30 September 2012

பனைமரத்திடலும், பேய்களும்

 
 
 
பள்ளிக்கூடு விடுத்துப் பறக்கும்
பால்யநாட்களின் பகற்பொழுதுகளில்
பட்டாம்பூச்சிச் சிறகுகள் யாவும்
பயத்தால் பின்னிக்கொள்ளும்
பனைமரத்திடல் பார்த்தமாத்திரத்தில்!
 
உச்சிப்பனையில் உட்கார்ந்திருக்கும் பேய்களுக்கு
உச்சிப்பொழுதே உகந்ததென்றும்
அச்சமயம் ஆங்கு நடமாடுவோரை,
கொடுங்கரங்களால் பாய்ந்து பற்றி,
கோரைப்பல்லால் கவ்விக்கொல்லுமென்றும்
பலியானவரில் ஒருவர்
தன் பக்கத்து வீட்டு மாமாவென்றும்
விழிவிரிய பாக்கியலட்சுமி சொன்னதெல்லாம்
வழித்துணையாய் வந்து பாடாய்ப்படுத்தும்.
 
சடசடவென்று சத்தமிட்டபடி,
படபடக்கும் ஓலைகளைப் பற்றித்தொங்கியபடி
வா வாவென்று பேய்கள் யாவும்
வரவேற்பதுபோல் தோன்ற....
 
தோளில் தொத்திக்கொண்டு
உடல் அழுத்தும் பயத்தை
எந்தக் கடவுள் பெயரால் விரட்டுவது
என்று புரியாமல் நொடிப்பொழுது குழம்பி,
 
அம்மா அறிமுகப்படுத்திய அம்மனைக் கொஞ்சமும்,
பள்ளியில் பரிட்சயமான
பரலோகத்திலிருக்கும் பரமபிதாவைக் கொஞ்சமும்
எதற்கும் இருக்கட்டுமென்று அல்லாவையும் கொஞ்சம்
அவசரமாய்த் துணைக்கழைத்தபடி
கண் இறுக்கி, காது பொத்தி,
கணவேகத்தில் கடக்கமுயலும்போதெல்லாம்
காற்றுக்கு வந்துவிடும் உற்சாகம்!
 
புழுதிகிளப்பியபடி, குப்பைகளால் கும்மியடிக்க,
வெக்கை தணிக்கும் வேகம் கொண்டதுபோல்
பனைமரம் யாவும் பக்கமிருக்கும் பழுத்த ஓலைகளால்
பலத்த சத்தத்துடன் விசிறிக்கொள்ள,
 
விழுந்தடித்துக்கொண்டு ஓடும் வேகத்தில்
கருவேலமோ, நெருஞ்சியோ
பாதம் கிழிக்கும் சுரணையுமற்று
வீடு வந்து சேர்ந்து,
விட்டிருந்த மூச்சைத் திரும்பப் பெற்றதொரு காலம்.
 
வாழ்க்கைப்பட்டு வேற்றூர் புகுந்து,
வாழ்க்கைப்பள்ளியில் வருடம் சில கழிந்து,
அச்சங்களின் ஆணிவேர்
அசைக்கப்பட்டுவிட்டிருந்தத் தருணமொன்றில்...
பரவசம் எதிர்நோக்க,
பனைமரத்திடல் கடந்தபோது பகீரென்றது!
 
மரங்களற்ற திடல் மயான அமைதி கொண்டிருக்க,
தகரப் பலகையொன்று தனித்து நின்றிருந்தது,
அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின்
அவசர வருகை சுட்டி!
 
மருகிய மனத்திடையே எழுகிறது ஓர் ஐயம்.
பறவைகளைப்போலவே பனைமரப்பேய்களும்
இனி குந்த இடமின்றி குமைந்துபோமோ?

16 September 2012

அம்மா என்றொரு மனுஷி

 
 
புதிய திரைப்படமொன்றின்
திருட்டுப்பிரதியினைப் பார்வையிட
கூடத்தில் அனைவரும் கூடியிருக்கும் வேளையிலும்
உணவு தயாரிக்கும் உரிமை மட்டும்
எக்காரணம் கொண்டும் எவராலும் பறிக்கப்படாமல்
அவளிடமே அதீதமாய் விட்டுவைக்கப்படுகிறது.
 
முன்தினம்முதலாய் குளிர்சுரம் கண்டு
கம்பளிக்குள் முடங்கி நடுங்கி,
பினத்திக்கொண்டிருந்தவள்,
மாத்திரை முழுங்கிய மறுகணமே
பரவாயில்லை இப்போதென்று சொல்லி
பட்டென எழுந்துகொள்வாளென்று
எல்லோராலும் அனுமானிக்கப்படுகிறது.
 
குற்றாலத்துக்கு குடும்பத்துடன்போக
மகிழுந்து பேசி மற்றவரெல்லாம் ஏறியபின்
அவளொருத்திக்கு மட்டும் இடமில்லையென்பது
இறுதிகணத்தில் தெரியவர....
'நானிருக்கேனே வீட்டில்!'
வழக்கம்போலவே அந்த வாசகம் 
அவள் வாயிலிருந்தே வரவேண்டுமென்று
உளமாற வேண்டப்படுகிறது.
 
அவளது ஒப்புதலின்றி
எதுவும் செய்வதில்லையென்ற
அப்பாவின் பிரதாபப் பேச்சுக்குமுன்
ஊமையாகிப் போகின்றன,
பலவந்தமாய்ப் புறக்கணிக்கப்பட்ட
அவளது எதிர்ப்புகளும், மறுப்புகளும்.
 
இத்தனைக்குப் பின்னும்
இயந்திரமனுஷியாய் இல்லாமல்
புன்னகையுடனும் புத்துணர்வுடனும்
அன்றாடம் வலம்வரவேண்டுமென்று அனைவராலும்
அதிகபட்சமாய் எதிர்பார்க்கப்படுகிறது.

12 September 2012

அடைகோழி கருப்பி

 
 
 
குறுகுறுக்கும் பார்வையை அங்குமிங்கும் ஏவி,
குறைக்கேவலொன்றை வெகு அமர்த்தலாய்க் கேவி
கூட்டுமூலையோரம் மீண்டும் மீண்டும்
வந்து அமர்ந்துகொள்கிறது அடைகோழி கருப்பி.
 
விரட்ட விரட்ட போக்குக் காட்டி
மறுபடியும் அடைய வந்ததை
ஆத்திரத்துடன் துரத்தியமுக்குகிறாள் ஆச்சி.
 
படபடக்கும் இறக்கையினின்று ஒற்றை இறகு பிய்த்து
அலகில் அலகுக்குத்த முயல்பவளை,
ஆக்ரோஷம் காட்டி அலைக்கழிக்கிறது கருப்பி.
 
முட்டைகளை அபகரித்தாய், போதாதா?
மூக்குத்தியிட்டு என் மென்தவம் களைத்து
மறுகருத்தரிப்புக்கு விரட்டுகிறாயே
மனுஷியா நீயென்று மூர்க்கம் காட்டுகிறது
தன் முரட்டுக்கேவலில்.
 
ஆச்சிக்கும் கருப்பிக்கும் இடையில் நடக்கும்
போராட்டத்தைப் பார்த்தபடி பாயில் கிடக்கிறாள்
பத்துநாளுக்குமுன் பிள்ளைபெற்ற பாதகத்தி ஒருத்தி.
 
கண்மலரா பச்சிளம்சிசுவின் வாயில்
கள்ளிப்பால் புகட்டப்பட்டக் கடைசித் தருணத்திலும்
கருப்பியின் ரோஷத்தில் கடுகளவும் காட்டத்தவறியவளின்
செவிவழி நுழைந்து அவள் கருப்பையைக்
கொத்திக்குதறிக் கிழிக்கிறது
கருப்பியின் கோரக் கொக்கரிப்பு!
 
 
 

4 September 2012

இனியவன் என் இணையவன்


 
  
என் இதயத்தில் உலாவரும்
என் இணையவனுக்காய் உலாவருகிறது
இணையத்திலோர் இன்கவியொன்று! 
 
என்னோடு ஊடுபவனும் அவனே!
ஊடி, காதல் உறவாடுபவனும் அவனே!
உணர்வினில் ஊடுருவி என்
உயிரணைபவனும் அவனே!
உறவினூடே எனை உயர்த்தி
உளம் நிறைபவனும் அவனே!

 மனையிலமர்த்தியது போதாதென்று
பொன்னரியணையிலும் அமர்த்திட
பொல்லாத ஆசைகொண்டு இழைக்கிறான்
தன் உழைப்பினாலொரு சிம்மாசனம்!
களைப்பின்றி எழுதிக்கொண்டேயிருக்கிறான்
நாளெல்லாம் தன் நேசத்தின் நீள்சாசனம்!
 
குடும்பவிளக்கின் அழகு
கூடத்து இருப்பென்றிருந்தேன்.
குன்றத்து ஒளிர்தலே
பெண்குலத்திற்கு அழகென்றே
மன்றத்திலேற்றிவைத்தான்;
தன் மனதிலும் ஏத்திவைத்தான்!
 
பொருள்வயிற்பிரியும் செயலும்
ஆடவர்க்கியல்பென்றறிந்தும்
இயல்பறுத்தென்னை யாண்டும்
இணைத்தழைத்துச் செல்கிறான்,
லும் எம்மால் எள்ளற்பொறுத்தல்
இயலாது பிரிவின் இன்னற்பொறுத்தலென்றே
இனிதாய் விடைபகர்கிறான்.
 
நாலும் என்னை அறியச் செய்கிறான்,
நானே என்னை அறியச் செய்கிறான்,
நானாய் என்னை இயங்கச் செய்கிறான்,
நாளும் என்னை உவக்கச் செய்கிறான்.
 
எந்நாளும் தன்னலம் மறக்கிறான்,
என்னலத்தைத் தன்னலம் என்கிறான்,
என்னுறவு தன்னுறவு எனும் பேதமற்று
எவ்வுறவும் நம்முறவு என்று பரிகிறான்.
 
அகிலத்தைச் சுழற்றிவிடுகிறான்,
அழகாய் என் விரல்நுனியில் பொருத்தி!
சகலமும் நீயேயென்று சரணடைகிறேன்,
அவனை என் நெஞ்சத்தில் இருத்தி!
 
தொழில்நுட்ப உலகைப்
பரிச்சயமாக்குகிறான் எனக்கு!
தொல்லையில்லா உலகைப்
பரிசாக்குகிறேன் அவனுக்கு!
வாழ்க்கைப் பாதையின் முட்கள் அகற்றியபடி
முன்னால் நடக்கிறான் அவன்,
செருக்கோடும் காதற்பெருக்கோடும்
செம்மாந்து பின்தொடர்கிறேன் நான்!
 
என் எழுத்தை வியந்துபோற்றும் வாசகன்!
என் கருத்தை நயந்துவியக்கும் நாயகன்!
என்னால் முடியுமாவென்றே
உன்னி முடிப்பதற்குள்
உன்னால் முடியுமென்றழுந்தச்சொல்லி
உணர்வாலும் செயலாலும் உந்துபவன்! 

அண்ணனும் தம்பியுமாய்
ஆருயிர் தோழனும் தந்தையுமாய்
ஆசைக் கணவனும் காதலனுமாய்
அவனிருப்பே எனக்கு ஆயிரம் படைக்கலம்!
அவன் தயவால்தானே இன்றெனக்கு
அவனியும் அஞ்சறைப்பெட்டியுள் அடைக்கலம்! 
 
அச்சிலேற்றவியலாக் கவிதைகள்
ஆயிரமாயிரம் அவனுக்காய் புனைந்திருந்தும்
எச்சமாயொன்று எழுந்ததேன் இக்கவியரங்கம்? 

இருபதாண்டு நிறைவில் இனிக்கும்
என்மனநிறைவின் பரிசாய் இருக்கட்டுமே
என் மனவாழம் தோண்டிய அன்பின் கவிச்சுரங்கம்!
 *****************************************
(இருபதாவது திருமண நாளை நேற்றுக் கொண்டாடித் திளைத்த மகிழ்வில் எழுதியது)