இருக்கிறான். வில்லனை விடவும் மோசமானவனாக சித்தரிக்கப்படுகிறான். எந்த சிக்கலும் இல்லாத ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் கதாநாயகி, அவனுடைய அயோக்கியத்தனத்தாலேயே ஈர்க்கப்பட்டு விரட்டி விரட்டி காதலிக்கிறாள். இது போன்ற திரைப்படங்களைப் பார்க்கும் விடலைகள் மனத்தில்ஓஹோஇப்படியிருந்தால்தான் பெண்பிள்ளைகளுக்குப் பிடிக்கும்போலும் என்னும் எண்ணம் வேர்விட ஆரம்பித்துவிடலாம். இல்லாத பழக்கங்களைக் கற்றுக்கொள்ள இத்திரைப்படங்கள் ஒரு தூண்டுதலாக அமைந்துவிட பெரும் வாய்ப்பு உள்ளது.

காதல் என்ற சொல்லுக்கு இந்த திரைத்துறையினர் கொடுக்கும் விளக்கங்களும் வியாக்கியானங்களும் இருக்கிறதேஅப்பப்பாரம்யமான அந்த உணர்வை ரம்பத்தால் அறு அறு என்று அறுத்து குருதி வடியத் தொங்கவிட்டுவிடுகிறார்கள். காதலைக் கடைபரப்பி விற்கிற அந்த வியாபாரிகளிடம் எல்லாம் இருக்கிறது, காதலைத் தவிர என்பது விநோதம். காதல் மீதான மதிப்பைக் கூட்டுவதாக இல்லையென்றாலும் பரவாயில்லை, இழிவுபடுத்துவது போல் எத்தனைப் படங்கள்!
காதல் மட்டுமா? காதலும் நட்பும்தான் இன்றைய திரைத்துறை கையிலெடுக்கும் கருக்கள். அவற்றைத் தாண்டிய உணர்வுகளும் வாழ்க்கையும் ஒரு பொருட்டே இல்லை அவர்களுக்கு.

காதலைப் போலவே நட்பையும் கொச்சைப்படுத்தும் திரைப்படங்கள் ஏராளம். கூடிக் குடிப்பதும், கும்மாளமிட்டுக் களிப்பதும், ஒருவரை ஒருவர் கவிழ்ப்பதும் காட்டிக்கொடுப்பதும்தான் தான் நட்பின் இலக்கணங்களென்று இன்றைய தமிழ்த் திரைப்படங்கள் வரையறுத்து வைத்திருக்கின்ற போலும்.

பெரும்பான்மைத் திரைப்படங்களில் இளைஞர்கள் எப்படிப்பட்டவர்களாகக் காட்டப்படுகிறார்கள்? குடிப்பதும், புகைப்பதும்தான் நாகரிகம், அதுதான் வாழ்க்கை என்று காட்டி, எந்தவிதக் கெட்டப் பழக்கங்களும் இல்லாத ஒருவனுக்கு, தான் வாழவே தகுதியில்லாதவன் என்ற தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் இழிசெயலைப் பெரும்பாலான திரைப்படங்கள் தவறாமல் செய்கின்றன. அரிதிலும் அரிதாய் ஒருசில நல்ல திரைப்படங்கள் வந்து நட்பின் பெருமை காட்டி ஆறுதல் தருகின்றன.

இன்றைய நாட்களில் மதுவருந்தும் காட்சி இல்லாத திரைப்படத்தைக் காண்பதே அரிதாகிவிட்டது. உணவுண்ணுதல், புத்தகம் வாசித்தல், ஒட்டடை அடித்தல் போன்று அதுவும் வாழ்க்கையில் ஒரு அங்கம் என்பதுபோல் வெகு அலட்சிய மனோபாவத்துடன் காட்டப்படுவது கூட நமக்கும் பழகிவிட்டது என்றே நினைக்கிறேன். அதுபோன்ற காட்சிகளில் மதுவருந்துவது/புகைப்பது உடல்நலத்துக்குக் கேடு என்று ஒரு ஸ்லைடு போடுவார்கள். அவனோ அவர்களோ புகைத்துக்கொண்டிருக்கிறான்/கிறார்கள் என்பது அதுவரை நம் கவனத்துக்கு வந்திருக்காது. ஸ்லைடைப் பார்த்தவுடன்தான் தோன்றும். அடஆமால்ல…..

ஒன்றல்ல, இரண்டல்ல, பல திரைப்படங்களில் பார்த்த காட்சி ஒன்று. ஐந்து பேர் குடிக்கையில் ஒருத்தன் மட்டும் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் மற்ற நால்வரும் சேர்ந்து அவனால் ஆண்வர்க்கத்துக்கே அவமானம் என்பதுபோல் அவனைக் கேலி பேசி எப்படியும் குடிக்கவைத்துவிடுவார்கள். அதன் மூலம் குடிப்பதுதான் ஆண்பிள்ளைக்கு அழகு என்று ஒரு தவறான கற்பிதம் இளைஞர்களின் மனத்தில் ஆழமாக பதியவைக்கப்படுகிறதல்லவா?

இந்த இடத்தில் நான் ஒன்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும். குடி குடி என்று குடி முழுகிப் போவது போல் புலம்புகிறாயேமேலை நாடுகளில் எல்லோரும்தான் குடிக்கிறார்கள். குடிப்பதென்ன அவ்வளவு பெரிய குற்றமா என்று கேட்பீர்களாயின் ஒருசில வார்த்தைகளை உங்களுடன் பகிரவிரும்புகிறேன்.

மேலை நாடுகளில் நிதானம் தெரியாமல் வயிறு முட்டும் அளவுக்கு குடித்துவிட்டு வாந்தி எடுப்பதும், தெருக்களில் விழுந்து கிடப்பதும், போதையோடு வாகனங்களை ஓட்டி விபத்து உண்டாக்குவதுமான நிகழ்வுகள் மிக சொற்பமே. அதற்கான சட்டங்களும் கடுமையாக இருப்பதால் மக்களிடம் பயம் இருக்கிறது. அதுபோல் ஒரு அலுவலக சந்திப்புகளிலோ, நட்புக் குழுமத்திலோ எவரும் எவரையும் குடிக்கச் சொல்லி வற்புறுத்துவதில்லை. மரியாதை நிமித்தம் குடிப்பதும் குடிக்காதிருப்பதும் அவரவர் விருப்பம். குடிப்பழக்கம் இல்லாதவர்களும், தாங்களே வாகனத்தை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பவேண்டியிருப்பவர்களும் பழரசங்களைப் பருகியபடி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது சர்வ சாதாரணம் அங்கு.

அடுத்து இன்றைய திரைப்படங்களில் நம்மை நெளியச்செய்யும் நெருடலான விஷயம் ஆபாசம். பாலியல் வேட்கையைத் தூண்டும்படியான வக்கிரக் காட்சிகளுக்குக் குறைவே வைப்பதில்லை பெரும்பான்மைப் படங்கள். பெண்கள் என்றாலே ஒரு போகப்பொருளாகக் காட்டப்படுவதன் விளைவுதான்  பாலியல் பலாத்காரங்களும், கழுத்தறுப்புகளும், அமில வீச்சுகளும். பெண்கள் மதிக்கப்படும்வண்ணம் திரைப்படங்கள் வெளிவரவேண்டும். ஆபாச வர்ணனைகள், இரட்டை அர்த்த வசனங்கள், அருவறுப்பான அங்க அசைவுகள் போன்றவை தவிர்க்கப்படவேண்டும். தரமான திரைப்படம் என்று சொல்லப்படுபவற்றில் கூட ஆபாசமான இடையசைவுகளும், அங்கக் குலுக்கல்களும், உதட்டுச் சுழிப்புகளும் கொண்ட பாடலொன்று இடைச்செருகலாக செருகிவிடப்படுகிறது. வியாபார நோக்கத்துக்காக என்னும் ஒரு காரணத்தை முன்வைத்தால்…. அது நம்மை நாமே பேரம் பேசும் இழிநிலையைத்தான் காட்டுகிறது.

இளம்பெண்களுக்கு அரைகுறை ஆடைகளும் நுனிநாக்கு ஆங்கிலமும் தான் அழகென்று திரைப்படங்கள் அறிவுறுத்துகின்றன. ஆடவருக்கிணையாய் குடிப்பதிலும், நள்ளிரவு நடனக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதிலும்தான் சம உரிமை இருக்கிறதென்னும் அறியாமை அவர்களுள் தலைதூக்குகிறது. இப்படித்தான் வாழவேண்டுமென்ற வரைமுறையெல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டு எப்படியும் வாழலாம் என்று போதிக்கப்படுகிறது.

பொது நிகழ்ச்சிகளில் குடும்பப்பெண்கள் குத்தாட்டம் போடுவதைப் பற்றி சில நாட்கள் முன்பு சில பதிவுகளில் வாசிக்க நேர்ந்தது. இதுவும் திரைப்படத்தின் தாக்கம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது? ஊரே தலையில் வைத்துக் கொண்டாடும் அளவுக்குப் பெரிய மனிதர், செல்வந்தர், செல்வாக்குடையவர்அவ்வளவு ஏன், நாட்டாண்மை என்றே வைத்துக்கொள்வோமே. ஊர்த்திருவிழாவின்போது பாட்டுப்பாடி ஆட்டமாடிக் கொண்டாடும் ஊராரின் மத்தியில் அந்த பெரிய மனிதரின் மனைவியும் ஒரு கட்டத்தில் தன்னை மறந்து குத்தாட்டம் போட்டுவிட்டு பிறகு வெட்கப்பட்டுக்கொண்டு நிற்பதையெல்லாம் ரசிப்புடன் ஏற்றுக்கொள்ளும் சனம் தங்களையும் ரசிக்கும் என்ற எண்ணம் அப்பெண்களுக்குத் தோன்றியிருக்கலாம்.

அடுத்து குழந்தைகளிடம் வருவோம். குழந்தைகளும் திரைப்படங்களைப் பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து சமூகப் பொறுப்புடன் படமெடுப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா? ஒரு திரைப்படத்தை தியேட்டருக்குப் போய்த்தான் பார்க்கவேண்டும் என்ற அவசியம் இப்போது இல்லை. எவ்வளவு புதிய திரைப்படமாயிருந்தாலும் உலகத் தொலைக்காட்சிகளிலேயே முதன்முறையாக ஏதாவதொரு சானலின் மூலம் வீட்டுக்குள் வந்து தன்னைத் தானே திரையிட்டுக்கொள்கிறது. ரேட்டிங் பற்றிய சிந்தனையின்றி குழந்தைகள் முதல் பெரியவர் வரை கூடியமர்ந்து பார்த்துக் களிக்கிறோம். அதில் வரும் வன்முறைக் காட்சிகள் குழந்தைகள் மனத்தில் எந்த அளவுக்கு பாதிப்பை உண்டாக்குமென்று என்றைக்காவது எண்ணிப்பார்த்திருக்கிறோமா
   
கையை காலை வெட்டுவதும், கழுத்தறுப்பதுமான காட்சிகளை கொஞ்சமும் விவஸ்தையின்றி குளோசப் காட்சிகளாக வேறு காட்டுகிறார்கள். இலை மறை காய் மறைவாக காட்டவேண்டியவற்றையெல்லாம் தலை முதல் கால் வரை காட்டி அருவறுப்பை உண்டுபண்ணும் போக்கை என்னவென்பது?

வன்முறை பற்றி சொல்லும்போது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. தங்கள் படங்களில் வன்முறையை வரைமுறையின்றிக் காட்ட நினைப்பவர்களுக்கு ஒரு சப்பைக்கட்டுதான் மதுரை சப்ஜெக்ட். கதைக்களம் மதுரை என்று வைத்துவிட்டால் போதும், யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் வெட்டலாம், குத்தலாம், கொல்லலாம். மதுரைக்காரர்களே கையெடுத்துக் கும்பிட்டு, “ஐயாஎங்களை விட்டுவிடுங்கள். மதுரையைப் பற்றியும், மதுரை மக்களைப் பற்றியும் இப்படி அநியாயமாக அவதூறு பரப்பாதீர்கள்என்று கெஞ்சியும் விடுவதாக இல்லை மதுரையை வைத்து காசு பார்ப்பவர்கள். புதிதாக தமிழகம் வருபவர்கள் மதுரைக்குப் போகுமுன் இதுபோன்ற இரண்டு திரைப்படங்களைப் பார்த்தால் போதும். மதுரைப் பக்கம் தலைவைத்தும் படுக்கமாட்டார்கள்.

அளவுகடந்த வன்முறைக் காட்சிகளைப் பார்த்துப் பார்த்து ஒரு கசாப்புக்காரனின் மனநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம் நாம். முன்பின் அறிந்திராத ஒருவரின் மரண ஊர்வலம் கூட நம் மனத்துள் மெல்லிய அதிர்வை உண்டாக்கும். ஆனால்மரண வீட்டிலும் குத்துப்பாட்டு போட்டு சிரிக்கவைக்க முயற்சி செய்கிறார்கள் இன்றைய இயக்குநர்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசிப்பதைப் பார்க்கும்போது உள்ளுக்குள் எழுகிறது ஒரு கேள்வி. மரணத்தின் மதிப்பு அவ்வளவுதானா?

அன்றைய திரைப்படங்கள் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து மக்களை ஒன்றாக வாழவைக்கும் முயற்சியை செய்தன. இன்றைய சில திரைப்படங்களோ, ஒற்றுமையாய் வாழ்ந்துகொண்டிருக்கும் மனங்களில் பிரிவினையை உண்டாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.   

திரைப்படங்கள் என்பவை வாழ்வியலின் அழகைக் கூட்டுவதாக, வாழ்க்கைத் தத்துவத்தைக் காட்டுவதாக இருக்கவேண்டும். உறவுகளுக்கிடையிலான மெல்லிய மனவோட்டங்களைச் சொல்வதாக, சமுதாய அமைப்பின் சிக்கல்களை உணரச் செய்வதாக, வாழ்ந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கத் தூண்டுவதாக, சிறந்த பொழுதுபோக்கம்சம் கொண்டதாக, நெகிழவைப்பதாக, மகிழவைப்பதாக, ரசிக்கத்தக்கதாக,  புத்துணர்வூட்டுவதாக, புரட்சிகரமானதாக, மாறுபட்ட சிந்தனைகளை உருவாக்குவதாக, முரண்பட்ட களங்களை மையப்படுத்துவதாகஎன்று வித்தியாசமான ரசனைகளை ரசிகனுக்கு அறிமுகப்படுத்தவேண்டும். ஐந்து நிமிடக் குறும்படங்களிலேயே மேற்சொன்ன அனைத்தையும் சாதித்துக் காட்டமுடிகிறது என்னும்போது இரண்டுமணி நேரத் திரைப்படங்களில் எவ்வளவு சாதிக்க முடியும்?   

மாறாகசமூக நடவடிக்கைகளுக்குப் புறம்பான பல காட்சிகளை யதார்த்தம் என்ற போர்வையில் காட்டும் திரைப்படங்கள், சமூகம் பற்றிய ஒரு மாயையை மக்கள் மனத்தில் சிருஷ்டிக்க முனைகின்றன. மிகையெது, யதார்த்தமெது என்று பிரித்துணர இயலாது மயங்கி நிற்கும் இளைய சமுதாயத்தை எளிதில் வெற்றிகொள்கிறது மிகையாளுமை. படாடோபமற்ற யதார்த்தங்கள் புறக்கணிக்கப்பட்டு மதிப்பற்றுப் போதலும்  பளபளக்கும் ஜரிகை வேலைப்பாட்டுடனான மிகைப்படுத்தல்களும் அசாதாரணக் கற்பனைகளும் பிரதானத்துவம் பெறுதலும் காலத்தின் கோலம். இந்நிலை மாறவேண்டுமெனில், குறைந்தபட்சம் திரைப்படங்கள் வேறு, சமூக அமைப்பு வேறு என்று பிரித்தறியும் மனப்பாங்காவது நம்மிடையே உருவாதல் வேண்டும். 

**************

(தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபனின் எழுத்துப் படைப்புகள் தளத்தில் நடைபெறும் மாபெரும் கட்டுரைப் போட்டியில் பங்கேற்பதற்கான கட்டுரை) 


(படம் நன்றி: இணையம்)

47 comments:

  1. பின்னூட்டத்தில் எடுத்துச் சொல்ல எந்த விஷயத்தையும் விட்டு வைக்காமல் எல்லா விஷயங்களையும் அலசி, ஆராய்ந்து, துவைத்துக் காயப் போட்டு விட்டீர்கள். உண்மையிலேயே மிகவும் வருத்தப்படவைக்கும் சூழ்நிலையிலேயே இன்றைய திரைப்படங்கள் இருக்கின்றன. நிறைய உதா'ரணங்கள்' சொல்லலாம். பெற்றோரையும் பெரியோரையும் மதிக்கும் பழக்கத்தைக் கூட சொல்லித் தருவதில்லை சினிமாக்கள். உடல் ஊனமுற்றோரை வைத்து புனையப்படும் காமெடி என்ற பெயரிலான வக்ரங்கள்..

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  2. வணக்கம்
    சகோதரி..
    போட்டிக்குரிய தங்களின் கட்டுரை வந்து கிடைத்து விட்டது.. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. கட்டுரை மிகச்சிறப்பாக உள்ளது. தற்போது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியாக அறியத்தருகிறேன். போட்டியில் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள். சகோதரி.

    ............................................................................................................................................

    ேகுறிப்பு-
    நடுவர் குழுவை ஒத்த முடிவுகளைத் தேர்வுசெய்யும் மூன்று வாசகர்களுக்கும் பரிசு உண்டு. . அதனால், ஒவ்வொரு பதிவரின் கட்டுரையில், நீங்கள் இடும் சிறப்பான பின்னூட்டங்களும் கருத்தில் கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. Anonymous20/2/14 11:40

    வணக்கம்
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. கீதா சகோ ன கீதாக்கா தான் கலக்கிடிங்க ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  5. அபாரம். தமிழ் சினிமா களையிழந்து போய்விட்டதன் பிரதிபலிப்பே இன்றைய கேடுகெட்ட படங்களின் அணிவகுப்பு. எதையும் மிச்சம் வைக்காமல் கோர்வையாக உங்களின் எண்ணங்களை தெளிவான நடையில் எழுதியிருப்பது சிறப்பு. தமிழ் சினிமாவின் தற்போதைய போக்கு வெகு விபரீதமான நிலைக்கு போய்க்கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன். ஆனால் இனிமேலும் நல்ல கதை கொண்ட படங்கள் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கும்படியான படங்கள் வரும் என்ற நம்பிக்கை கொஞ்சமும் என்னக்கில்லை. சினிமாவை ஒதுக்கிவைக்க வேண்டிய நிலை கூட வரலாம். நல்ல சிறப்பான கட்டுரைக்கு பாராட்டுக்கள். அதுசரி படங்கள் மட்டுமா இன்றைய பாடல்கள் பற்றியும் ஓரிரு பத்திகள் எழுதியிருக்கலாமே?

    ReplyDelete
  6. அசத்தல் கீதா! ஒரு லாயர் ஜட்ஜ் கிட்ட கோர்வையா வாதாடற மாதிரி எந்த ஒரு பாயிண்ட்டையும் விடாம வரிசைப்படுத்தினது வெகு அழகு! ‘குடிக்கிறத காட்டக் கூடாது, புகைக்கிறதக் காட்டக் கூடாது, பெண்களை இழிவுபடுத்தக் கூடாது... பின்ன இதெல்லாம் இல்லாம படமெடுத்தா ஜனரஞ்சகமா எப்படிம்மா வரும்?’ன்னு யாராவது சினிமாத் துறையினர் கேட்டா.... ‘இதெல்லாம் இல்லாமலே எத்தனையோ ஜனரஞ்சகமான படங்களைக் குடுத்து வெற்றிகளைக் குவிச்சாரே மக்கள் திலகம்’ன்னு சொல்லலாம். இப்ப உதாரணம் சொல்லக்கூட ஆளில்ல...! மதுரைக்காரங்களை வன்முறைக்காரங்களாக் காட்டற விஷயத்துல உங்க வரிகளோட நான் 200 சதம் பொருந்திப் போறேன்!

    ReplyDelete
  7. தமிழ் சினிமா சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பற்றி அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.தமிழ்நாட்டு ஹீரோக்கள் மாஸ். என்ற பெயரில் செய்யும் கோமாளிக்கூத்துகளைப் பற்றியும் அதனால் கவரப்பட்டு ரசிகர் மன்றம் தொடங்குதல்,கட்டவுட்டுக்கு பால் வார்த்த்தல்,எந்த ஹீரோ பெரிசு என்று சண்டைபிடித்தல் போன்ற விடயங்களில் ஈடுபடும் இளைஞர்கள் பற்றியும் ஆபாச வார்த்தைகளை பச்சையாக உபயோகிக்கும் பாடல் கள் தொடரபிலும் ஓரிரு வார்த்தைகளாவது குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து

    ReplyDelete
  8. @ஸ்ரீராம்.
    உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். நிறைய நினைத்தேன். எழுதும்போது தவறவிட்டுவிட்டேன். குறிப்பிட்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  9. @ரூபன்

    கட்டுரை கிடைத்துவிட்டதை உடனடியாக உறுதிப்படுத்தியமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரூபன். பின்னூட்டம் பற்றிய குறிப்புக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  10. @2008rupan

    மீண்டும் நன்றி ரூபன்.

    ReplyDelete
  11. @Mythily kasthuri rengan

    என்னத்தைக் கலக்கினேன். நண்பர்களின் பின்னூட்டங்களைப் பார்த்தாலே தெரியுமே நிறைய தகவல்களைத் தவறவிட்டிருப்பது. இருப்பினும் உங்கள் அன்பான வாழ்த்தை அகமகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறேன். நன்றி மைதிலி.

    ReplyDelete
  12. @காரிகன்

    தங்கள் கருத்துரை கண்டு மிக்க மகிழ்ச்சி. பல திரைப்படங்கள் மிக மோசமான தரத்தில்தான் உள்ளன. வெளிநாட்டில் இருந்துகொண்டு எப்போதாவது தமிழ்த்திரைப்படங்களின் பக்கம் பார்வையைச் செலுத்தும்போதே இப்படித் தோன்றுகிறதென்றால் முழுக்க முழுக்க சினிமாவின் பிடியில் சிக்கியிருக்கும் நம் மாநிலத்தின் நிலையை நினைக்கவே வேதனையாக உள்ளது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  13. @பால கணேஷ்

    உங்கள் கருத்துரை எனக்கொரு உற்சாக டானிக் போல் உள்ளது கணேஷ். வருகைக்கும் விரிவான கருத்துக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  14. @Dineshsanth S

    உண்மைதான். பாடல்கள் பற்றியும் ரசிகச் சண்டைகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கவேண்டும். வருகைக்கும் தவறவிட்டவற்றைச் சுட்டிக் கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி தினேஷ்.

    ReplyDelete
  15. பழைய படங்களையும் பழைய பாடல்களையும் பார்த்தும் கேட்டும்
    ரசித்த மனங்களுக்கு இப்போது உள்ள படங்களையும் பாடல்களையும்
    கேட்கவும் பார்க்கவும் கூச்சமாகவும் அதேசமையம் அருவருப்பாகவும்
    உள்ளது சகோதரி .அரை நிர்வாணமும் வெகு விரைவில் முழு நிர்வாண
    மாக காட்சி தரும் என்பதில் ஐயமில்லை.ஒரு படத்தையும் குடும்பத்தோடு
    சேர்ந்து பாக்க முடிவதில்லை .என் மன எண்ணத்தைப் பிரதி பலித்துக்
    காட்டும் சிறப்பான தங்களின் பகிர்வுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
    சகோதரி .

    ReplyDelete
  16. கை கொடுங்க கீதமஞ்சரி...நிறையப் பேருடைய மனதில் குமுறிக்கொண்டிருக்கும் எண்ணங்களை நேர்த்தியாக பூக்களைத் தொடுப்பதுபோல தொடுத்துவிட்டீர்கள்...ஒவ்வொன்றும் சரியான கருத்து...ஊடகத்திற்கு ஒரு பொறுப்புண்டு என்று ஊடகத்தில் இருப்பவர்கள் உணர வேண்டும்..திரைப்படத் துறையை காப்பாற்றுங்கள் என்று சொல்கிறார்கள்..குடும்பத்துடன் சென்று பார்க்கும் படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இரட்டை அர்த்த வசனங்களும் காமெடி என்ற பெயரில் கிறுக்குத்தனமும் அதிகப்படியான வன்முறையும்..சொல்றத சொல்லிட்டீங்க கீதா..செயல்படவேண்டியவர்கள் பார்த்து உணர்ந்து மாற்றம் வந்தால் நலமே!
    இதற்கு மேலே நல்ல கருத்துகளை முன்வைத்து நாகரிகமாக வந்திருக்கும் படங்களின் (சில என்றாலும்) நல்லமாதிரியான தாக்கங்களையும் சொல்லியிருக்கலாமோ..
    வெற்றிபெற வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  17. முதலில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி... இல்லையென்றால் கோபம் வந்திருக்கும்... (ஓஹோ... இன்றைக்கு கோபம் பற்றிய பகிர்வு எழுதி விட்டு இப்படி சொல்லக்கூடாது...! ஹிஹி...)

    அருமையாக மிகவும் சிறப்பாக கட்டுரை எழுதி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்... திரு. பால கணேஷ் கருத்துரையும் அருமை + உண்மை... பதிவின் இணைப்பை நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்...

    போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  18. என்னுடைய பல நாள் ஆதங்கம். எல்லா விஷயங்களையும் கோர்வையாக சொல்லி இருக்கிங்க. இப்போது வரும் கண்றாவிகளைப் பார்க்கும்போது தான் பழைய படங்களின் அருமை புரிகிறது.

    ReplyDelete
  19. இப்படி துவைத்து காயப்போட்டு விட்டார்களே என அவர்கள் திருந்தவா?போகிறார்கள்.
    அவர்களுக்கு எருமைத் தோல்.
    அவர்கள் விட்ட காசைப் புடிக்கிறாங்களாம்.

    ReplyDelete
  20. கீதா, உங்கள் கட்டுரை A – Z விடயங்களை சிறப்பாக அலசுகிறது. நான் தமிழ் திரைப்படங்களைப் பார்ப்பதைக் கைவிட்டு பல வருடங்கள் ஆகின்றன.

    பார்வையாளர்கள் திருந்த வேண்டும் என்றே நான் சொல்வேன். பட முதலாளிகளைக் குறை கூறிப் பயனில்லை. அவர்களுடய தேவை காசு. அது அவர்கள் பிழை இல்லை. வியாபார மார்க்கம் அது.

    நமக்கு எது தேவை என்ற புரிதல் நமக்கு வேண்டும் இல்லையா கண்மணி? 3 மணி நேரத்தையும் பணத்தையும் எதில் முதலிடுகிறோம்? அதனால் நமக்கு விளைகிற பயன் யாது? என்ற ஒரு குறைந்த பட்ச சிந்தனையாவது நமக்கு வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

    நடிகர்களுக்கு கோயில் கட்டிக் கும்பிடுகிற மக்களிடம் அத்தகைய தெளிவை எதிர்பார்க்கலாமா என்றும் தெரியவில்லை.

    கட்டுரை வெற்றி பெற வாழ்த்துக்கள் கீதா!

    ரூபன், நீங்கள் தமிழ் நாட்டில் தமிழும் தமிங்கிலீசும் என்றும் ஒரு போட்டி வைத்தால் இன்னும் சிறப்பாகவும் பயனுடயதாகவும் இருக்கும். தமிழ் நாட்டில் தமிழ் படும் பாடு பெரு மோசம்.

    திரைப்படப்பாடல்களில் தமிழ் படும் பாட்டுக்கு உதாரணம்
    ’தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு’ என்று எழுதிய என் மதிப்புக்குரிய வைரமுத்து ’ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி’ என்கிறார்!

    எப்படி டேக் இட் ஈசியாக எடுக்க முடியும் சொல்லுங்கள்?

    ReplyDelete
  21. அருமை..
    இவ்வளவு விரிவான ஒரு கட்டுரை
    சிறக்கட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  22. அன்புள்ள கீதா,
    வில்லனை விட மோசமாக சித்தரிக்கப்படும் பேட்டை ரவுடி கதாநாயகன், அவனது அயோக்கியத்தனத்தால்(!) கவரப்பட்டு அவனைத் துரத்திக் காதலிக்கும் பணமும், அழகும், கல்வியும் ஒருங்கே பெற்ற கதாநாயகி(!), எப்போது பார்த்தாலும், நண்பர்கள் புடைசூழ கூட்டங்கூட்டமாக அமர்ந்து குடிக்கும் அல்லது புகைக்கும் வெட்டி ஆபீசர்கள், குடும்பத்தோடு அமர்ந்து காணச் சகிக்காத வக்கிர உணர்வுகளைத் தூண்டக் கூடிய பாலியல் வன்முறைக் காட்சிகள், போகப்பொருளாகக் காட்டப்படும் பெண்களின் அசிங்கமான குலுக்கல் நடனங்கள், அங்க அசைவுகள், நம்மை நெளிய வைக்கும் ஆபாச வசனங்கள், குளோசப் கழுத்தறுப்புக் காட்சிகள், அரிவாள் வெட்டுக்குத்துக் கொலைகள் என இன்றைய சினிமாவின் அத்தனை போக்குகளையும் ஒன்றுவிடாமல் வரிசைப்படுத்தியது மிகவும் சிறப்பு.
    இத்தகைய சினிமாக்களை முன்னுதாரணமாகக் கொண்டு மனநலம் கெட்டுத் தவறான பாதையில் திசை திரும்பும் இளைஞர்கள், வன்முறை காட்சிகளால் பாதிக்கப்படும் குழந்தைகள் என சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்புக்கள் பற்றியும் சமூகம் பற்றிய ஒரு பொய்யான மாயையை மக்கள் மனதில் சிருஷ்டிக்க முனைவது பற்றியும் விவரித்தது அருமை.
    இடையிடையே ஒன்றிரண்டு படங்களை எடுத்துக்காட்டாகச் சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
    மொத்தத்தில் ஆற்றொழுக்கு நடையில் வாசிப்போர் மனங்கொள்ளத் தக்கவாறு, இன்றைய சினிமாவின் சமூகப் பாதிப்புகள் பற்றிய ஆழமான அலசல்.
    பாராட்டுக்கள் கீதா.

    ReplyDelete
  23. @அம்பாளடியாள் வலைத்தளம்

    சென்ற தலைமுறையைச் சார்ந்த பெரும்பான்மையோரின் ஆதங்கம் இதுவே. தங்கள் கருத்தும் என் கருத்தோடு ஒத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி அம்பாளடியாள். வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி.

    ReplyDelete
  24. @தேன்மதுரத்தமிழ் கிரேஸ்

    வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி கிரேஸ். இங்கு தாக்கம் என்றிருந்தால் நல்லது, கெட்டது இரண்டையுமே ஆலோசித்திருக்கலாம். பாதிப்பு என்றிருந்தமையால் கெடுதலை மட்டுமே முன்வைத்தேன். இங்கு தாங்கள் குறிப்பிட்டுள்ள கருத்துக்களும் சிறப்பானவை. மிக்க நன்றி தோழி.

    ReplyDelete
  25. @திண்டுக்கல் தனபாலன்

    என்னது? கோபமா? உங்களுக்கா? என்று வியந்தேன். பிறகுதான் பதிவின் சூட்சுமம் புரிந்தது. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.

    ReplyDelete
  26. @குட்டிபிசாசு

    தங்கள் வருகைக்கும் என் கருத்தை ஒட்டிய தங்கள் கருத்துக்கும் மனம் நிறைந்த நன்றி குட்டிப்பிசாசு.

    ReplyDelete
  27. @யோகன் பாரிஸ்(Johan-Paris)

    உண்மைதான். நான் என்னதான் தொண்டையைக் கிழித்துக்கொண்டு கத்தினாலும் இந்த விஷயத்தில் செவிடன் காதில் ஊதிய சங்குதான். சமூகப் பொறுப்பை உணர்ந்து மக்கள்தாம் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  28. @மணிமேகலா

    உங்கள் கருத்து முற்றிலும் ஏற்கப்படவேண்டிய ஒன்று மணிமேகலா. பார்வையாளர்கள் திருந்தவேண்டும். தரமற்றத் திரைப்படங்களைப் புறக்கணிக்கப் பழகவேண்டும். வருகைக்கும் சீரிய கருத்துரைக்கும் மிக்க நன்றி மணிமேகலா.

    தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்காலமும் பற்றியும் ஒரு கட்டுரைத் தலைப்பு கொடுக்கப்ப்ட்டிருந்தது. எழுத ஆரம்பித்தேன். முழுமை பெறுவதற்குள் போட்டிக்கான காலக்கெடு முடிந்துவிட்டது. எனினும் விரைவில் இங்கு பதிவிடுவேன். தோழி.

    ReplyDelete
  29. @Mathu S

    தங்கள் வருகைக்கும் பதிவைப் பாராட்டியதற்கும் மிக்க நன்றி மது.

    ReplyDelete
  30. @Kalayarassy G

    கட்டுரையின் அனைத்துக் கருத்துக்களையும் முன்வைத்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி அக்கா.

    திரைப்படங்களிலிருந்து உதாரணம் கொடுத்திருக்கலாம். ஆனால் பெரும்பான்மையான திரைப்படங்கள் அப்படித்தான் என்னும்போது எதைக் குறிப்பிட்டு சொல்வது என்றுதான் எதையுமே குறிப்பிடவில்லை. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அக்கா.

    ReplyDelete
  31. சிறப்பான கட்டுரை.....

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  32. வணக்கம் சகோதரி
    ரூபன் மற்றும் பாண்டியன் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் தங்கள் கட்டுரை மூன்றாம் பரிசினைப் பெற்றுள்ளது. வாழ்த்துகள் சகோதரி. தொடர்ந்து தங்களது சிந்தனை தமிழ்ச் சமூகத்திற்கு உதவட்டும். நன்றி..

    ReplyDelete
  33. வணக்கம்.
    ரூபன்&பாண்டியன் இருவரும் இணைந்து நடத்திய.
    தைப்பொங்கல் சிறப்பு கட்டுரைப் போட்டி முடிவுகள் சகோதரன்(பாண்டியன்)தளத்தில் சென்று பார்வையிட இதோ முதவரி..
    http://pandianpandi.blogspot.com/2014/04/blog-post_7553.html?m=1

    சான்றிதழ்+கேடயம்&பதக்கம்
    போன்ற வற்றில் தங்களின் பெயர் அச்சிட்டு தபாலில் அனுப்ப உள்ளதால் முகவரியை மின்னஞ்சல் செய்யுங்கள்....
    மீண்டும் அடுத்த போட்டி தலைப்புடன் வலையுலகில்
    சந்திப்போம்.....
    இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  34. வணக்கம் தோழி ! எல்லா விடயங்களையும் அலசி ஆராய்ந்து விபரமாகவும் ஆணித்தரமாகாவும் எழுதி உள்ளீர்கள். திருந்துவார்களோ இல்லையோ நீங்கள் உங்கள் ஆதங்கத்தை தெரியப் படுத்தி யுள்ளீர்கள். திருந்த வாய்ப்புள்ளது அல்லவா. நன்றி ! போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.....!

    ReplyDelete
  35. போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் கீதமஞ்சரி!

    ReplyDelete
  36. போட்டியில் வெற்றி வாகை சூடியதற்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !
    //அளவுகடந்த வன்முறைக் காட்சிகளைப் பார்த்துப் பார்த்து ஒரு கசாப்புக்காரனின் மனநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம் நாம்.!!// - Punch !

    ReplyDelete
  37. உலக திரைப்படங்களைக் காணும்போது தமிழ்த் திரையுலகம் இன்னும் குழந்தை நிலையில்தான் உள்ளது என்பது விளங்கும். ஆற்றல் வாய்ந்த இந்த ஊடகத்தை நாம் இன்னும் சரியாகப் பயன்படுத்தாமலிருப்பது நமது குறைதான்.

    ReplyDelete
  38. @அ. பாண்டியன்

    சிந்தனையைத் தூண்டும்படியானதொரு கட்டுரைப் போட்டியை மிகச்சிறப்பாக நடத்திய தங்களுக்கும் ரூபனுக்கும் என் பாராட்டுகள். மூன்றாம் பரிசுக்குரியதாய் என் கட்டுரை நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதில் அளவிலா மகிழ்ச்சி. மிக்க நன்றி பாண்டியன்.

    ReplyDelete
  39. @ரூபன்

    தாங்களும் பாண்டியன் அவர்களும் இணைந்து நடத்திய மாபெரும் கட்டுரைப் போட்டியில் என்னுடைய கட்டுரை மூன்றாம் பரிசுக்குரியதாய் தேர்வானதில் மிக்க மகிழ்ச்சி. தகவலுக்கு நன்றி ரூபன். இப்போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த தங்களிருவருக்கும் என் பாராட்டுகளையும் நடுவர் குழாமுக்கு என் நன்றியையும் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  40. @Iniya
    வருகைக்கும் கட்டுரை பற்றிய தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி இனியா. இரண்டாம் பரிசு பெற்ற தங்களுக்கு இனிய பாராட்டுகள் தோழி.

    ReplyDelete
  41. @தேன்மதுரத்தமிழ் கிரேஸ்

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கிரேஸ். தங்களுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

    ReplyDelete
  42. @PSD Prasad

    மிக்க நன்றி பிரசாத். பரிசு பெற்ற தங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  43. @முனைவர் இரா.குணசீலன்

    தங்கள் வருகையும் சிறப்பான கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி முனைவரே. மனமார்ந்த நன்றி தங்களுக்கு.

    ReplyDelete
  44. சிரத்தையுடன் எழுதிய கட்டுரைக்கு சரியான வெகுமதி கிடைத்துள்ளதுங்க, கீத மஞ்சரி. வாழ்த்துக்கள்!

    சினிமாவால் இன்றைய இளைய சமுதாயம் கெட்டுப் போயிருக்கா? இல்லைனா கெட்டுப்போன இன்றைய இளைய சமுதாயத்தை திருப்திப் படுத்த சினிமாக்காரர்கள் முயன்று வெற்றியடைகிறார்களா? என்பது விவாதத்துக்குரியது.

    நான் இன்றைய நடைமுறை வாழ்க்கையில் சினிமாவில் காட்டுவதைவிட கெட்டுப்போன சமுதாயத்தைத்தான் காண்கிறேன்.

    உதாரணமாக நீயா நானா போன்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்பவர்கள், நீ வெ ஒர் கோடி நிகழ்ச்சியில் வந்து சூர்யா, கமலுடன் கட்டியணைத்து நடனமாடும் இளைஞிகள் எல்லாம் சினிமாவாலதான் கெட்டாங்களா? இல்லை சினிமாக்காரகளை கெடுக்கிறாங்களா? என்னனு எனக்குத் தெரியலை. ஏன் என்றால் இவர்கள் சினிமாவைவிட ஒரு படி "மேலான தரத்தில்" இருக்காங்க என்பது என் கணிப்பு! நன்றி. :)

    ReplyDelete
  45. @வருண்

    தங்கள் வருகைக்கும் நெடியதொரு கருத்துப்பதிவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி வருண். நான் இங்கு எடுத்துக்கொண்ட தலைப்பு இன்றைய சினிமாவைப் பற்றியது என்பதால் அதைப்பற்றி மட்டுமே எழுதியுள்ளேன். பொதுவான என் கருத்தைப் பல பதிவுகளில் வெளியிட்டுள்ளேன். சமுதாயத்தைக் கெடுப்பதில் பத்திரிகைகள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், சில இணையதளங்கள் என்று ஒன்றுக்கொன்று சளைப்பில்லாமல் ஊடகங்கள் அனைத்துமே செயல்படுகின்றன. மற்றவரைக் குறைகூறுவதை விடுத்து நாமே திருந்துவதற்கான முயற்சிகளை செய்யவேண்டும் என்பது என் கருத்து. முன்பு வலைச்சரத்திலும் இதை வலியுறுத்தி எழுதியுள்ளேன். பார்க்க:

    http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_26.html

    ReplyDelete
  46. விரிவான, விளக்கமான கட்டுரை! சினிமாவும் தொலைக் காட்சி தொடர்களும் நாட்டை நாசப்படுத்திவிட்டன! மீள வழியில்லை!

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.