17 December 2014

என்றாவது ஒரு நாள் என்ற என் கனவு


என்றாவது ஒரு நாள்…
என் எழுத்துக்களும் அச்சிலேறும் என்ற 
நம்பிக்கை... ஆசை... கனவு...
எதுவும் பொய்க்கவில்லை...

இதோ...
அகநாழிகை பதிப்பக வெளியீடாக... 
என் முதல் நூல்


என்றாவது ஒரு நாள் 
(ஆஸ்திரேலிய காடுறை கதைகளின் தொகுப்பு)

விரைவில்...


உங்கள் அனைவரின் ஆசிகளையும் ஆதரவையும் 
அன்புடன் எதிர்நோக்குகிறேன்.




கனவை நனவாக்கிய 
அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுக்கு 
மனங்கனிவான நன்றி. 



9 December 2014

பறவைகள் பலவிதம் 2


தின்ன ஏதாவது கிடைக்குமா?
ஆஸ்திரேலிய வெள்ளை அன்றில் (Australian white ibis)


march of penguins
பெங்குயின்கள் (penguins)


மாலைப் பொழுதில் ஓய்வு
வெள்ளை அன்றில் & நாய்சி மைனர் பறவைகள்

நானும் பறவைதான்
பெங்குயின்


ஆப்பிரிக்க நெருப்புக்கோழி
நெருப்புக்கோழி (ostrich)

இது என் ஏரியா -  வாத்துகளை எச்சரிக்கிறார் மேக்பை
ஆஸ்திரேலிய மேக்பை & ஆஸ்திரேலிய காட்டு வாத்துகள்


 ஒரு உற்சாகக் குளியல்
கடற்புறாக்கள் (silver gulls)


விரட்டினாலும் போகமாட்டோம் - வாத்து இணை
ஆஸ்திரேலிய காட்டு வாத்துகள் (Australian wood ducks)


எங்கெங்கு காணினும் சீகலடா...
கடற்புறாக்கள் (sea gulls)



உறவுகள்... உன்னதங்கள் (தொடர்ச்சி)




உறவுகள் தொடர்பான சென்ற பதிவில் உறவென்னும் வட்டத்துள் வரும் அனைவரையுமே பொதுவில் கொண்டு கருத்தளித்திருந்தேன். அந்தப் பதிவுக்கு ஜிஎம்பி ஐயா அளித்திருந்த அவருடைய பின்னூட்டத்தில் கீழ்க்காணுமாறு குறிப்பிட்டிருக்கிறார்.

\\என் பதிவில் தொலைந்து கொண்டு போகும் உறவுகளைப் பெண்கள் நிலை நிறுத்தலாம் என்னும் கருத்தை மறைமுகமாக வைத்தேன் பலரிடம் கேட்டுப் பார்த்தால் ஒரு நிதரிசன உண்மை விளங்கும் அறிந்த உறவுகளில் தாய் வழி உறவே அதிகம் நினைவில் இருக்கும். இதற்கும் தலையணை மந்திரம் முந்தானையில் முடித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் அறிவுரையும் மறைமுகக் காரணங்களாக இருக்க வாய்ப்புண்டா. தெரிய வில்லை. நடைமுறை வாழ்க்கை நிலைகள் பிளவுபடும் குடும்ப உறவுகளுக்குக் காரணமானாலும் அதைச் சீர்செய்ய யாரால் இயலும் என்னும்கேள்வியும் எழுகிறது.சில பல காரணங்கள் தெரிவதைச் சொல்ல பெண்களுக்குத் தைரியம் இருக்கிறதா இல்லை இருக்கும் நிலையை மாத்திரம் சொல்லிக் காரண காரியங்களை அவரவர் சௌகரியத்துக்கு விட்டு விடுவதா எது சரி...?\\

இந்தப் பின்னூட்டத்தைப் பார்த்தபிறகு என் கருத்தை இன்னும் கொஞ்சம் விளக்கமாக அளித்திருக்கலாமோ என்ற எண்ணம் பிறக்கவும் தோன்றியது இந்தப் பதிவு. உறவுகள் பலப்படுவதும் விரிசலடைவதும் பெண்கள் கையில்தான் என்ற அவரது கருத்துக்கு உறவின் தன்மையில் பெண்களுடனான என்னுடைய நிலைப்பாட்டை விளக்க இப்பதிவு போதுமானது என்று நினைக்கிறேன்.

இதில் முழுக்க முழுக்க என்னுடைய அனுபவத்தை மட்டுமே பகிரப்போகிறேன். ஜிஎம்பி ஐயா குறிப்பிட்டுள்ளது போல் தலையணை மந்திரமோ முந்தானையில் முடிந்து வைக்கும் தந்திரமோ எதுவும் என் திருமணத்தின்போது எனக்கு வழங்கப்படவில்லை. என் தாய் மட்டுமல்ல… என்னுடைய பிறந்தவீட்டு உறவுகள் யாருமே அப்படியொரு எண்ணத்தை எனக்குள் விதைக்கவில்லை. எல்லோரும் ஒன்றுபோல் சொன்னது இதுதான்.

நீ வாழ்க்கைப்பட இருக்கும் குடும்பம் பெரியது. மாமியார் மாமனார், இரண்டு கொழுந்தனார், இரண்டு நாத்தனார், அவர்களது குடும்பம், ஓரகத்தி என்று பலரையும் அனுசரித்துப் போகவேண்டும். பிறந்த வீட்டில் எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்குவது பெரிய விஷயமில்லை. புகுந்த வீட்டிலும் எல்லோரிடமும் நல்ல பெண்ணாக நடந்து நல்ல பெயர் வாங்கி பிறந்த வீட்டுக்கு பெருமை சேர்க்கவேண்டும்.

கணவனையும் கணவனது குடும்பத்தாரையும் அனுசரித்துப் போ என்றுதான் அறிவுரைக்கப்பட்டதே தவிர… கவனமாயிரு… கணவனைக் கைக்குள் போட்டுக்கொள் என்று எந்த அறிவுரையும் வழங்கப்படவில்லை. அதனால்தானோ என்னவோ இன்னும் மூன்று வருடங்களில் வெள்ளிவிழா காணவிருக்கும் மண வாழ்க்கையில் இதுவரை புகுந்த வீட்டினருடன் எந்த பிணக்குமில்லாமல் நல்ல மருமகளாய் எல்லோருடைய அன்பையும் நன்மதிப்பையும் சம்பாதித்துவைத்திருக்க முடிகிறது. இதோ இந்தப் பதிவை வாசிக்கும் என் புகுந்த வீட்டு, பிறந்த வீட்டு உறவுகள் நிச்சயம் என்னை ஆமோதிப்பார்கள்.

புகுந்த வீட்டில் ஒவ்வொருவரிடமும் நான் காட்டும் அன்பு அதனினும் பன்மடங்கு என்னிடமே திருப்பித் தரப்படுவது எங்கள் உறவு பலப்பட முக்கியமான காரணமாக நினைக்கிறேன். எனக்குத் திருமணமான புதிதில் என் நாத்தனார்களை குடும்ப வழக்கப்படி அத்தாச்சி என்று அழைத்தேன். அக்கா என்றே அழை என்றார்கள். அந்த வார்த்தைகளுக்கான மதிப்பை இன்றுவரை உணர்ந்து அனுபவிக்கிறேன்.  என் நாத்தனார்களையும் ஓரகத்திகளையும் என் உடன்பிறந்த தமக்கைகளாகவே நினைக்கிறேன். அவர்களும் அப்படிதான் நினைக்கிறார்கள். உடன்பிறந்த சகோதரிகளை விடவும் ஒரு படி அதிகமாகவே பாசம் செலுத்துகிறார்கள்.

உறவுகளுக்குள் சில சமயங்களில் தவறான புரிதலினால் மனக்கிலேசங்கள் ஏற்படுவது இயற்கை. அதை ஊதி ஊதி பெரிதாக்காமல் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு பிரச்சனையைத் தீர்க்கவே முயல்கிறோம். எந்த சூழ்நிலையிலும் யாரும் எவரையும் ஒதுக்க நினைப்பதில்லை. இன்பத்திலும் துன்பத்திலும் எல்லோருமே ஒருமித்துப் பங்கு கொள்கிறோம்.

உறவுகளுக்குள் பந்தம், பாசம், மரியாதை இவற்றைத் தாண்டி நட்புமிருந்தால் உறவு இன்னும் பலப்படும். என் ஓரகத்திக்கும் எனக்கும் இடையில் இன்னதுதான் என்றில்லாமல் எவ்வளவோ கருத்துப் பரிமாற்றங்கள் நிகழும். சிறிய நாத்தனாரும் நானும் குடும்ப விவரங்கள் அல்லாது பொதுவிஷயங்களை ஏராளமாய்ப் பகிர்ந்துகொள்வோம். என் பெரிய நாத்தனாரிடம் உறவைத் தாண்டி இலக்கியம் குறித்தும் பதிவுலகம் குறித்தும் என்னால் ஒருமணி நேரத்துக்கும் மேலாக தொலைபேசியில் பேசமுடிகிறது. ஒவ்வொருவருடனும் பேசும்போது அவர்கள் இன்ன உறவு என்பதோ மூத்தவர்கள் என்பதோ எதுவும் மனத்தில் உறுத்தாமல் ஒரு உற்ற தோழியுடன் பேசுவது போன்ற உணர்வே தோன்றும். அப்படி நட்புணர்வுடன் கூடிய உறவுகள் வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். தாயிடம் பகிரமுடியாத சங்கதிகளைக் கூட தாராளமாய் நான் என் புகுந்த வீட்டு உறவுகளிடம் பகிரமுடியும்.  

தானே கைம்பெண்ணான நிலையிலும் நிராதரவாய் நின்ற கைம்பெண் நாத்தனாரை அவருடைய கடைசி காலம் வரை வைத்துக் காப்பாற்றிய பெண்மணியையும், தாயும் மாமியாரும் பக்கம் பக்கம் அமர்ந்திருக்க, மாமியாரின் மடியில் உரிமையுடன் தலைவைத்துப் படுத்துக்கொள்ளும் மருமகளையும் கணவனுடன் பிறந்தவர்கள் ஏமாற்றி தம்மை சுரண்டுகிறார்கள் என்று தெரிந்தே அனுமதிக்கும் தாராள மனம் கொண்ட பெண்ணையும் அறியும் அதே சமயம் பெற்றவளுடனும் உடன் பிறந்தவர்களுடனும் பேசினால் தற்கொலை செய்துகொள்வேன் என்று கணவனை மிரட்டும் மனைவியையும் அறிவேன்.

குடும்ப உறவுகள் வலுப்படுவது பெண்களின் கையில்தான் இருக்கிறது என்று ஜிஎம்பி ஐயா சொல்வது ஒருவகையில் ஏற்கத்தக்கதுதான் என்றாலும் அதில் ஆண்களின் பங்கு எதுவுமே இல்லை என்று சொல்வதற்கில்லை.

நான் என் புகுந்த வீட்டாரிடம் எப்படி நடந்துகொள்கிறேனோ அதுபோலவே என் கணவர் என் பிறந்த வீட்டாரிடம் நடந்துகொள்கிறார். அதை நான் எதிர்பாராதபோதும் என்பதுதான் சிறப்பு. என் தம்பியை தன் சொந்த சகோதரனைப் போலவும் என் தாய் தந்தையை தன்னுடைய தாய் தந்தையைப் போலவும் மதிக்கிறார்… பாசம் காட்டுகிறார். உதாரணத்துக்கு ஒரு விஷயம் சொல்கிறேன்.. என் தம்பிக்கு திருமணம் முடிவான சமயம். என் கணவர் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா?

"உனக்கு நாத்தனார்களாகிய என் அக்காக்கள் உன்னிடம் எப்படி பாசமாக பரிவாக நடந்துகொள்கிறார்களோ அப்படியே நீயும் வரவிருக்கும் உன் தம்பி மனைவியிடம் பாசமும் பரிவுமாக நடந்துகொள்ளவேண்டும். அந்தப்பெண் உன்னை விடவும் சிறிய பெண். தவறு செய்தால் நீ பெரியவள் என்ற முறையில் அனுசரித்துப்போ. எந்த சூழ்நிலையிலும் உங்கள் இருவருக்குள்ளும் பிரச்சனை வராமல் பார்த்துக்கொள். அது உன் பிறந்த வீட்டிலுள்ள மற்ற உறவுகளுக்குள்ளும் ஒரு ஆரோக்கியமான பிணைப்பை உருவாக்கும்."

எந்த அளவுக்கு என் குடும்பத்தின்மேல் அவருக்கு அக்கறை இருந்திருந்தால் இப்படி சொல்லத் தோன்றும்? என் தம்பி மனைவி என்னை அத்தாச்சி என்றபோது நானும் என்னை அக்கா என்றே அழைக்கச்செய்தேன். இன்றுவரை என் சகோதரியாகவே பார்க்கிறேன். எங்கள் இருவருக்குள்ளும் உள்ள நட்பும் பாசமும் இந்த பதினைந்து வருடங்களில் பலப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்வேன்.

நான் வீட்டுக்கு வருகிறேன் என்று சொன்னால் உற்சாகமாக என்னை வரவேற்க தயாராகிவிடுகிறார் தம்பி மனைவி. எப்போது வருவேன் என்று எதிர்பார்த்திருக்கிறார். கணவனின் உறவுகள் வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டிருந்தால் எந்தப் பெண்ணாவது இப்படி ஆர்வத்துடன் நாத்தனாரை வரவேற்கக் காத்திருப்பாரா?

இந்தியாவிலிருக்கும்போது குழந்தைகளுக்கு காலாண்டு அரையாண்டு விடுமுறைகளில் தாய்வீட்டுக்குப் போவதற்கு நிகராக மாமியார் வீட்டுக்கு நானும் பிள்ளைகளும் குஷியாகக் கிளம்பிவிடுவோம். என்னைப் பலரும் கிண்டல் செய்திருக்கிறார்கள்… மாமியார் வீட்டுக்கும் நாத்தனார் வீடுகளுக்கும் போக இவ்வளவு ஆர்வத்துடன் கிளம்பும் ஓரே ஆள் நீங்களாகத்தான் இருக்கமுடியும் என்று. என்ன செய்ய? என் தாயின் வளர்ப்பு அது. பிறந்த வீட்டை விடவும் புகுந்த வீட்டுக்கு மரியாதை செய்யும்படி சொன்ன அறிவுரையின் காரணம் அது.

ஒருவேளை எதிர்மறையாய் அறிவுறுத்தப்படும் பெண்களின் செயல்பாடுகள் உறவுகளில் விரிசல் விழக் காரணமாயிருக்கலாம். அதைப் பற்றிய கருத்துகள் என்னிடமில்லை. ஏனெனில் என்னுடைய அனுபவத்தில் பிறந்த வீடு புகுந்த வீடு என்ற பாகுபாடில்லாமல் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழும் பெண்களைத்தான் வெகுவாக நான் பார்த்திருக்கிறேன். 


8 December 2014

உறவுகள்.. உன்னதங்கள்!





வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான நம் பதிவுலகத் தோழமையான ஜிஎம் பாலசுப்பிரமணியம் ஐயா அவர்கள் உறவுகள் சார்ந்த பதிவொன்றுக்கு தொடர் பதிவு எழுத அழைப்பு விடுத்துள்ளார். அவருடைய அனுபவங்களும் சிந்தனைகளும் என்னை மிகவும் கவர்பவை. அவருடைய நிதானமான அழுத்தமான எண்ணப்பகிர்வுகளும், கருத்துக்களை மிகத்துல்லியமாக எழுத்தாக்கும் திறமும் என்னை வியப்பில் ஆழ்த்துபவை.

உறவுகள் என்ற தலைப்பில் சமீபத்தில் அவர் எழுதிய பதிவின் தொடர்ச்சியாக சில பெண் பதிவர்களின் கருத்துகளைக் கேட்டு எழுதியுள்ளார். அப்பெண் பதிவர்களுள் நானும் ஒருத்தி என்பதறிந்து வியந்தேன். ஜிஎம்பி ஐயா அவர்கள் எங்களை பெண் பதிவர்களின் பிரதிநிதிகளாகக் கருத்துக்களைக் கூறுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பெண் பதிவர்களின் மட்டுமல்ல பெண்களின் பிரதிநிதியாகவும் இந்த விஷயத்தில் கருத்தளிக்க இயலுமா என்பது சந்தேகமே. ஏனெனில் இதுபோன்ற சிந்தனைகளிலெல்லாம் இதுவரை நான் ஈடுபட்டதே இல்லை. வாழ்க்கையை அதன்போக்கில் ஏற்றுக்கொண்டு வாழுந்தன்மை உடையவள் நான்.

என்னைப் பொறுத்தவரை கணவன் மனைவியாகட்டும், பெற்றோர் பிள்ளைகளாகட்டும், உடன்பிறந்தவர்களாகட்டும், நண்பர்களாகட்டும், மற்ற உறவுகளாகட்டும்… எந்த உறவுநிலையையும் இது இப்படிதான் என்ற வரையறைக்குள் கொண்டுவருவது அசாத்தியம். உறவுகள் நீட்டிப்பதும் வெட்டுப்படுவதும் அவரவர் வளர்ந்த விதம், வாழும் சூழல், தேவைகள், சூழ்ந்துள்ள மற்ற உறவுகளின் இயல்பு போன்ற பல காரணிகளைப் பொறுத்தே அமைகிறது.

ஒரு குடும்பக் கட்டமைப்பில் பெண் ஆணை ஆட்டுவிப்பதோ ஆண் பெண்ணை அடிமைப்படுத்துவதோ அவரவர் தனிப்பட்ட குணநலன் சார்ந்த நிலைப்பாடாக எடுத்துக்கொள்ள முடிகிறதே தவிர பொதுவான கருத்தாக கொள்ளமுடியவில்லை. பெரும்பான்மை என்று சொன்னால் பல இடங்களில் பெண்கள் ஆணைச் சார்ந்து வாழும் நிலையிலும் சரி, சாராத நிலையிலும் சரி.. ஏதோ ஒரு விதத்தில் அல்லல்படுவதையும் அடிமைப்படுவதையும் அறிந்தேயிருக்கிறோம். உரிய மரியாதை கிட்டாமல் உதாசீனப்படுத்தப் படுவதோடு இன்னும் சில பெண்கள் வெளியில் சொல்லமுடியாத வேதனையை அனுபவிப்பதுமான பல வாழ்க்கை அனுபவங்களை கண்டும் கேட்டும் அறிந்திருக்கிறோம். சில இடங்களில் நிலைமை தலைகீழாக இருப்பதும் நமக்குத் தெரியும். பெற்ற தாயுடனும் பேசும் உரிமை மறுக்கப்பட்டு வாழும் ஆண்களின் மனக்குமுறலும் வேதனையும் வெளிப்படக் கேட்டு வருந்தியிருக்கிறோம். அதனால் உறவுகள் தொடர்பறுந்து போவதன் ஒட்டுமொத்தப் பழியைத் தூக்கி பெண்களின் மீதோ அல்லது ஆண்களின் மீதோ சுமத்துவதில் எனக்கு உடன்பாடில்லை.

உறவுகள் விட்டுப்போவதற்கு மாறிவரும் வாழ்க்கைச்சூழல் ஒரு முக்கியக் காரணம். அவசர யுகம் எந்திரமயம், உலகமயமாக்கல் என்றெல்லாம் மாறிவரும் சூழலில் எந்த உறவையும் தொடர்பெல்லைக்குள் தக்கவைத்துக்கொள்ள நம்மால் முடியவில்லை. நின்று நிதானித்துப் பேசவும் நமக்கு நேரமில்லை… அல்லது நேரமில்லாதது போல் பாசாங்கு செய்து கொண்டிருக்கிறோம். உண்மையில் சோம்பேறிகளாகிக் கொண்டு வருகிறோம். பட்டனை அழுத்தவும் அலுப்புப் பட்டு தொடுதிரைகளைத் தொட்டுத் தடவி காரியமாற்றிக் கொண்டிருக்கும் காலமிது.

நேரமில்லை என்பது ஒரு சாக்கு. நேரமில்லாமலா நெடுந்தொடர்களிலும் முகநூலிலும் இணையத்திலும் எங்கோ ஒரு முகந்தெரியாத நண்பருடன் அரட்டை அடிப்பதிலும் நேரத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறோம். அவசரம் அவசரம் என்று எதிலும் நிற்க நேரமில்லாமல் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கும் நாம்தான் சினிமா, அரசியல், மதம் சார்ந்த பல வெட்டி சர்ச்சைகளில் இறங்கி நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.
ஒற்றைப் பிள்ளை போதுமென்று முடிவெடுத்த நாம்தான் அந்த ஒற்றைப் பிள்ளைக்கும் ஓய்வுப்பொழுதை ஒதுக்காமல் வீடியோ கேம் வாங்கிக் கொடுத்து ஒண்டியாய் விளையாட விட்டிருக்கிறோம். குழந்தையிலிருந்தே தனிமைப்படுத்தப்பட்ட பிள்ளைக்கு குடும்பத்தின் அருமை தெரியுமா? உறவுகளின் உன்னதம் புரியுமா? நாமோ இன்றைய பொழுதுகளை இழந்துகொண்டு நாளைப் பொழுதுகளுக்காய் சேமித்தபடி நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறோம்.

பெரும்பாலும் தேவைகளின் நிமித்தமே உறவுகளின் தேவையும் தீர்மானிக்கப்படுகிறது. அது கணவன் மனைவி உறவானாலும் சரி மற்ற உறவுகளானாலும் சரி. தேவை எது என்பதும் ஆளுக்காள் மாறுகிறது. சிலருக்கு பொருளாதாரம்.. சிலருக்கு கௌரவம்.. சிலருக்கு ஆள்மாகாணம்.. சிலருக்கு வேறு ஏதாவது.. வெகு சிலருக்கே அன்பின் அடிப்படையில் உறவுகளின் தேவை தேவைப்படுகிறது. 

குடும்ப அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாய்த் தொலைந்துகொண்டு வரும் இக்காலத்தில் திருமணத்தின் மீதான நம்பிக்கையும் மதிப்பிழந்துகொண்டு வருவது உண்மை. இப்படியானதொரு நிலையில் கணவன் மனைவி குழந்தை என்ற முக்கோணத்தின் உள் நுழைய தாத்தா பாட்டி அத்தை மாமா சித்தப்பா சித்தி உறவுகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அது அம்மா வழியா அப்பா வழியா என்ற பேதமில்லாமல் ஒட்டுமொத்தமாகவே உறவுகள் ஒதுக்கித் தள்ளப்படுவது நிதர்சனம். 

புகுந்த வீடு பிறந்த வீடு என்ற பேதம் பாராமல் அனைத்து உறவுகளையும் அனுசரித்தும் அன்பு செலுத்தியும் வாழும் குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளுக்கு உறவுகளின் உன்னதம் பற்றி நாம் எடுத்துச் சொல்லவேண்டிய அவசியமேற்படுவதில்லை. ஒருதலைப் பட்சமான உறவுப்பேணலில்தான் உரசல்களும் மனக்கசப்புகளும் உண்டாகின்றன.

கூட்டுக்குடும்பங்களின் அருமை பற்றி ஆதங்கித்துக்கொண்டும், பெற்றோர் வயதான காலத்தில் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்படும் அவலம் குறித்து விவாதித்துக் கொண்டுமிருக்கும் கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம். உறவுகளின் அருமை பெருமை அறிந்த காரணத்தாலேதான் இன்னமும் அவற்றைப் பற்றிய நம் ஏக்கத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறோம்.

வளரும் தலைமுறைக்கு அண்ணன் அக்கா தம்பி தங்கை போன்ற எந்த உறவுகளோடும் வளரும் வாய்ப்பு கொடுக்கப்படா நிலையில் அதற்கடுத்த தலைமுறையில் அத்தை மாமா சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா போன்ற உறவுகளைப் பற்றியும் எந்தக் குழந்தைக்கும் தெரிந்திருக்கப் போவதில்லை. அண்ணன் தம்பிகளுக்குள் சொத்துத் தகராறோ.. அக்கா தங்கைகளுக்கு சீர் செய்வதில் சிரமமோ… தாய்மாமனை சபையில் முன்னிறுத்தவில்லை என்ற சங்கடங்களோ எதுவுமே நேரப்போவதில்லை… ஒன்றே ஒன்றுதான்.. பெற்றவர்களை முதுமைக் காலத்தில் பேணுவது குறித்தான சிரமம் ஒன்றுதான் பிரதானமாகப் போகிறது.

பெற்ற ஒற்றைப் பிள்ளைக்கும் உடல்நிலை சரியில்லை என்றால் சென்ற முறை நான் விடுப்பெடுத்தேன் இந்த முறை நீ விடுப்பெடுக்கவேண்டும் என்ற ஒப்பந்தப்படி தாயும் தந்தையும் விடுப்பெடுத்து குழந்தை வளர்க்கும் சூழலில் பெற்றவர்களைப் பேணுவதும் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை எனில் விடுப்பெடுப்பதும் பிரதான பிரச்சனையாகப் போவதில் வியப்பில்லை.

போகப்போக மேலை நாடுகளைப் போல இங்கும் பெற்றவர்கள் பிள்ளைகளுக்கென்று தனிக்குடும்பம் உருவாகிவிட்ட பிறகு அவர்களை விட்டு ஒதுங்கி வாழ தங்களை மனத்தளவிலும் பொருளாதார அளவிலும் தயார்படுத்திக் கொள்ளும் சூழல் விரைவில் உருவாகும்.

காலமாற்றத்தால் ஆட்டுக்கல் அம்மிக்கல் போன்றவை புழக்கத்திலிருந்து விடுபட்டு கிரைண்டர் மிக்ஸி என உருமாற்றம் பெற்றது போல் உறவுகளும் காலத்துக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்கின்றனர். இப்போது எந்த உறவின் திருமணத்துக்கு ஒரு வாரம் முன்னதாக… ஒரு வாரம் வேண்டாம் இரண்டு நாட்கள் முன்னதாகப் போகிறோம்? நேராக மண்டபத்துக்குப் போகிறோம்.. வீடியோவில் நம் வருகையைப் பதிவு செய்கிறோம். மொய் கவரைக் கொடுக்கிறோம். விருந்துண்கிறோம். விடைபெறுகிறோம். அந்த அளவில்தான் உள்ளது தற்போது நமக்கு உறவுகளுடனான பிணைப்பு. இனிவருங்காலத்தில் அதுவும் விடுபட்டுப்போகும் வாய்ப்புகள் அதிகம்.

இதற்கு காலமாற்றம் அல்லாது யாரை குறை சொல்ல முடியும்? ஒற்றையாய் வளரும் குழந்தைகளுக்கு விட்டுக்கொடுத்தல் பற்றியோ பகிர்தல் பற்றியோ என்ன தெரிந்திருக்கப் போகிறது? திருமணமானவுடன் கணவன் மனைவிக்குள்ளே கூட அந்த விட்டுக்கொடுத்தலும் பகிர்தலும் பிரச்சனைக்குரியவைகளாக மாறுகின்றன. அவர்கள் இருவருக்குள்ளும் பரஸ்பர புரிதல் உருவாகாமல் பல திருமணங்கள் ஆரம்ப கட்டத்திலேயே விவாகரத்துக் கோரி வழக்குமன்றங்களின் வாயில்களில் காத்திருக்கின்றன. இந்த நிலையில் மற்ற உறவுகளோடு அவர்களுக்கு எப்படி பிணைப்பு உண்டாகும்? 

ஆகவே இன்னும் ஓரிரு தலைமுறையோடு ஒழியப்போகும் உறவுச்சிக்கல்களைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டிருக்காமல் காலமாற்றத்தைக் கருத்தில் கொண்டு நடைமுறை வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்று நடப்பதே இப்போதைக்கு நம்மால் இயன்றது என்பேன். 

1 December 2014

பறவைகள் பலவிதம் 1


ஆஸ்திரேலிய பாம்புத்தாரா

பாம்புத்தாரா (Australian darter)



சிரிக்கும் கூக்கபரா
சிரிக்கும் கூக்கபரா (laughing kookaburra)

லாரிகீட்
வானவில் லாரிகீட் (rainbow lorikeet)




கொண்டைப்புறா
கொண்டைப்புறா (crested pigeon)




ஆஸ்திரேலிய மேக்பை
ஆஸ்திரேலிய மேக்பை (Australian magpie)




சிட்டுக்குருவிகள்
சிட்டுக்குருவிகள் (house sparrows)



அரிவாள் மூக்கன் (அன்றில் வகை)
ஆஸ்திரேலிய வெள்ளை அன்றில் (australian white ibis)




ஆள்காட்டி குருவி
மஞ்சள் தாடை ஆட்காட்டி (yellow wattled lapwing)



சீகல் 
கடற்புறா (silver gull)




11 November 2014

துளிர் விடும் விதைகள் என் பார்வையில்...




துளிர் விடும் விதைகள் – கவிதைத்தொகுப்பை இப்போதுதான் வாசித்து முடித்தேன். தோழி கிரேஸின் தமிழார்வம் எப்போதுமே என்னை மிகவும் வியக்கவைக்கும். ஐங்குறுநூற்றுப் பாடலில் வரும் களவன் என்ற சொல்லுக்கான சரியான பதத்தை அறிந்துகொள்ள அவர் எடுத்த முயற்சிகள் வியப்பின் உச்சத்துக்கே என்னை அழைத்துச்சென்றன. ஆங்கிலத்திலும் தமிழிலுமாய் சங்க இலக்கியப் பாடல்களை அவர் தெளிவுற விளக்கும் பாங்கு என்னை அவரது பதிவுகளின்பால் பெரும் ஆர்வம் கொள்ளச் செய்திருந்தது. அவருடைய கவிதைகளைத் தவறாமல் வாசிக்கவும் தூண்டியது.

தோழி கிரேஸின் கவிதை நூல் வெளியீடு நடைபெறுவது அறிந்து மகிழ்ந்தேன். என் வாழ்த்துகளை மானசீகமாக அனுப்பிவைத்துவிட்டு என் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்த ஒருநாளில் கிரேஸிடமிருந்து தகவல் வந்தது. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அவர் அமெரிக்கா கிளம்புவதாகவும் எனக்கு அவரது நூலின் மின்னூல் வடிவத்தை அனுப்பிவைப்பதாகவும் தெரிவித்திருந்தார். இவ்வளவு பணிகளுக்கிடையில் என்னை நினைவில் வைத்திருந்து அனுப்பிய அவரது அன்பைக் கண்டு நெகிழ்ந்துபோகிறேன். அவரது கவிதைகள் முன்பே பரிச்சயம் என்றாலும் ஒரு தொகுப்பாய் வாசிப்பது மாறுபட்ட அனுபவம்தான்.

கவிதை நூலுக்கு அழகும் சிறப்பும் சேர்க்கின்றன கவிஞர் முத்துநிலவன் ஐயா எழுதிய அணிந்துரையும், திரு. ராஜவேல் நாகராஜ் அவர்களுடைய முகவுரையும் முனைவர் எம்.ஏ.சுசீலா அவர்களுடைய  முன்னுரையும் கிரேஸின் தன்னுரையும்.

மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள். இங்கு தோழியோ மாதா பிதாவுக்கு முன்னால் தமிழ்த்தாயை வணங்கித்தான் பாக்களைத் துவங்கியிருக்கிறார். அன்னை தந்தையை அந்தந்த தினங்களில் வாழ்த்துவது அன்னை தந்தையின் அன்புக்கும் அவர்களுடைய ஆயுட்கால உழைப்புக்கும் முன்னால் வெகு சிறியதே என்கிறார்.

தந்தையின் அன்பைப்பற்றிக் குறிப்பிடும்போது

சூரியனுக்கு ஒரு சுடர் தருவதா?
கடலுக்கு ஒரு துளி தருவதா?

என்று கேட்கிறார். சூரிய அளவு அன்பைப் பெற்று சுடர் அளவு திருப்பித் தருகிறோம் என்னும் சிந்தனை எவ்வளவு வலியது. ஆனால் தாயின் அன்பைக் குறிப்பிடுகையில் என்ன சொல்கிறார் பாருங்கள். 

அளவிட முடியாத அவள் அன்புக்கு முன்
நன்றியில் அடைக்கமுடியாத அவள் அன்புக்கு முன்
வணங்குகிறேன் நேசிக்கிறேன்
அவள் அன்புக்கு முன் –
என்ன செய்தாலும் நிகராகாது அன்றோ?

முதலில் தமிழைப் போற்றி, தொடர்ந்து தாய் தந்தையை வணங்கி அடுத்த அற்புத உறவாய் நட்பைப் பாடி நம் நெஞ்சம் நிறைத்துவிட்டார்.

நண்பர் தினம் ஓர் தினம் ஆனாலும்
நண்பருடன்தான் அனைத்து தினமும்

என்கிறார் நட்பு இல்லையேல்.. கவிதையில்.

இயற்கை, சமூகம், வாழ்வியல் குறித்தான அக்கறை கிரேஸின் ஒவ்வொரு கவிதையிலும் வெளிப்படுவது சிறப்பு. மழையின் சார்பாக, மரங்களின் சார்பாக, நீரின் சார்பாக, நிலத்தின் சார்பாக என இயற்கையின் இருப்புகள் அனைத்தின் சார்பாகவும் பேசுகிறார். ஆதங்கம், ஆற்றாமை, குமுறல், கோபம், கெஞ்சல் என்று பல்லுணர்வுக் கலவையாய் தன்னுணர்வுகளை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்க்கிறார்.

ஓவியத்திலா காட்டவேண்டும்? என்ற கவிதையில்…

அறியாயோ? கண்ணைத் திறவாயோ மனிதா? – உன்
சந்ததிக்கு எம்மை ஓவியத்திலா காட்டவேண்டும்?
தோலிற்கு எம்மையும், மரத்திற்கு காட்டையும்
பேராசைக்கு இயற்கைச் சூழலையும் பலியாக்காதே!

எந்த விலங்கினத்தின் பார்வையில் எழுதப்பட்டது என்பது கவிதையின் எந்த இடத்திலும் வெளிப்படுத்தப்படவில்லை. புலியோ  மானோ சிங்கமோ சிறுத்தையோ இருக்கலாம். தோலைக் குறிப்பிடாவிடில் அதை ஒரு யானையாகவும் கொள்ளலாம். இன்னதுதான் என்று வரையறுக்கப்படாதது முதலில் ஒரு குறை போல் தெரிந்தாலும் காடுகள் அழிக்கப்படும்போது பாதிக்கப்படுபவை ஒட்டுமொத்த காட்டுவிலங்குகள்தாம் என்பதால் காட்டுவிலங்குகளில் எவற்றை வேண்டுமானாலும் வாசிப்பவர் உள்ளத்தில் தோன்றும் வினாவுக்கான விடையாய்ப் பொருத்திக்கொள்ளமுடியும் என்பதே இக்கவிதையின் சிறப்பாக அமைந்துவிடுகிறது.

ஆழி சேர்ந்திடுவேனோ மனம் மகிழ்ந்து? என்ற ஆற்றின் கேள்வியில் தொனிக்கிறது கலக்கம். நெகிழியின் குவிப்பால் ஆழி சேரும் வழி அடைபட்டுக்கிடப்பதை ஆதங்கம் மேலிட ஆறு தன் மொழியில் விடுக்கும் வேண்டுகோள் மனத்தை நெகிழ்த்துகிறது.

மழைநீரின் சேமிப்பின் மகத்துவமும் உணர்த்துகிறார்.

சொட்டு நீரும் தேவையின்றி சொட்டாமல்
கொட்டும் மழைநீர் சேமிப்போம் நாளைக்காய்!

என்கிறார். நீரை சேமிக்க சொன்னதோடு நின்றுவிடாமல் செயலிலும் இறங்குகிறார்.

அடப்போம்மா
நீதான் பூமியக் காப்பாத்தப் போறியா?
என்றாள் அவள்
நான்தான் இல்லை,
நானும்தான்
என்றேன் நான்.

அவ்வளவுதான். இந்த சிறு முயற்சியை வாசிக்கும் ஒவ்வொருவரும் கையிலெடுத்தாலே போதுமே.. சிறுதுளிகள் பெருவெள்ளமாகும்போது சிறு முயற்சிகள் பெருஞ்சாதனையாகாதா என்ன? அதுதானே தன் கவிதைகளின் நோக்கமும் என்கிறார் தோழி கிரேஸ்.

இயற்கைச்சூழல் மற்றும் சமூகக் கேடுகளை உணரவும், நல்ல மாற்றம் ஏற்படவும் எங்கோ ஒரு இடத்தில் என் கவிதைகள் வழிவகுக்குமானால் அதுவே என் கவிதைகளின் வெற்றி என்கிறார் தன்னுரையில்.

அடுத்து காதல் கவிதைகள்..

காதலின் அடைமொழிகள் தேவையில்லை, அடையாளத்தைப் பறிக்காமல் இருந்தாலே போதும், அதுவே காதலாகும் என்கிறார் என்னை நானாகவே கவிதையில்.

எதனோடும் உருவகிக்க வேண்டாம்
ஏதேதோ உவமையிலும் புகழவேண்டாம்
என்னை நானாகவே விரும்பிடு – என்பாதியே!

நிபந்தனையற்ற அன்பை பறைசாற்றுகிறது எப்படியும் பிடிப்பது கவிதை.

அனைத்திற்கும் ஒரு ‘தான்’ இருக்க
நீ மட்டும் எப்படியும் எப்படியும் பிடிப்பதெப்படி?

நியாயமான கேள்விதான். நிபந்தனையற்ற அன்பைக் கூறும் இந்தக் கவிதையை ரசிக்கும் வேளையில் நிபந்தனை சொல்லும் காதலொன்றும் புருவமுயர்த்தச் செய்கிறது.

எனக்காக எதுவும் செய்வாயா?
தன்மானம் விட்டுக்கொடுக்கும் எதுவும் தவிர.

அட இதுதான் புரிதல், இதுதான் காதல் என்று கொண்டாடுகிறது மனம்.
பெண்ணுக்கு அழகு அணிகலன்களில் இல்லை, அன்புக்குரியவனின் அரவணைப்பே என்பதை இனிக்கும் இலக்கிய வரிகளால் என்ன அழகாக சொல்கிறார் இனிக்கும் பண்டிகை உன்னுடனே கவிதையில். எண்கோவை காஞ்சி, ஏழுகோவை மேகலை, மதலிகை, கண்டிகை போன்ற பண்டைய அணிகலன்கள் பற்றியும் அறிந்துகொள்ளவும் முடிகிறது இக்கவிதையின் வாயிலாய்.

முகம் புதைத்தாள் அவன் ஆகம் கவிதையின் ஆரம்ப வரிகள்

பாண்டில் ஏற்றிச் சின்மலர் சூடி
இன்னே வருவாரா என் தலைவர் என
மேன்மாடத்தில் கரங்கள் பனிப்பப்…

இந்தக் கவிதையும், செம்பருத்தி அவிழ வராரோ, தலைவன் தலைவி பாகற்காய், இனிமையிலும் இனிமை போன்ற கவிதைகளும்  இந்தக் கவிதைப் புத்தகத்தில் உள்ள கவிதைகளின் தளத்தில் இணையவியலாத தனித்துவக் கவிதைகள். முற்றிலுமாய் மாறுபட்ட தளத்தில் இயங்கும் இக்கவிதைகள் கிரேஸின் இலக்கியத்திறனுக்கு இனியதொரு சான்று. கவிதைகளின் வரிகளை வாசிக்க வாசிக்க சங்க காலக் காட்சிகள் மனத்தில் விரிந்துகொண்டே போகின்றன. கவிதைகளின் அழகையும் இலக்கிய ரசனையையும் மீறி அவ்வளவு எளிதில் நம்மால் விடுபடவியலாது.

இயற்கையை வர்ணிக்கும் கவிதைகளில் ஒரு குழந்தையின் உற்சாகமும் கைக்கொட்டிக் களிக்கும் குதூகலமும்தான் தெரிகிறது. வாசிப்போரையும் குழந்தையாய் மாற்றும் ச்சூ.. மந்திரக்கவிதைகள்…

அணில் கவிதை அசத்துகிறது. அணிலின் கீச்சொலியை வார்த்தைகளால் சொல்லமுடியுமானால் எப்படி சொல்வது? இதோ கிரேஸ் கற்றுத்தருகிறாரே.. ஸ்குவீக் ஸ்குவீக்.. என்று.

அணிலின் ஸ்குவீக் ஒலிக்கு என்ன காரணம் என்று ஆராய்கிறார். அவரோடு சேர்ந்து நாமும் அந்த தென்னங்கீற்றிலாடும் அணிலை ரசிக்கிறோம்.

கடற்கரை கிளிஞ்சல்களும் அவர் கவிதை வரிகளில் வர்ணிக்கும் வரம்பெற்று விடுகின்றன.

ஆழியின் அளவிலாச் செழிப்பை
வாழ்ந்த உயிர்களின் அடையாளத்தை
அலைகளோடு அழகாய்ச் சொல்லும்
கரைசேர்ந்த கண்கவர் ஓடுகள்!

மண்ணிற்கும் விண்ணிற்கும் காதலாம். இடையில் தூதாய் தேவதாரு மரங்களாம். கவிஞரின் கற்பனை அபாரம்.. அல்லவா!

மனை உறை புறாவின் சேவலும் பெடையும் கொண்ட சிங்காரக்காதல் கண்ணுக்குள் விரிகிறது சிங்காரக் காதல் காட்டி கவிதை வரிகளை வாசிக்கும்போது..

இறகால் தூவுதல் போலே… கவிதையில் தாய் நீராட்டும் இளந்தாய் போல என்ற வரிகளில்தான் எவ்வளவு தாய்மை…  தாயைத் தெரியும். அதென்ன இளந்தாய்? இப்போதுதான் தாயாகியிருப்பவள். ஆம். புதிதாய்ப் பிள்ளை பெற்றுவந்த தன் மகளை மனைப்பலகையில் உட்காரவைத்து பதமான வெந்நீரால் குளிப்பாட்டுகிறாள் தாய். பூரித்து நிற்கிறாள் மகள். இது ஒரு கொடுப்பினை அல்லவா? தாய்மையின் இரு வரங்களையும் ஒருசேர அனுபவிக்கும் தருணமல்லவா அது? ஆஹா.. நினைக்கையிலேயே அந்த இதம் நெஞ்சுக்குள் பரவுகிறதே.. அந்த இளந்தாயைப்போலத்தான் தென்னையும் பூரித்து தன் பசுங்கரங்களில் மழையை ஏந்தித் தன் தளிர்மேனியில் மென்மையாய் இறக்கிக்கொள்கிறதாம்… வாசிக்கையிலேயே நெஞ்சத்துள் தோன்றும் நினைவுகள் இன்பம்!

இளங்காலை நேரமது. காக்கை அழைக்கிறது, அணில் கூப்பிடுகிறது, புறா பேசுகிறது. தென்னையும் தலையை ஆட்டிக் கேட்டுக்கொண்டிருக்கிறது.  தென்னைக்கு வேறு வேலை இல்லை. கேட்டுக்கொண்டிருக்கிறது. இப்படி நாமும் இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தால் இன்றைய பொழுது என்னாவது? கவிஞரை அங்கே குக்கர் அழைக்கிறது.. ரசனையும் கடமையுமாய் கலந்து புலர்கிறதாம் கவினுறு காலைகள்.. என்ன அற்புதமான ரசனை!

சமூக அக்கறையும், சமூகத்தின் வஞ்சமுகம் குறித்த விழிப்புணர்வையும், வக்கிரமுகம் குறித்த சாடல்களையும் முன்வைக்கின்றன சமூகம் குறித்த அவரது கவிதைகள். சமூகத்தின் அவலங்களும் அலட்சியங்களும் அவற்றில் சுட்டிக்காட்டப்படுகின்றன.

நாளைய சமுதாயம் கவிதையில் எப்படியெல்லாம் இன்றைய துளிர்கள் தவறான போக்கில் திசைதிருப்பப்படுகிறார்கள் என்பதை உதாரணங்களோடு விளக்குகிறார். நாமும் அந்தப் பட்டியலில் இருக்கிறோமா என்று நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ளவேண்டிய தருணமிது.

எது உண்மையான திருநாள் என்று கிரேஸ் சொல்வதில் இருக்கும் உண்மையை மறுப்பார் உண்டா?

சமூகமெனும் காட்டுக்கான விருட்சங்களுக்கு விதை தூவப்பட்டு வளர்ப்பதென்னவோ வீட்டுக்குள். இந்த துளிர் விடும் விதைகள் நல்லமுறையில் அன்பெனும் நீரூற்றப்பட்டும் நற்பண்புகள் என்னும் உரமிடப்பட்டு இனிமையான குடும்பச்சூழல் என்னும் வேலியிடப்பட்டு வளர்க்கப்பட்டால்தானே நல்லதொரு நேரிய விருட்சங்களாய் நாளை வளரக்கூடும். பெற்றவர்கள் செய்யும் பிழைகளுள் பிரதானமானது மற்றக்குழந்தைகளோடு தங்கள் குழந்தைகளை ஒப்பிட்டுப் பழிப்பது. அதைச் சுட்டும் கிரேஸின் வரிகள்

அவளைப் போல ஆடு
இவனைப் போல பாடு
அவனைப் போல படி
இவளைப் போல விளையாடு
அவனைப் போல அது செய்
இவளைப் போல இது செய்
விளங்காமல் விழித்த குழந்தை
விளம்பியது விழிவிரித்து
நானாக நான் இருத்தல் எப்பொழுது?
நானாக நான் இருத்தல் பிழையா?

குழந்தையின் பிஞ்சு நெஞ்சம் கேட்கும் கேள்வியைப் பெற்றோர் இனியாவது புரிந்துகொண்டு தங்கள் பேராசைகளைக் கைவிட்டு குழந்தைகளை குழந்தைகளாய்ப் பார்க்கவேண்டும்.

தாய்மையின் சிறப்பை சிலாகிக்கும் கவிதை சிலிர்ப்பூட்டுகிறது. மழலை உண்ணும் அழகோ மனம் நிறைக்கிறது.

படைத்திடும் அனைவருக்கும்
படைப்பாற்றல் அனைத்துமாகும்

என்கிறார் படைப்பு கவிதையில். நிரூபிக்கிறார் கட்டைவிரலும் ஆட்காட்டி விரலும் கவிபாடும் கவிதையில்.

கையெழுத்தைத் தொலைத்துவிட்டேனே என்று கவிமனம் கதறும் கவிதை வாசிக்கும் நம்மையும் சுருக்கென்று தைக்கிறது.

வாழ்க்கை பற்றிய கவிதைகளில் வெற்றிக்கான பாதையையும் காட்டுகிறார். வாழ்வு சுகப்படும் சூத்திரமும் காட்டுகிறார். கலங்கச் செய்யும் காலத்தின் கணக்கையும் கண்முன்னால் காட்டுகிறார்.

சுருக்கமாகத் துன்பங்கள் தீமைகள் எல்லாம்
தாமரை இலைநீராக அகற்றும் மனம் வேண்டும்

என்று சொல்லி வாழ்வின் இன்பதுன்பங்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும் காட்டுகிறார்.

மொத்தத்தில் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் வெகு அழகாக இக்கவிதை நூலில் அடக்கிக்காட்டியுள்ளார். தமிழின் இனிமையும், சாரமும் கொண்டு இயற்கை சார்ந்த கவிதைகளில் ஈர்ப்பும், சூழல் சார்ந்த கவிதைகளில் சுதாரிப்பும், காதல் சார்ந்த கவிதைகளில் களிப்பும், வாழ்க்கை சார்ந்த கவிதைகளில் உளத்தெளிவுமாக வசீகரிக்கிறார் அன்புத்தோழி கிரேஸ். வாழ்த்துகள் கிரேஸ்.


31 October 2014

வானரக்கண்ணே... என் காதல் பெண்ணே!

நண்பர் இரவீ அவர்கள் சமீபத்தில் ஆனைமலை புலிகள் சரணாலயத்திற்கு சென்றிருந்தபோது, தான் கண்ட காட்சியைப் புகைப்படமாகப் பதிவு செய்து முகநூலில் பதித்திருந்தார். கருவுற்ற பெண் குரங்கை ஆண் குரங்கு பரிவுடன் பார்த்துக்கொள்ளும் காட்சி அது. அந்தப்படத்துக்கான என் வரிகளும் படமும் கீழே....  



வம்சம் தழைக்க வாரிசு சுமக்கும்
வானரக்கண்ணே…
என் காதல்பெண்ணே…
இம்சைகளென்று எண்ணிவிடாதே…
இனியவளே என் பணிவிடைகளை!

ஓடும் கால்களை ஒய்யாரமாய் நீட்டிடு
நீவிக்கொடுத்து என் நேசம் காட்டுவேன்.
தள்ளிய வயிற்றையும் தடவிட அனுமதி
உள்ளிருக்கும் என் செல்லத்துக்கு
உன்மத்தமிகு நன்முத்தங்கள் பதிப்பேன்.

இலையான் கொசுக்கள் அண்டாது
இலையால் விசிறிப் பார்த்திருப்பேன்.
பசியென்று நீ உணருமுன்னே
புசியென்று நான் பலவும் தருவேன்.

இழையோடும் நம் காதல் பெயரால்
இன்னுஞ்செய்யக் காத்திருக்கிறேன்
மழையும் குளிரும் வாட்டுமுன்னே
மகன் பிறந்திடுவானோ சொல்லடி என் கண்ணே!

மெல்போர்ன் மாநகரின் மாகடிகாரம்


மணிக்கொரு முறை 
மாகடிகாரத்தினின்று இறங்கி
மதுர கீதம் இசைக்கிறார் 
 இசைச்சிறார்!











26 October 2014

ஒரு வருத்தமும் ஒரு மகிழ்ச்சியும்!


பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 


சில நாட்களாக நான் வலைப்பூ வருவதில் சிறு இடைவெளி விழுந்துவிட்டது. தொடர்ந்து இந்த வலைப்பூவுக்கு வந்து கருத்திட்ட நட்புகள் அனைவருக்கும் என் அன்பான நன்றி. பலருடைய பதிவுப்பக்கமும் வரவில்லை. வந்து வாசித்தாலும் கருத்திடவில்லை. அதற்காக என்னை மன்னிக்கவும். எதையும் எழுதவும் வாசிக்கவும் இயலாததொரு விரக்தியான சூழலில் சிக்கிக்கொண்டேன்.  

காரணங்கள் ஒன்றா இரண்டா? சில மாதங்களுக்கு முன் என் கணினியில் ஏற்பட்ட கோளாறால் நான் சேமிக்காமல் வைத்திருந்த என்னுடைய படைப்புகள் பலவும் அழிந்துபோய்விட்டன என்பது முதற்காரணமும் முக்கியக் காரணமும். வேறெந்த வெளிக்கலனிலும் சேமிக்காமல் கணினியிலேயே வைத்திருந்தது. முழுக்க முழுக்க என்னுடைய முட்டாள்தனமே என்பதால் என்னை நானே நொந்துகொள்கிறேன். யாராவது என்னைப்போல் படைப்புகளை பத்திரப்படுத்தாமல் இருந்தால் உடனடியாக ஏற்பாடுகளை செய்து பத்திரப்படுத்தவும்.

சமீபத்தில் தோழி தேன்மதுரத்தமிழ் கிரேஸின் கணினி பழுதாகிவிட, நல்லவேளையாக கூகுள் ட்ரைவில் அவர் சேமித்துவைத்திருந்ததால் பெரும்பான்மையைக் காப்பாற்ற முடிந்ததாக சொல்லியிருந்தார். இது பற்றிய ஞானோதயம் இல்லாத காரணத்தாலும் அப்படியெதுவும் நடந்துவிடாது என்னும் அலட்சியத்தாலும் பல அரிய சேமிப்புகளை இழந்துவிட்டிருக்கிறேன். Hard drive –இலிருந்து உள்ளடக்கங்களை மீட்க இங்கு ஆகும் செலவுக்கு புதிதாக இரண்டு மடிக்கணினி வாங்கிவிடலாம். அவ்வளவு செலவு செய்து மீட்கவேண்டுமா என்ற யோசனை முன்னடத்த, முயற்சியைக் கைவிட்டேன்.

அழிந்தவற்றுள் பல இதுவரை நான் வெளியிடாத ஆஸ்திரேலிய மொழிபெயர்ப்புக் கதைகளும், ஆஸ்திரேலிய உயிரினங்கள் பற்றிய என் தமிழாக்கப் பதிவுகளும் கவிதைத்துளிகளும் சில புகைப்படங்களுமாகும். என்னுடைய பல மாதகால உழைப்பும் வீணாகிவிட்டதை எண்ணும்போது மேற்கொண்டு எழுதுவதற்கு மனம் உடன்படவில்லை. எழுத்தில் பெரும்தொய்வு உண்டாகிவிட்டது. ஆனால் வை.கோபாலகிருஷ்ணன் சார் நடத்தும் விமர்சனப்போட்டிக்கு மட்டும் நேரம் ஒதுக்கி எப்படியோ எழுதி அனுப்பிவிடுமளவுக்கு உள்ளத்தில் திடம் இருந்துகொண்டு இருக்கிறது. அந்த திடமும் வாய்க்கப்பெற்றது கோபு சார் அவர்களுடைய ஊக்குவிப்பாலும் உந்துதலாலுமே என்றால் மிகையில்லை. கோபு சார் அவர்களுக்கு இவ்வேளையில் என் அன்பான நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.  


அழும் குழந்தையைத் தேற்றி, வேடிக்கை காட்டி, சமாதானப்படுத்தி இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயல்வது போல் என் மனக்குழந்தையை வேறுவழிகளில் திசைதிருப்பி சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஏதுவாய் ஒரு வாய்ப்பு தற்செயலாகவே அமைந்திருக்கிறது.

அட்சயப்பாத்திரம் வலைப்பூ பதிவர் தோழி மணிமேகலா அவர்கள் மாதாமாதம் சிட்னியில் நடத்தும் உயர்திணை என்னும் இலக்கியச்சந்திப்பில் கலந்துகொள்ள சென்றபோது புதிய தோழி திருமதி கார்த்திகா கணேசர் அவர்கள் மூலம் ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் இணைய வானொலியில் பங்காற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த இணைய வானொலி முழுக்க முழுக்க தமிழார்வலர்களாலும் தன்னார்வலர்களாலும் நடத்தப்படுவது. இதில் எனக்கும் ஒரு வாய்ப்பு அமைந்தமைக்கு என்னிரு தோழியர்க்கும், வாய்ப்பளித்த வானொலியின் நடத்துனர் திரு. இளலிங்கம் ஐயா அவர்களுக்கும் என் கனிவான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஆஸ்திரேலிய நேரம் இரவு 10.10 முதல் 11.10 வரையிலும் காற்றினிலே வரும் கீதம் என்ற பெயரில் நான் தொகுத்து வழங்கும் திரையிசைப் பாடல்கள் தொகுப்பொன்று கடந்த மூன்று வாரங்களாக ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மறு ஒலிபரப்பு மறுநாள் புதன் கிழமை ஆஸ்திரேலிய நேரம் மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை ஒலிபரப்பாகிறது. நிகழ்ச்சியின் நேரம் நாட்டுக்கு நாடு மாறுபடும் என்பதால் மற்ற சில நாடுகளில் ஒலிபரப்பாகும் நேரத்தை இங்கு பகிர்கிறேன்.

ஆஸ்திரேலியா
செவ்வாய்க்கிழமை - இரவு 10.10 முதல் 11.10 மணி வரை
மறு ஒலிபரப்பு மறுநாள் புதன் மாலை 4.00 மணி முதல் 5.00 மணிவரை

இந்தியா
செவ்வாய்க்கிழமை மாலை 4.40 முதல் 5.40 வரை
மறு ஒலிபரப்பு -  புதன் முற்பகல் 11.00 முதல் 12.00 வரை

லண்டன்
செவ்வாய் -  மதியம் 12.10 முதல் 1.10 வரை
மறு ஒலிபரப்பு - புதன் அதிகாலை 2.00 முதல் 3.00 வரை

கனடா
செவ்வாய் -  காலை 7.10 முதல் 8.10 வரை
மறு ஒலிபரப்பு -  நள்ளிரவு 1.00 முதல் 2.00 வரை

டென்மார்க்
செவ்வாய் -  பிற்பகல் 1.10 முதல் 2.10 வரை
மறு ஒலிபரப்பு  - புதன் காலை 7.00 முதல் 8.00 வரை


வானொலியைக் கேட்க www.atbc.net.au என்ற தளத்துக்குச் சென்று உரிய player –ஐத் தரவிறக்கிக்கொண்டால் தேவையான நேரத்தில் கேட்டு மகிழலாம். இது இணைய வானொலி என்பதால் கணினி, ஐபேட் மற்றும் மொபைல்களில் மட்டுமே கேட்க இயலும். வரும் வாரங்களில் நிகழ்ச்சியைக் கேட்க முடிந்தால் கேட்டு உங்கள் கருத்துக்களை இங்கு வலையில் பதிவு செய்யுங்கள். முகநூலிலும் பகிர்ந்துள்ளேன். அங்கும் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறேன். 


நன்றி நட்புறவுகளே.