28 September 2013

புரிதலுணர்வு



தூங்குவதுபோல்
பாசாங்கு செய்கிறாய் நீ!
துயிலெழுப்புவதுபோல்
பாவனை செய்கிறேன் நான்!
விழிக்கவிரும்பா உன்னுளத்தை நானும்
எழுப்பவிரும்பா என்னுளத்தை நீயும்
பொய்யறப் புரிந்துகொண்டபோதும்
தொடர்கிறதோர் போலிப்போராட்டம்,
தூங்குவதும், துயிலெழுப்புவதுமாய்!

*********************************** 
(படம் நன்றி: இணையம்)

17 September 2013

அனுதாபம்



உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன? 
நான் கலங்கிநிற்கும்போதெல்லாம்
கருணை காட்டுகிறாய் நீயும்.

ஒன்றுக்கொன்று சமன் செய்தாலும்
நன்றியால் நிறைகிறேன் நாளும்!

ஆனாலும் அந்நன்றிக்கடனானது
எனையழுத்தும் அதிபாரமானது.
உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன?

என்னுடைய ஒரு பெருமூச்சேனும்
உன்னுடையதாகுமோ ஒருநாளேனும்?

அவ்விழிகளில் வழியக்கூடுமோ
இவ்விழிகளின் கண்ணீர்த்தாரை?

சத்தியத்தை மூடிவைக்கலாம்,
சத்தத்தை எதுவரை முடியும்?
உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன?

அடுத்தவருக்கு தன் துயரை
அளிக்க இயல்பவர் யாரே?

அடுத்தவர் துயரை தனதாய்
ஏற்க இயல்பவர் யாரே?

ஏன் நமக்கிடையே இப்படியொரு
ஏமாற்றுப் பண்டமாற்று?
உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன?

இத்தகு பாதையில்தான் நம் பயணம்
ஏனோ ஏற்கமறுக்கிறோம் நாமும்.

ஒவ்வொரு பயணியும் ஒற்றையாய்
பரஸ்பரம் துக்கம் பகிரவியலாதவனாய்!

அடுத்தவர் படும் வேதனை கண்டு
தானும் வேதனை காட்டுவோரெல்லாம்
அவர்தம் துயர்நீக்கும் சூட்சுமம்
மகிழ்வுதானென்பதை மறைத்துவிடுகிறார்.

உனக்குத் துன்பமெனில் எனக்கு இன்பமது.
உலகை அழுத்தும் மாபெரும் சாபக்கேடிது!
உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன?

(மூலம் : ஹரிவம்ஷ்ராய் பச்சன் எழுதியஸம்வேதனாஎன்னும் இந்திக்கவிதை. வல்லமையில் வெளியானது. மூலக்கவிதை கீழே)


संवेदना

क्या करूँ संवेदना लेकर तुम्हारी ?
क्या करूँ ?

मैं दुःखी जब-जब हुआ
संवेदना तुमने दिखाई,
मैं कृतज्ञ हुआ हमेशा
रीति दोनों ने निभाई,
किंतु इस आभार का अब
हो उठा है बोझ भारी;
क्या करूँ संवेदना लेकर तुम्हारी ?
क्या करूँ ?

एक भी उच्छ्वास मेरा
हो सका किस दिन तुम्हारा ?
उस नयन से बह सकी कब
इस नयन की अश्रु-धारा ?
सत्य को मूँदे रहेगी
शब्द की कब तक पिटारी ?
क्या करूँ संवेदना लेकर तुम्हारी ?
क्या करूँ ?


कौन है जो दूसरे को
दुःख अपना दे सकेगा ?
कौन है जो दूसरे से
दुःख उसका ले सकेगा ?
क्यों हमारे बीच धोखे
का रहे व्यापार जारी ?
क्या करूँ संवेदना लेकर तुम्हारी ?
क्या करूँ ?

क्यों न हम लें मान, हम हैं
चल रहे ऐसी डगर पर,
हर पथिक जिस पर अकेला,
दुःख नहीं बँटते परस्पर,
दूसरों की वेदना में
वेदना जो है दिखाता,
वेदना से मुक्ति का निज
हर्ष केवल वह छिपाता,
तुम दुःखी हो तो सुखी मैं
विश्व का अभिशाप भारी !
क्या करूँ संवेदना लेकर तुम्हारी ?
क्या करूँ ?


5 September 2013

மறதி



வாவென்றழைத்த கணமே
வந்தென் வாய்குவியும் வார்த்தைகளும்
மனங்குவியும் மொழிகளும்
அடம்பிடித்தோடும் குழந்தைகளாய்
இன்றென் வசப்பட மறுக்கின்றன!

நிகழ்வுகளைக் கொட்டிக் கொட்டி
நிறைத்துவைத்த நினைவுக்கிடங்கும்
ஆடிமுடிந்த மைதானமென
ஆளரவமற்றுக் காட்சியளிக்கிறது!

எதிரிலிருப்பவனின் அகன்ற நெற்றியும்,
புருவஞ்சுழித்தப் பார்வையும்
எவரையோ நினைவுறுத்த,
எஞ்சியிருக்கும் என் ஞாபகப்பொதியிலிருந்து
எத்தனையோ பக்கங்களைப் புரட்டிப்பார்த்தும்,
பிறர் சொல்லாமல் அறிய இயலவில்லை,
அவனென் அன்புமகனென்று!

ஆழ்ந்த பெருமூச்சுடன்
அலுத்துக்கொள்கிறான் அவனும்,
இது ஆயிரமாவது அறிமுகப்படலம் என்று! 
சிறுபிள்ளைகள் கட்டிய மணல்வீடென
சிறுகச் சிறுகச் சரிகிறது என் நினைவுக்கோட்டை!

முழுதும் சரிந்து மண்ணாகுமுன்னே
எழுதிட நினைத்தேன் எவ்வளவோ! 
சட்டெனத் தோன்றியத் தயக்கமொன்றால்
தடுமாறி நிற்கிறது, பேனா!

எனக்கென்று ஒரு பெயர்
இருந்திருக்கவேண்டுமே,
எவரேனும் அறிவீரோ அதை?