29 August 2012

அரைநூற்றாண்டு கழித்து வந்துசேர்ந்த காதல்கடிதம்



 
 

முக்கால் நூற்றாண்டுக்குப் பின் நூலகம் வந்த புத்தகத்தைப் பற்றி முன்பு பார்த்தோம். நூலகத்தின் பத்திரிகைகளுக்கிடையில் சிக்கியிருந்த கடிதமொன்று அரை நூற்றாண்டுக்குப் பின் உரியவரைத் தேடிவந்தக் கதை தெரியுமா உங்களுக்கு? அதுவும் சாதாரணக் கடிதம் அல்ல, காதல் கடிதம்.
 

கிட்டத்தட்ட 53 வருடங்களுக்கு முன் காதலி வான்னி தன் காதலன் க்ளார்க்குக்கு (அதுதான் அவர் பெயர்) எழுதிய கடிதம் அது. கல்லூரி திரும்புமுன் ஏன் தன்னை தொலைபேசியில் அழைத்துப் பேசலைன்னு வருத்தப்பட்டு கேட்டு எழுதியிருக்காங்க. ஆனால் அந்தக் கடிதம் க்ளார்க்கை என்ன காரணத்தாலோ வந்தடையவே இல்லை.
 

அவரும் படிப்பை முடிச்சிட்டு, ஊருக்கு வந்து தனக்காகக் காத்திருந்த வான்னியைக் கல்யாணமும் செய்து,  சேர்ந்து வாழ்ந்து,  நான்கு குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு, பின் விவாகரத்தும் பெற்று விட்டாராம். அதோடு இல்லை, அவர் மதம் மாறி முகம்மது சித்திக்காகவும் மாறிவிட்டாராம். சென்றவருடம்  அவரைத் தேடி வந்தடைந்திருக்கிறது அக்கடிதம்.
 

நான்கு ஒரு சென்ட் அஞ்சல்தலைகளைத் தாங்கி 1958 ஆம் வருட முத்திரையை ஏற்று நிற்கும் அக்கடிதம் பென்சில்வேனியாவிலிருக்கும் கலிஃபோர்னியப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல் பெட்டிக்கு சிலவாரங்கள் முன்புதான் வந்து சேர்ந்திருக்கிறது. வியப்புக்குரிய கடிதம் பற்றி ஊடகங்கள் வாயிலாக அறிந்த அவருடைய அவருடைய நண்பர்களும் உறவினர்களும் தற்போது இண்டியானாபோலிஸில் வசிக்கும் 74 வயதான சித்திக்கிடம் இந்த விவரத்தைத் தெரிவித்துள்ளனர். அந்த செய்தியைக் கேட்ட சித்திக் சொல்லமுடியாத உணர்வுக்கலவையில் மிதக்கிறதா சொன்னாராம். இதை நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அந்தக் கடிதத்தின் மேல் அத்தனையொன்றும் ஆர்வமில்லை, இருந்தாலும் ஒரு குறுகுறுப்போடக் காத்திருக்கிறேன்என்று சொன்னாராம்.
 

எல்லாம் சரி, கடிதத்தை உரியவர் பிரித்துப் பார்க்குமுன்பே அது ஒரு காதல் கடிதம் என்று எப்படித் தெரியும்னு யோசிக்கிறீங்களா? அதிலிருக்கும் அஞ்சல் தலைகளை வைத்துதான். காதலர்களுக்கென்று பிரத்யேக அஞ்சல்தலைகளான்னு ஆச்சர்யப்படாதீங்க. எல்லோரும் உபயோகிக்கும் பொதுவான அஞ்சல்தலைகள்தாம் அவை. ஆனால் அவற்றைத் தலைகீழாய் ஒட்டினால் அது காதலின் அடையாளமாம். (காதல் வந்தாலே தலைகால் புரியாதுன்னு இதை வைத்துதான் சொல்றாங்களோ?)
 

தலைகீழ் மட்டுமில்லை, அஞ்சல் தலையின் ஒவ்வொரு நிலைக்கும் ஒரு பொருள் உண்டாம். சொல்லவா?
 

நேராக இருந்தால் - வியாபார விஷயம். 

தலைகீழாய் இருந்தால் - காதல், தனிமை, தாபம் 

தலைப்பகுதி வலப்பக்கம் பார்த்தபடி கிடைமட்டமாக இருந்தால் - அன்பு முத்தங்கள்

தலைப்பகுதி இடப்புறம் பார்த்தபடி கிடைமட்டமாக இருந்தால் - நான் உன்னை விட்டு நீங்கவே மாட்டேன் 

மூலைவிட்டத்தை முன்னிறுத்தி அஞ்சல் தலையின் மேற்பகுதி வலப்பக்கம் பார்த்திருந்தால் - என்னைத் திருமணம் செய்துகொள்வாயா? 

அதற்கு எதிர்திசையில் அதாவது தலை இடப்பக்கம் பார்த்தபடி இருந்தால் - உன்னை மணப்பது உறுதி.
 

பாருங்க, அந்தநாளிலேயே அமெரிக்கக் காதலர்கள் அஞ்சல்தலைகளை ஒட்டுவதிலேயே சங்கேத மொழியை உருவாக்கிக் காதலித்திருக்காங்க.
 

எங்க கிளம்பிட்டீங்க? கடிதம் எழுதத்தானே? இந்த முறையில் தபால் தலைகளை ஒட்டுமுன் ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வச்சிக்கணும். யாருக்கு எழுதறீங்களோ அவங்களுக்கும் இந்த சங்கேத மொழி புரிஞ்சிருக்கணும். இல்லைன்னா.... முதலுக்கே மோசமாகிடும். (ஆமா, ஒரு ஸ்டாம்ப் கூட ஒழுங்கா ஒட்டத்தெரியல, இதையெல்லாம் கல்யாணம் பண்ணிகிட்டு....) 
 

இன்னும் ஒரு விஷயம், இந்திய அஞ்சல்துறை இம்மாதிரிக் கோணல்மாணலா  அஞ்சல்தலைகள் ஒட்டப்பட்டக் கடிதங்களை நிராகரிச்சிட்டா, அப்புறம் என்னைத் திட்டக்கூடாது. சரியா?
 

காதலுக்காக அஞ்சல் தலைகள் பற்றிப் பார்த்தோம். அஞ்சல் தலைகளைக் காதலிக்கிறவங்களைப் பற்றித் தெரியுமா? அஞ்சல் தலை சேமிப்பில் ஈடுபடுகிறவங்களோடு பேசிப்பாருங்க, புரியும். அஞ்சல்தலைகள் சேகரிப்பிலும், பன்னாட்டு நாணயங்கள் சேகரிப்பிலும் எனக்கும் தீராத ஆர்வம் உண்டு. கடந்த இருபத்தைந்து வருடங்களா சேகரிக்கிறேன். மும்முரமா இல்லைன்னாலும், அவ்வப்போது கிடைப்பதை. நல்ல உற்சாகமான பொழுதுபோக்கு அது.
 
**************************************************************
நன்றி: யாஹூ செய்திகள் (ஜூலை 16, 2011)

25 August 2012

பதிவர் திருவிழா நேரடி ஒளிபரப்பைக் கண்டுகளிக்க...




சென்னையில் நடைபெற உள்ள
 
உலகத் தமிழ்ப் பதிவர்கள் திருவிழா 
 
சிறப்புற நடைபெற என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

விழாவைக் கண்ணுற நான் தயார்.

என்னோடு கண்டுகளிக்க நீங்களும் தயாரா?
 
 
 

 
 
 
 
விழாப் பொறுப்புகளைத் தங்கள் தோள்மேல் சுமந்து
ஒற்றுமையுடனும் ஒன்றிப்புடனும் பணியாற்றும்
வலையுலக நண்பர்களுக்கும் தங்கள் இதயங்களில் சுமந்து
 பங்கேற்க விழையும் அன்பு உறவுகளுக்கும்
மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். 
சாதி, மத, இன பேதங்களை மறந்து தமிழால் ஒன்றுபடுவோம்.
பதிவர் உலகின் ஒற்றுமை காப்போம்.  

14 August 2012

பறத்தல் பறவையியல்!





திறந்திருக்கிறது சாளரம்!
பகல்களில் முட்டிமோதிய கதவது!
பற்பல கனவுகளில் கண்டிருந்த நிகழ்வது!
இறுகிக்கிடந்ததை இறுகப்பற்றி
திறந்துவிட்டது சூறைக்காற்று!

பறந்துசெல்லும் வழியறிந்தும்,
பரந்த வானம் அழைத்தும்
சிறகசைக்க மனமின்றி
சிறைப்பட்ட சிற்றறைக்குள்,
சிதறடிக்கப்பட்ட தானியங்களில்,
சிந்தை லயித்து நிற்கும்

இயல் மறந்த பறவையதற்கு
பறவையென்ற பெயரும் எதற்கு?
பக்கமிருக்கும் சிறகுகளும் எதற்கு?

*****************

(22 ஆகஸ்ட் 2011 வல்லமையில் வெளிவந்தது)

8 August 2012

ஏக்கந்தவிர்ப்பாய் என் மணியாரமே...






அறிதுயில் கொள்ளும் அழகுக் கண்மணி,
அறிவேனடி உன் அழும்பின் பின்னணி. 
ஆக்கித் தருவேனடி பணியாரம்
ஏக்கந்தவிர்ப்பாய் என் மணியாரமே. 

கட்டாயம் பண்ணுவேன் சீராளம்,
கணக்கற்று நீயுண்ணலாம் ஏராளம். 
கூடவே செய்வேனடி போளி,
கொஞ்சமும் செய்யவில்லை கேலி. 

பாலப்பமும் இடியாப்பமும் புட்டும்
பக்குவமாய் உனக்கொருநாள் கிட்டும். 
பொங்கல் பூரி லட்டோடு முறுக்கும்
பாயசம் அதிரசம் தேன்குழலும் இருக்கும்.

இட்டிலியும் தோசையும் வடையும்
இன்னுமின்னும் உன்மனம் குடையும்
பலகாரங்களின் பெயர்களைச் சொல்லிடுவாய்,
சிலகாலத்தில் யாவும் சேரும் உன் வாய்!

வாரி வளைத்துத் தின்றிட நீயும்
வயிறு நிறைந்து உவப்பேன் நானும். 
ஆசைப்படும் அத்தனையும் அல்லது
அதில் ஒன்றேனும் கிடைக்கும் வரை...
 

பாசமுடன் நான் கொடுக்கப்
பருகிடுவாய் இப்பழங்கஞ்சி.
பசியறியாக் கனவொன்றுக்குக்
காத்திருப்பாய் கண் துஞ்சி!
******************
படம் உதவி: இணையம்

1 August 2012

கிணற்றுத் தவளைகள்






நிறைவில்லை, குறைவுமில்லை,
மத்தியில் நிலைத்திருக்கிறது
மகிழ்ச்சித் துலாக்கோல்!
வெள்ளமில்லை, வற்றவுமில்லை,
தேங்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது
தினசரி வாய்க்கால்!

பொன்னும் பொருளும் இன்னபிறவும்
என்றுமே கையிருப்பில் இருந்ததில்லை,
உண்ணும் உணவுக்காய் ஓரிடம்
கையேந்தும் நிலையிலும் இருந்ததில்லை.

கண்ணே மணியே முத்தே என்று
அன்பின் ஆராதனைகள் அனுபவமில்லை,
நாயே பேயே பிசாசே என்று
நாராசப்பேச்சையும் செவிகள் கேட்டதில்லை.

உச்சாணிக் கொம்பேறி ஆட்டமாட
உன்மத்தம் எந்நாளும் கொண்டதில்லை,
அச்சாணி முறிந்தவண்டியினைப் போல்
முடங்கிக் கிடக்கவும் விருப்பமில்லை.

சாதனையோ, வேதனையோ சந்திப்பதில்லை,
சராசரி மனித வாழ்க்கைகள்!
கடலையோ, ஆற்றையோ சிந்திப்பதில்லை,
கிணறு வாழ் மண்டூகங்கள்!

***********************************
படம் உதவி: இணையம்