30 August 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (13)


விக்னேஷுக்கு எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. அம்மாவின் கண்மூடித்தனமான அன்பின் ஆளுமையிலிருந்து விடுபட்டு, அவரைத் தன் அன்புப்பிடிக்குள் கொண்டுவரவேண்டும் என்று விரும்பினான்.

இடையில் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்புகளை ஒரு கெட்ட கனவென நினைத்து மறக்க முயன்றான். அம்மாவைப் பார்த்தபோது ஒரு அறியாக்குழந்தைபோல் தோன்றியது. என்னைவிட்டு விலகிவிடாதே என்று அவரது பார்வை கெஞ்சியது.

இல்லையம்மா...உங்களை விட்டு ஒருபோதும் விலகமாட்டேன். என் அன்பு தெய்வமே! விக்னேஷின் மனம் இளகியது.

அம்மா சோபாவில் சாய்ந்தவண்ணம் ஏதோ பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். அம்மாவின் அருகில் சென்று அமர்ந்தான்.

"என்னப்பா?"

அம்மா அவன் தலையை இதமாய்க் கோதினார். அவர் கைகளை எடுத்துத் தன் கரங்களில் பொத்திக் கொண்டான்.

"அம்மா! நான் கொஞ்ச நேரம் உங்க மடியில் தலைவச்சுப் படுத்துக்கவா?"

அம்மா நெகிழ்ந்துவிட்டார். பத்திரிகையை கீழே வைத்துவிட்டு அவனை அணைத்துக்கொண்டார்.

"என்னப்பா, உடம்புக்கு முடியலையா? இல்ல....மனசு சரியில்லையா?"

"ரெண்டுமில்லம்மா, நான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!"

"அதுதானேப்பா எனக்கு வேணும்!"

மடியில் படுத்திருந்த மகனின் முன்னெற்றியில் பரவியிருந்த முடிகற்றையை ஒதுக்கி அவன் முகத்தை வருடினார். விக்னேஷ் ஒரு குழந்தையாகவே மாறியிருந்தான்.

நாகலட்சுமிக்கு மகிழ்வும் வியப்பும் ஒருசேர உண்டானது. என் பிள்ளை என்னிடமே வந்துவிட்டான். கடவுளே...உனக்கு  நன்றி.

"அம்மா! நாளைக்கு நான் லீவு போட்டிருக்கேன், டாக்ஸிக்கும் சொல்லிட்டேன், நாம நாளைக்கு திருவேற்காடு வரைக்கும் போயிட்டு வரலாமா?"

"என்னப்பா, திடீர்னு?"

"வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கறீங்க, உங்களை எங்கேயாவது வெளியில் அழைச்சிட்டுப் போவணும்னு தோணிச்சு. அன்னைக்கு வேலைக்காரப்பொண்ணு திருவேற்காடு போய்ட்டுவந்து பிரசாதம் தந்தப்போ...எனக்குதான் அந்தக் கோயிலுக்குப் போற பாக்கியம் கிடைக்கலேன்னு லேசான வருத்தத்தோடு சொல்லிட்டிருந்தீங்க. எங்கம்மாவுக்கு எப்படி அந்தப் பாக்கியம் இல்லாமப் போகும்னுதான் இந்த ஏற்பாடு."

நாகலட்சுமிக்கு மகனை நினைத்து பெருமையாக இருந்தது. ஆனாலும் ஏதோ ஒன்று அவர் சந்தோஷத்தைக் குறைத்தது.. மகன் தன்னைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கமாட்டான் என்றிருந்ததுபோக, அவன் பயணத் திட்டம் போட்டுவிட்டு வா என்று அழைக்கிறான். என்ன காரணமோ?

ஒருவேளை..............ஒருவேளை………..கோயிலில் திருமண ஏற்பாடுகள் செய்துவைத்திருக்கிறானோ? அம்மாவை அழைத்துச் சென்று அவள் கண்முன் தாலி கட்டவேண்டுமென்று எண்ணிதான் இந்தப் பயணமா? ஐய்யோ! நான் பயந்தது நடந்துவிட்டதே!

ம்ஹும்! என்ன ஆனாலும் சரி, நாளை நானும் போகக்கூடாது, இவனையும் போகவிடக்கூடாது.

அம்மாவின் மனக்குழப்பம் புரியாமல்,

"அம்மா! நீங்க போய்ப் படுத்துக்கங்க, காலையில் எட்டுமணிக்கெல்லாம் டாக்ஸி வந்திடும், அதுக்குள்ள தயாரா இருக்கணும்! நாளைக்கான மாத்திரையெல்லாம் நான் கையில் எடுத்துக்கறேன்!"

நாகலட்சுமிக்கு எல்லாமே நம்பமுடியாதவையாய் தோன்றின. எப்படி இவனுக்கு இத்தனைத் துணிச்சல் வந்தது? என்னிடம் கொடுத்த சத்தியத்தை மீறிடுவானோ? சற்றுமுன் தானே கடவுளுக்கு நன்றி சொன்னேன். இப்போழுது மீண்டும் கவலையுறும் சம்பவம் நிகழ்ந்துவிட்டதே!

"அது பெரிய கோவிலாச்சேப்பா! என்னால் அவ்வளவு  நடக்கமுடியாதே....."

"அம்மா! நீங்க பிரகாரம் சுத்தவேண்டாம். நேரா கருவறை போய் சாமி கும்பிடறோம், அங்கயிருந்து கிளம்பிடறோம். உங்க வசதியைப் பொறுத்து அப்புறம் வேற எங்கயாவது போகணும்னா போலாம். சரியா?"

"விக்னேஷ்! உனக்கே தெரியுமேப்பா! என் உடம்பு இருக்கிற நிலைக்கு இதெல்லாம் ஒத்துவராதுன்னு! இன்னொரு நாள் போலாமேப்பா!"

"இல்லைம்மா! ஒவ்வொரு தடவையும் ஏதாவது சொல்றீங்க, அதனால்தான் உங்ககிட்ட கேக்காமலேயே நாளைக்கு லீவுபோட்டு ஏற்பாடெல்லாம் செய்திட்டேன். நீங்க கட்டாயம் வரீங்க, சால்ஜாப்பெல்லாம் வேண்டாம்!"

முடிவாய்ச் சொல்லிவிட்டான்.

அப்படியென்றால் ஏதோ இருக்கிறது. வரமுடியாதென்றாலும் இவன் விடப்போவதாய்த் தெரியவில்லை.சரி. போய்தான் பார்ப்போம். எந்தச் சிறுக்கி இவனை மயக்கியிருக்கிறாள் என்பதை!

என்ன ஆனாலும் சரி, என்னிடம் கொடுத்த வாக்கை வைத்தே அவனை மிரட்டிவிடலாம். தெய்வ சன்னிதானத்தில் பொய் சொல்லமுடியுமா? பார்த்துவிடுகிறேன், நானா? அவளா? என்று.

நாகலட்சுமி மனதுக்குள் கருவிக்கொண்டார்.

காலை வேளை பரபரப்பாக விடிந்தது. மனோகரி அக்காவே ஆச்சர்யப்பட்டுவிட்டாள்.

"குதிரைக்கு கடிவாளம் போட்டது மாதிரி டாக்டர் வீட்டைத் தவிர உங்கம்மா கண்ணுக்கு வேற எதுவுமே தெரியாது. அப்படியே தெரிஞ்சாலும் நகரவே மாட்டாங்க, அவங்களையே நெம்பு நெம்புன்னு நெம்பிக் கிளப்பிட்டியே!"

இவளுக்கும் விஷயம் தெரிந்திருக்குமோ? விக்னேஷ் என்ன சாதாரண உடையில் வருகிறான்? பட்டுவேட்டி, சட்டை எல்லாம் நண்பர்களிடம் தயாராக இருக்குமோ?

"ஏம்மா, என்னவோ போல இருக்கீங்க?"

"ஒண்ணுமில்லையேப்பா!"

"நீங்க நாளெல்லாம் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சுகிடக்கிறதப் பாத்தா எனக்கு என்னவோ போல இருக்குமா, அதனால்தான்………………”

ம். ம். புரிகிறது. இப்போது இப்படி சொல்வான், கோவிலுக்குப் போனதும் அவளைக் காட்டி, 'நாளெல்லாம் பேச்சுத்துணையில்லாம கஷ்டப்படுறீங்கன்னுதான் இவளைக் கட்டிக்கிறேன்'னு சொல்வான்.

கடைசியில் இவனும் பிரபுவைப் போல் தான் நடந்துகொள்கிறான்.சே! என்ன பிள்ளை இவன்? இப்படிப் பொய் சொல்லி அழைத்துச் சென்றால் மட்டும் என் ஆசி கிடைத்துவிடுமா?

நாகலட்சுமியின் உள்ளத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாதவனாய், விக்னேஷ் ஓட்டுநரிடமும், அம்மாவிடமும் எதையெதையோ பேசிக்கொண்டுவந்தான். நாகலட்சுமிக்கு எதுவும் மனதில் பதியவில்லை.

"அம்மா…. அம்மா!"

திடுக்கிட்டு விழித்தார்.

"என்னப்பா?"

"என்ன யோசனையில இருக்கீங்க, கோவிலுக்கு வந்திட்டோம்!"

இறங்கி பூக்கடையில் மாலை வாங்கிகொண்டு நடந்தனர்.
நாகலட்சுமியின் இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. இங்கேதான்....இங்கேதான்...எங்கேயோ…...அவள்....நண்பர்கள்…... மாலை....தாலி........

"அம்மா.....என்னம்மா ஆச்சு...?"

முன்னே சென்றுகொண்டிருந்த அம்மா, கால்கள் பின்ன மயங்கிச் சரிவதன் காரணம் புரியாமல் தவித்தபடியே ஓடிச்சென்று அவரைத் தாங்கிக்கொண்டான்.

அவரை ஒரு ஓரமாய் அழைத்துவந்து உட்காரவைத்துவிட்டு தண்ணீர் எடுத்துக் கொடுத்தான்.

ஆசுவாசமடைந்ததும்,

"என்னம்மா ஆச்சு?"

"ஒண்ணும் இல்லப்பா...இவ்வளவு தூரம் பயணம் பண்ணியது ஒத்துக்கலைன்னு நினைக்கிறேன்..... திரும்பிப் போயிடலாமா?"

"வந்தது வந்தாச்சு! இருந்து தரிசனம் பண்ணிட்டே போகலாம்மா. ஒண்ணும் அவசரமில்லே...நீங்க இங்கேயே உட்கார்ந்து நல்லா ஓய்வெடுத்துக்கீங்க, எப்ப முடியுதோ அப்ப சொல்லுங்க,போகலாம்!"

நாகலட்சுமி பரிதாபமாய் மகனைப் பார்த்தார். இவன் என்ன இன்று இப்படி ஒரு விடாக்கண்டனாய் இருக்கிறான்?

இல்லாத கவலைகளுடன் நேரம் கழிந்ததே தவிர நாகலட்சுமி எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. அன்றையதினம் நல்லவிதமாகவே கழிந்தது. அபிஷேகம் பார்த்து, கண்குளிர அம்மன் தரிசனம் முடித்து, பிரசாதங்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்ப பொழுதாகிவிட்டது.

விக்னேஷ் அதிசயித்த ஒரு விஷயம், காலை மயக்கத்துக்குப் பிறகு அம்மா எந்தப் பிரச்சனையும் செய்யவில்லை. அவ்வப்போது இவன் தான் கால் வலிக்குதாம்மா? மயக்கம் வரமாதிரி இருக்காம்மா? என்று தொணதொணத்துக்கொண்டே இருந்தான்.

அம்மா படுக்கப்போகுமுன் விக்னேஷ் அவருக்கு கால் பிடித்துவிட்டான். நாகலட்சுமி அமைதி தவழும் விக்னேஷின் முகத்தைப் பார்த்தார்.

இவனைப் பற்றி காலையில் என்னென்ன நினைத்துவிட்டேன்?  எப்படியெல்லாம் தப்புக்கணக்குப் போட்டு பயந்துவிட்டேன்? நல்லவேளை....வாய்திறந்து இவனிடம் எதுவும் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் என் மானமே போயிருக்குமே! அம்மா இவ்வளவு கீழ்த்தரமானவளா என்று நினைத்திருப்பான்.

நாகலட்சுமி தன் அவசரக்குடுக்கைத் தனத்தை எண்ணி தன்னையே நொந்துகொண்டார். பலத்த எண்ண ஓட்டங்களின் இறுதியில் நிம்மதியாக உறங்கிப்போனார்.

தொடரும்...

**************************************************************************************************
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

மு. உரை:
பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.
----------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு

26 August 2011

கண்ணாடிச் சட்டத்துக்குள் ஒரு கவிதாயினி


காய்கறி நறுக்கும் வேகத்தோடு
போட்டி போட்டுக்கொண்டு
கவிதைக்கான கருவொன்று,
கச்சிதமாய் உருவானது
அவளது கவனத்தில்!

சமையலை முடித்துவிட்டு
சாவகாசமாய் எழுத எண்ணி,
அவரவர்க்குப் பிடித்தவை, பிடிக்காதவை,
மாமியாருக்கு ஒவ்வாதவை அறிந்து
பார்த்துப் பார்த்து சமைத்து,
சமைத்தப் பாத்திரம் துலக்கி,
கணவர் பிள்ளைகளை அனுப்பி,
அத்தனையும் முடித்து,
அடுப்பையும் அணைத்து,
அவசரமாய் தாள் தேடியபோது,
நினைவுக்கு வந்துபோயின,
நீண்டநேரமாய் சோப்புநீரில்
நீந்திக்கொண்டிருக்கும்
நாளைக்கான சீருடைகள்!

வீணாய்ப்போகும் வெய்யிலை நொந்து,
விரைவாய்த் துவைத்துலர்த்தி,
வீட்டைப் பெருக்கி, சுத்தம்செய்து,
விட்டதைத் தொடர முனைந்தபோது,
மதிய உணவுக்கான மணி அடித்தது!

பத்தியசாப்பாட்டை மற்றவளுக்குப் பரிமாறி,
தானுமிரண்டு கவளம் அள்ளித்திணித்து,
மறுபடி பேனா கையிலெடுக்க,
மழை வருமோவென மாமியார் முனக,
மாடிப்படிகளில் மந்திபோல் தாவியோடி,
காய்ந்த துணிகளைக் களைந்துவந்து,
கலைந்த துணிகளை மடித்துமுடிப்பதற்குள்
'அம்மா' என விளிக்கின்றனர்,
பிள்ளைகள் பள்ளிவிட்டு வந்து!

மீண்டும் அடுக்களைக்கு உயிரூட்டி,
மாலைச் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்து,
அங்கிங்கு ஆடித்திரிந்த பிள்ளைகளை
அடக்கி ஓரிடம் அமரவைத்து,
படிப்பித்து, வீட்டுப்பாடம் செய்வித்து,
இன்றைக்கு இது போதுமென்று எழுப்பிய வேளை,
'அப்பாடா' என்றபடியே
களைப்புடன் வந்தமர்கிறார், கணவர்.

சடுதியில் சாப்பாட்டு மேசை நிரப்பி,
கொட்டாவி விட்டக் குழந்தைகளைத் தட்டியெழுப்பி,
உணவூட்டி, உறங்கச்செய்து,
பாத்திரம், அடுப்படி கழுவி,
'மறந்துவிட்டாளோ மருமகள்?' என்றே
மருளும் மாமியாருக்குத்
தக்க மாத்திரைகளைத் தவறாமல் தந்துதவி,
தொய்ந்து விழும் இமைகளை
சிரமத்துடன் தூக்கி நிறுத்தி,
அவர் சொல்லும் அலுவலகக் கதைகளுக்கு,
ஆர்வத்துடன் 'உம்' கொட்டி,
அயர்வு மேலிட உறங்கமுனைகையில்,
காத்திருந்த கனவுகளின் அழுத்தம் தாளாமல்,
சத்தமின்றிக் கலைந்து போகிறது,
அவள் கவிதைக்கரு,
உயிர்ப்பெறாமலும், அவளறியாமலும்!

தலைமாட்டுக் கடிகார அழைப்புக்கு,
காலையில் கண் விழித்த அவளைப்பார்த்து,
கைகொட்டிச்சிரிக்கிறது,
கல்லூரியில் பெற்ற 'கவிதாயினி' பட்டம்,
கண்ணாடிச் சட்டத்துக்குள் சிறைப்பட்டபடி!

20 August 2011

சிவப்பி


குளம் சிவப்பியின் குற்றச்சாட்டுகளுக்குக் காதுகொடுத்தபடி சலனமற்று இருந்தது.சிவப்பி குளத்தை அமைதியாய் இருக்கவிடுவதே இல்லை. நீருக்கு மேலிருந்த தன் கழுத்தை சற்றே உள்ளிழுத்து வாய் கொள்ளா நீரை உறிஞ்சி தலையைத் தூக்கி எட்டிய வரைக்கும் வேகமாய்க் கொப்பளித்துத் துப்பினாள். அவளுள் இருபது வருட கோபமும் இன்னும் அடங்கியபாடில்லை. குளம் எப்போதும்போல் பொறுமையாய் இருந்தது.

முன்னெல்லாம் குளமும் பதில் சொல்லிக்கொண்டிருந்தது. 'என்னை நம்பு, உன்னைபோலவே நானும் ஒரு பெண், நான் அப்படிச் செய்வேனா?' என்றெல்லாம் அவளுக்குப் புரியவைக்க முயன்றது. ஆனால் சிவப்பி அதன் பேச்சுக்கு செவிசாய்க்கவே இல்லை. குளத்து நீரைக் கோழை என்றாள். கொலைகாரி என்று அழுதாள். அவளுக்காகப் பரிதாபப்பட்டு குளமும் அழுதது. அதன் கண்ணீர் வெளித்தெரியாக் காரணத்தால் சிவப்பிக்குக் குளத்தின் துயரம் புரியவில்லை.

யாருமற்றப் பொழுதுகளில் குளத்துடன் ஆவேசத்துடன் சண்டையிடும் அவள்,  குளக்கரையில் எவருடைய நடமாட்டமாவது தென்பட்டால் அமைதியாகிவிடுவாள்.

இன்றும் சிவப்பி, தன் மனக்குமுறலைக் குளத்தில் கொட்டிக்கொண்டிருந்த வேளை, கொலுசுச்சத்தம் கேட்கவும் தீர்க்கமானாள். ஒரு இளம்பெண் அழுக்குத் துணிகள் அடைத்த அலுமினிய அன்னக்கூடையை இடுப்பில் அணைத்துப் பிடித்தபடி படிகளில் இறங்கிக்கொண்டிருந்தாள்.

தண்ணீரில் பூத்துநிற்கும் தாமரை போல் சிவப்பியின் தலை மட்டும் நீருக்கு மேலே தெரிந்தது. வெள்ளத்தனைய மலர்நீட்டம் என்பதுபோல் தண்ணீர் முழந்தாளளவு இருந்தாலும் சரி, ஆளை மூழகடிக்கும் அளவு இருந்தாலும் சரி, சிவப்பிக்கு எல்லாமே கழுத்தளவுதான்.

அவள் சிவப்பியைப் பார்த்து சிநேகமாய்ச் சிரித்தாள். அவளுக்கு நினைவு தெரிந்தநாளிலிருந்தே இந்தக் குளமும் சிவப்பியும் பரிச்சயம். பாவாடையை மார்புவரை ஏற்றிக் கட்டிவிட்டு மற்ற உடைகளைக் களைந்து, கொண்டுவந்த துணிகளோடு துவைத்துவிட்டு பின் குளத்துநீரில் மிதந்த சோப்புநுரைகளைக் கைகளால் விலக்கியபடி நீரில் இறங்கினாள்.

அவளுக்கு வயது பதினெட்டு முதல் இருபதுக்குள் இருக்கலாம். சிவப்பி அவளைப் பார்த்தால் சற்று இளகித்தான் போவாள். சிவப்பிக்கு தன் வயது தெரியாது. குளத்துக்கும் அதன் வயது தெரியவில்லை. ஊற்றெடுக்கத் துவங்கிய நாளைப் பற்றிய எந்தக் குறிப்பும் அதன் நினைவேட்டில் இல்லை. சிவப்பி மட்டுமே இருபது வருடங்களாய் அதன் நினைவை, எண்ணத்தை, சிந்தனையை ஆக்கிரமித்திருந்தாள். அவளைக் குளிர்விப்பது மட்டுமே குளத்தின் அன்றாடக் குறிக்கோளாக இருந்தது. செய்யாத தவறுக்காக இப்படித் தன்னைப் பழி வாங்குகிறாளே என்று சிவப்பி மேல் அவ்வப்போது கோபம் வந்தாலும் அவளது அறியாமையை எண்ணி இரங்கவும் செய்தது.

அந்தப் பெண் சிவப்பியிடமிருந்து பாதுகாப்பான தூரத்திலேயே குளித்துக்கொண்டிருந்தாள். சிவப்பி கண்களை எடுக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள். சிவப்பி இதுபோல் அமைதியாய் இருக்கும் வேளைகளில்தான் குளம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளமுடிகிறது. எதையும் யோசிக்க முடிகிறது. இப்போதும் குளம் யோசித்தது. சிவப்பியின் மகளும் இன்று உயிரோடு இருந்திருந்தால் இவள் வயதில் தானே இருப்பாள்?  இருபது வருடங்களுக்கு முந்தைய நிகழ்வுகளுக்குள் மூழ்கத்தொடங்கியிருந்தது.

சிவப்பிக்கும் இந்தக் குளத்துக்கும் அப்படி என்ன உறவும் பகையும்? அதற்குமுன் சிவப்பியைப் பற்றிச் சொல்லவேண்டும். நதிமூலம் போல் சிவப்பியின் மூலமும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. சிவப்பியின் மூலமாகவும் அது தெரியவரவில்லை.

கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் பருவ எழில்கள் பூத்துக்குலுங்கும் பூஞ்சோலையென ஊருக்குள் தோன்றினாள். தெருக்களில் அரைகுறை ஆடையுடன் திரிந்துகொண்டிருந்த அவளைப்  பார்த்தவுடனேயே பெண்கள் பதைபதைத்தனர். பல்லிளித்தனர் பல ஆண்கள். காட்டிய பற்களைப் பதம் பார்த்தன அவள் கையெறிந்த கற்கள். அசுரத்தனத்தோடு நின்றவளை மிருகத்தனத்தோடு தாக்கினர் மக்கள். மூர்க்கத்துடன் திரிந்தவள், பசிக்கும்போது மட்டும் அமைதியடைந்தாள். இரவுநேரங்களில் குளக்கரைப் படிகட்டுகளில் படுத்துக்கொண்டாள்.

அவள் நல்ல நிறமாக இருந்தாள். நடையின் நளினம் மேல்தட்டுப் பெண்களை நினைவூட்டியது. அவள் பெரும்பாலும் கடைவீதியின் முனையில் இருந்த டீக்கடை வாசலிலேயே நின்றுகொண்டிருந்தாள். அவளை வேடிக்கை பார்க்கவென்றே ஒரு கூட்டம் கடைக்கு வரத் தொடங்கியது. டீக்கடைக்காரர் எத்தனை விரட்டியும் இவள் நகரவில்லை. 'ஏ... சிவப்பி...இந்தா'   டீக்கடைக்காரர் கொடுத்த ஒற்றை ரொட்டியோடு இவளுக்கு சிவப்பி என்ற நாமகரணமும் சூட்டப்பட்டது.

பரிதாபப்பட்ட சிலரின் தயவால் சிவப்பி வயிறு வளர்த்தாள். கூடவே ஒரு உயிரும் வளர்த்தாள். கற்பிழந்ததால் சுயம் இழந்தாளா? சுயம் இழந்ததால் கற்பிழந்தாளா? என்று பட்டிமன்றம் வைத்துப் பார்த்தது ஊர்.  அவள் கர்ப்பத்திற்குக் காரணகர்த்தாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இறங்கியது. முடிவில் தன்னைத் தவிர எல்லோருமே அயோக்கியர்கள் என்ற முடிவுக்குதான் ஒவ்வொருவரும்  வரவேண்டியிருந்தது.

வீங்கிய வயிறு வெளித்தெரியும்படி சுற்றிய அவளைப் பார்த்த பார்வைகளில் பரிதாபம், இளக்காரம், அருவருப்பு, சமூகத்தின் மேலான கோபம், வெறுப்பு போன்ற பல உணர்வுகள் தென்பட்டன. ஆனால் அவளுக்கு உதவும் குணம் எவரிடத்தும் தென்படவில்லை.

ஒருநாள் சிவப்பி காணாமற்போனாள். சிலர் கவலைப் பட்டனர், சிலர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அவளைப் பற்றிய பேச்சில்லாமல் மறந்திருந்த ஒருநாளில் கைப்பிள்ளையுடன் மீண்டும் ஊருக்குள் பிரவேசமானாள்.

இம்முறை அவள் ஆங்காரத்தின் உச்சத்தில் இருந்தாள். பசிக்கு வேண்டுவதையும் மிரட்டிக் கேட்டாள். குழந்தைகள் உண்ணுவதை பறித்து உண்டாள். கடைவீதியில் பலர் மத்தியில் திறந்த மார்பில் குழந்தைக்குப் பாலூட்டினாள். அதைப் பார்த்த சில வக்கிரக் கண்கள் பசியாற்றிக்கொண்டன.

குட்டிக்குரங்கு தன் தாயை இறுகப் பற்றியிருப்பதுபோல் குழந்தையை எந்நேரமும் இறுகப்பற்றியிருந்தாள் அவள். கொடிய உலகத்தில் பிறந்திருக்கும் உணர்வற்று குழந்தை அவ்வப்போது சிரித்தது. அழகிய விக்கிரகம் மாதிரி ஒரு பெண்குழந்தையைப்  பைத்தியக்காரி ஒருத்தி  பெற்றிருப்பதைக் கண்டு, மலட்டுப்பட்டம் சுமத்தப்பட்டு தாய்வீடு விரட்டப்பட்ட ஒருத்தி தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். குழந்தை அவளைப் பார்த்தும் சிரித்தது.

ஒரு விடியற்காலையில் ஊரே சிவப்பியின் அலறலில் கண்விழித்தது. உரத்தக் குரலில் ஓலமிட்டபடி வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு வீதிகளில் வெறிபிடித்ததுபோல் ஓடிக்கொண்டிருந்தாள், சிவப்பி. கையில் குழந்தை இல்லை, உடலில் ஒட்டுத்துணியில்லை. நிர்வாணமாக.... நிராதரவாக.... ஓலமிட்டபடி ஓடியவளை நிர்தாட்சண்யமின்றி கல்லெறிந்து விரட்டிக்கொண்டிருந்தன, சில கல்நெஞ்சங்கள்.

குழந்தை எங்கே? என்னவாயிற்று? ஏன் இந்த அலங்கோலம்? எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடைகள் கொடுக்கப்படவில்லை.

சொல்லாவிட்டாலும் விடைகள் கிடைத்தன. குட்டிகளோடு இருக்கும் பெண்மிருகங்களை தம் இச்சைக்கு உட்படுத்த ஆண் மிருகங்கள் முதலில் செய்வது குட்டிகளைக் கொல்வதுதானாமே.... இங்கேயும் ஒரு மிருகமோ... பல ஒன்றிணைந்தோ.... அந்தக் காரியத்தை ஆற்றியிருக்கின்றன என்பது குளத்தில் மிதந்துவந்த குழந்தையின் சடலம் உறுதிப்படுத்தியது.

குழந்தையைக் கொன்றது குளம்தான் என்று உறுதியாக நம்பினாள் சிவப்பி. அந்தக் குளத்து நீரைக் கால்களால் மிதித்தாள், கைகளால் அறைந்தாள். கையில் குவித்து வாய் நிறைய உறிஞ்சி வேகமாய் உமிழ்ந்தாள்.குழறிய வார்த்தைகளால் வசவுகளைக் கொட்டினாள். குமுறி அழுதாள். என்ன செய்தும் அவள் உக்கிரம் தணியவில்லை. ஊர் வெறுமனே வேடிக்கைப் பார்த்தது.அவளது விம்மிய மார்பகங்களின் வலியைத் தீர்க்க இயலாத வெறுமையை எண்ணி குளம் கலங்கியது.

சிவப்பி குளத்தினுள் முங்கி முங்கி தன் சிசுவைத் தேடினாள். ஒவ்வொருமுறையும் எதையோ பற்றிபடி மேலே வந்து ஆர்வம் தெறிக்கும் கண்களால் வெறித்தாள். அது பெரும்பாலும் பழந்துணியாகவோ.... பாறாங்கல்லாகவோதான் இருக்கும். ஆனாலும் அவள் அசரவில்லை. அன்றிலிருந்து குளமே அவள் குடியிருப்பானது. அவளுக்காக குளம் அழுதது. கொஞ்சநாள் சிவப்பிக்குப் பயந்து குளக்கரைப் பக்கம் புழக்கம் தவிர்த்திருந்த ஊர், இப்போது அவளை அலட்சியப்படுத்தி மீண்டும் புழங்கத்தொடங்கியது.

அன்று கோரதாண்டவம் ஆடியபடி குளத்தினுள் குதித்தவள்தான். இன்றுவரை குளத்தைத் தன் குழந்தையைக் கொன்ற கொலைகாரியாகவே பார்த்து கொந்தளித்துக்கொண்டிருக்கிறாள். அவளைக் குளிர்விக்கத்தானோ என்னவோ கோடையிலும் குறைந்த அளவு தண்ணீரையாவது தக்கவைத்துக்கொள்ளத் தொடங்கியது குளம்.

இருபது வருடத்துக்கு மேலாகியும் இன்னும் அவள் சோகத்தைக் கரைக்க முடியவில்லை குளத்து நீரால். சிவப்பி ஓய்ந்துவிட்டாள். முன்பு போல் இப்போது சிவப்பியால் முங்கியெழ முடியவில்லை. என்றாவது தன் குழந்தையைக் கண்டுபிடிதுவிடுவோம் என்ற நம்பிக்கையும் அவளுள் தளரத் தொடங்கியது. வெறுமனே குளத்திடம் சண்டையிட்டபடி தன் குழந்தையைத் திருப்பித் தரும்படி வேன்டிக்கொண்டிருக்கிறாள்.

சலனம் கேட்டு குளம் தன்னினைவுக்கு வந்தது. அந்தப்பெண் குளித்துமுடித்துவிட்டு மேற்படிக்கட்டில் நின்றபடி உடைமாற்றிக்கொண்டிருந்தாள். கொண்டுவந்திருந்த ஒரு பையிலிருந்து பொட்டலம் ஒன்றை எடுத்து படிக்கட்டில் வைத்துவிட்டு சிவப்பியைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போனாள்.

சிவப்பி ஆர்வத்துடன் குளத்தினின்று வெளியேறி அதை நோக்கிப் போக... அவள் நிர்வாணத்தை தன் நீர்த்துளிகளால் மறைக்க முயன்று தோற்றது குளம்.
*****

படம் நன்றி: யூத்ஃபுல் விகடன்