30 April 2011

அன்பில்லத்தின் ஆற்றாமை



என் சுவாசம் இழையோடும் அன்பில்லமே!

அறிவாயா……

உன்னைப் பற்றிய பக்கங்கள்யாவும்

அதிகாரபூர்வமாக அகற்றப்படவிருக்கின்றன,

ன் மன ஏட்டிலிருந்து!


தார்ப்பாய்ச்சிக் கட்டிய வேட்டியுடனும்,

தலையில் முண்டாசுக்கட்டுடனும்

வெற்றுடம்பில் வியர்வை வழிந்தோட

வீடு கட்டிய கொத்தனார்த் தாத்தாவிடம்

என் கைகள் எடுத்துதந்த அரைச்செங்கற்கள்

இங்கேதான் எங்கோ இருந்துகொண்டு

என்னைப் பார்த்து வருந்தக்கூடும்.


சூடிக்கொடுத்த ஆண்டாளின் மாலைக்கு நிகராக

என் உடல் பூசி உதிர்ந்தபின்னரே

சுவரில் பூசப்பட்ட மணற்துகள்கள் ஒவ்வொன்றும்

என் பிரிவை உணர்ந்து வாடக்கூடும்!


மஞ்சள் தடவி குங்குமப்பொட்டிட்ட

தன்னைத் தூக்கிநிறுத்திய

சுமங்கலிகளின் ஊடே நுழைந்து

சுமைதாங்கிய இரு பிஞ்சுக்கரங்களின்

ஸ்பரிச சுகத்தில் இன்றும் திளைத்திருக்கும்

அந்த நிலைவாசல்...


மற்றொரு கரம் பற்றும்பொருட்டு

அவை தன்னை நீங்கிச் செல்லவிருப்பதைக்

காணச்சகியாமல் இமைக்கதவுகளை

அடைக்கவும்கூடும்!


ஆசாரி மாமா அசந்தநேரங்களில்

அரைகுறை சன்னல்சட்டங்களில்

ஆட்டுக்குட்டிகள்போலத் தாவிக்குதித்து,

தடுமாறி விழுந்த ஞாபகங்கள்

எனக்கிருப்பதைப்போல்...

என் உதடு கிழித்த உறுத்தல்,

பொருத்தப்பட்டுவிட்ட பதினான்கு சன்னல்களில்

ஏதாவதொன்றிற்கு இருந்து சிரமப்படுத்தலாம்!


என்னைப் பெற்றவர்களைப்போலவே நீயும்

உன் துயரத்தை ஆழப்புதைத்து

சிரித்து விடைகொடுப்பாயோவென்று பயந்திருந்தேன்.

நல்லவேளை...


சிறுவிரிசலொன்றைக் காட்டி...

அதனூடே...

பிளவுபட்ட உன் இதயத்தையும் காட்டிவிட்டாய்!


புரியாதவர்கள் வியப்புடன் கேட்கின்றனர்,

திடீரென என்ன கேடு வந்தது

இந்த வீட்டுக்கு?


26 April 2011

ஏதோவொரு தூண்டுதல்....



ஏனென்று தெரியவில்லையென்று
காரணம் சொல்லப்படும் துவக்கங்களின் பின்னே
ஏதோவொரு தூண்டுதல்....
எப்போதும் மறைந்தே இருக்கிறது,
துல்லியமாய் வரையறுக்கவியலாதபடி 
பற்பலவுருக்களில்!!

தோள் நனைக்கும் ஒரு
கண்ணீர்த்துளியாகவோ...
வாயில்கடக்குமுன் எழும்
மெல்லிய விசும்பலாகவோ....

முன்னிருக்கையிலிருந்து பின்னே தாவும் 
மழலைமுறுவலாகவோ....
நடுக்கத்துடன் தலைதடவி
ஆசிவழங்குமொரு வயோதிகக்கரமாகவோ....

இதமான அணைப்பாகவோ...
இறுக்கமான இதழ்பிணைப்பாகவோ.....
இசையாகவோ... இச்சையாகவோ...
இன்னும் பலவாகவும் இருக்கும் அதன் பேரிலேயே
ஆற்றப்படுகின்றன சில காரியங்கள்,
கைவிடப்படுகின்றன சில!

தள்ளிவைக்கப்படுகின்றன சில தற்கொலைகள்,
தயாராகின்றன சில!

நிறைவேற்றப்படுகின்றன சில சபதங்கள்,
உறுதியிழக்கின்றன சில!

அணைக்கப்படுகின்றன சில உறவுகள்,
விலக்கப்படுகின்றன சில!

விதைக்கப்படுகின்றன சில விரோதங்கள்,
மன்னிக்கப்படுகின்றன சில துரோகங்கள்!

எந்தவொரு நிகழ்வுக்கும் பின்னே

ஏதோவொரு காரணமிருப்பதுபோல்...
எந்தவொரு துவக்கத்தின் பின்னும்
ஏதோவொரு தூண்டுதல்
எந்நாளும் மறைந்தே இருக்கிறது,
துல்லியமாய் வரையறுக்கவியலாதபடி!

22 April 2011

கவிதை என்றும் பெயரிடலாம்.



நான் வளர்க்கும் 
விசித்திரப்பூங்கா பற்றிச்
சொல்கிறேன், கேளுங்கள்,
உங்களிடமும் இருக்கலாம்
இப்படியொரு பூங்கா!

விதைத்தும், பதியனிட்டும்,
ஒட்டியும், போத்துகள் நட்டும்,
வேருடன் பெயர்த்தெடுத்தூன்றியுமென
பல்வகையிலும் வளர்க்கத் தலைப்பட்டேன்,
பலரதரப்பட்ட தாவரவினங்கள்!

இவ்விநோதச்சோலையில்
சத்தமின்றி வளர்கின்றன,
சாமந்தி விதைகளினின்று,
சரக்கொன்றை மலர்ச்செடிகள்!
பாரிஜாதம் சொரிவதோ
பால்வடியும் வெள்ளெருக்கு மலர்கள்!

இளமஞ்சள் ரோஜாச்செடியொன்று
இறுமாப்பு கொண்ட இயந்திரன் போல
ஒன்று பத்தாகி, பத்து பலவாகி
தன்னைத்தானே பதியனிட்டு
பூத்துக்குலுங்கச்செய்கிறது,
பற்பல வண்ண ரோஜாக்கள்!

குறுமரமென்று நினைத்ததெல்லாம்
விருட்சங்களாய் விண்ணோக்கி விரைய,
விண்முட்டுமென்று நினைத்தவையோ….
மண்முட்டி மல்லாந்து கிடக்கிறது!

விந்தையிலும் விந்தையாய்
குலை ஈன்ற வாழையொன்று
தன் காலடிக் கன்றுகளை அழித்து
களைகளுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறது!

பூக்களோ, காய்களோ, கனிகளோ….
பலனாய் எதுவும் கிடைக்கும்வரை
இந்த விநோதங்கள் பற்றி
யாதொரு விசனமும் எனக்கில்லை!

அவை யாவற்றுக்கும்
கவிதைஎன்றொரு
பெயரிடப்படுவதைப்பற்றியும்
எனக்கெந்த ஆட்சேபணையுமில்லை!

18 April 2011

தூர்வாரப் போனேன்....


உன் மெளனக்கிணற்றின் ஆழமறியாமலும்
அவ்வாழத்தில் புதையுண்டிருக்கும்
பொருட்கள் பற்றிய விவரமறியாமலும்
தூர்வாரத் துணிந்தது எத்தனைத் தவறென்று
இறங்கியபின்னரே உணர்கிறேன்!

உன்னிடம் பகிரப்பட்ட என்
கனவுகளும், நம்பிக்கைகளும்
என்றாவது நிறைவேற்றுவாயென்று
ஒப்படைக்கப்பட்டிருந்த என் ஆசைகளும்
தம் வனப்பிழந்து வடிவம் குலைந்து
மேலும் மேலும் அழுத்தம் பெற்று
சேற்றுக்குள் முங்கி மூச்சுமுட்டிக்கிடக்கின்றன.

அவை எழுப்பிய அலறல்கள் யாவும்
அக்கிணற்றின் அடியாழத்திலேயே
எதிரொலிக்கப்பட்டு அவற்றையே
வந்தடைந்துவிட்டிருந்தபோதிலும்.
தம் நம்பிக்கைகளைக் கைவிட்டுவிடாமல்
மீட்பரின் வருகைக்காக காத்திருக்கின்ற
அவை எழுப்பிய ஈனசுரங்களைக்கொண்டு
அவற்றை அடையாளங்காண்கிறேன்!

இற்றுத் துருப்பிடித்தநிலையிலிருந்தும்
நேற்றுவரை நேசமிறைத்துக்கொண்டிருந்த,
சற்றுமுன் சகதிக்குள் அறுந்துவிழுந்துவிட்ட
நம் காதற்சகடை கண்ணில்பட்டபோதும்,
அலட்சியப்படுத்தி மேலேறுகிறேன்,
அளவிலா என் அற்புதங்களை மட்டுமேந்தி!

14 April 2011

பிறந்தநாள்…..இன்று பிறந்தநாள்......




இன்றைக்கு ஏன் இத்தனை உற்சாகம்? நேற்றுவரை இந்தப் பரபரப்பில்லையே! திருமணத்துக்குப்பின் வரும் முதல் பிறந்தநாள் என்பதாலா? இருபத்திரண்டு பிறந்தநாட்களைச் சீரும் சிறப்புமாய் அம்மா, அப்பாவுடன் கொண்டாடியபின்னும் இன்று பிரபுவுடன் கொண்டாடவிருக்கும் பிறந்தநாளே தனிச்சிறப்பென்று உள்மனம் குதூகலமிடுவதாலா?

அம்மா அப்பாவின் அதிகாலை அழைப்பு அவள் உற்சாகத்தின் அளவை இன்னும் உயர்த்திவிட்டிருந்தது.

அயர்ந்து தூங்குகிறவனை எழுப்புவதா? அல்லது தானே எழும்வரை காத்திருப்பதா? அவளது ஆர்வம் முதல் கேள்விக்கு தலைசாய்த்தது.

இதமாய் மெல்ல எழுப்பினாள். என்றுமில்லாத வழக்கமாய் காலையிலேயே குளித்து, புதியபுடவையுடுத்தி புத்தம்புது மலரென தன்முன் நின்றவளை அப்படியே கட்டிக்கொள்வான் என்ற கனவு கலைந்தது, "காப்பி எங்கே?" என்ற கேள்வியில்.

காப்பி கையிலிருந்தால் அவன் கட்டிக்கொள்ளும் வேகத்தில் தளும்பி புடவையில் கறையுண்டாக்கிவிடுமே என்று பயந்து அடுப்படி மேடையிலேயே அதை விட்டுவந்ததை சொல்லவா முடியும்? ஏமாற்றத்தை மெல்ல விழுங்கியபடியே "இதோ, எடுத்திட்டு வரேன்!" என்று கூறி நகர்ந்தாள்.

அவன் கண்களைச் சந்திக்கும் ஒவ்வொருமுறையும் வாழ்த்துச் சொல்வான் என்ற எதிர்பார்ப்பில் அவளது கண்கள் அலைந்தன. அலைந்து அலைந்து களைத்ததுதான் மிச்சம். ம்ஹும்! அவன் எதையும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

இப்படி அலைகிறாளே, என்னவாக இருக்கும் என்று யோசிக்க மாட்டானா? அவளது புத்துணர்வுக்கு காரணம் என்னவென்று யூகிக்க மாட்டானா? கண்முன் ஆட்டப்படும் கிலுகிலுப்பையைக் கண்டுகொள்ளாத குழந்தை போல் அல்லவா நடந்துகொள்கிறான்? ஒருவேளை மறந்துவிட்டானோ? இரண்டுநாட்களுக்கு முன்புதானே சூசகமாக சொல்லியிருந்தாள்? அதற்குள் எப்படி......?

ஜானு தவித்தாள். தானே சொல்லிவிடலாமா? சொன்னபின்பு நினைவு வந்து வருத்தப்படுவானோ? மறந்துவிட்டதே இந்த மரமண்டை என்று குட்டிக்கொள்வானோ? வேண்டாம், தன் வாயால் சொல்லவேண்டாம். அவனாகவே புரிந்துகொள்ளட்டும்.

இட்லியுடன் பரிமாறப்பட்ட கேசரிக்கான காரணமும் கேட்கப்படவில்லை.  இதென்ன சண்டித்தனம்? நானும் விடப்போவதில்லை. தான் சொல்லாமலேயே அவன் வாயால் வாழ்த்து வாங்கிவிட்டுதான் மறுவேலை. கண்ணாடி வளையல்கள் குலுங்கும் கரங்களை அவன்முன் ஆட்டி ஆட்டி பேசினாள். அணிந்திருந்த பனாரஸ் புடவையை அடிக்கொருதரம் சரி செய்தாள். எதுவும் வேண்டாம், எங்கே கிளம்பியிருக்கிறாய் என்றுகூடவா கேட்கக்கூடாது? சரியான கல்லுளிமங்கன்.

போனமாதம் அவனது அலுவலக நண்பன் ராஜேஷ் வீட்டுக்குப் போன சம்பவம் நினைவுக்கு வந்தது.

அவர் மனைவி ரேகா கேட்டாள், " உங்க ஹஸ்பெண்ட் உங்களுக்கு என்ன ட்ரீட் கொடுத்தார்?"

"எதுக்கு?" அப்பாவியாய் இவள்.

"வேறெதுக்கு? ப்ரமோஷனுக்குதான்!"

"இல்லையே! அப்படி எதுவும் இல்லையே, இருந்தா சொல்லியிருப்பாரே?"

திருமணமான இந்த ஒன்பது மாதங்களில் கணவன் தன்னிடமிருந்து எதையும் மறைக்கவில்லை என்கிற அசாத்திய நம்பிக்கை அவளுக்கு.

ரேகா சிரித்தாள்.

"சார், நீங்க பயங்கரமான ஆளுதான்! சொன்னா, உங்க ஒய்ப் பெரிசா ஏதாவது கேட்டுடப்போறாங்களோன்னு பயந்துகிட்டுதானே மறைச்சிட்டீங்க?"

பிரபு எவ்வித அலட்டலுமின்றி சொன்னான், " இதிலே மறைக்க என்ன இருக்கு? அக்கவுண்ட்டே எங்க ரெண்டுபேர் பேர்லயும்தான் இருக்கு. அவளுக்குத் தெரியாமலா போகும்? இது ஒரு பெரிய விஷயம்னு சொல்லத் தோணலை!"

ரேகா ஜானுவைப் பார்த்த பார்வையில் பரவியிருந்தது, பரிதாபமா? பரிகாசமா? புரியவில்லை.

ஜானுவுக்கு அவனுடைய உதாசீனம் உறுத்தியது. அலுவலகத்தில் பதவி உயர்வு! அதுவும் வந்து இரண்டு மாதம் ஆகிவிட்டதாம். இதுவரை அவளிடம் மூச்சுவிடவில்லை. கேட்டால் இது பெரிய விஷயம் இல்லையாம்.

சே! தன் மனைவி மற்றவர் முன் அவமானப்படுவாளே என்பதற்காகவாவது 'மறந்துவிட்டேன்' , ‘ஒரு சர்ப்ரைஸுடன் சொல்லலாம் என்றிருந்தேன்என்று ஏதாவது பொய்யைச் சொல்லியாவது பூசி மெழுகியிருக்கலாம்.

வீட்டுக்கு வந்தபிறகு விம்மலுடன் விளக்கம் கேட்க, அப்போதும் அதையே சொன்னான்.

"இது ஒரு பெரிய விஷயமா? உனக்கு என்ன வேணும்? வாங்கிக்கோ!" என்று அலட்சியமாகச் சொன்ன பிறகு என்ன செய்வது? அவளென்ன புடவை, நகைக்காகவா அவனிடம் வம்பு பிடிக்கிறாள்? தன் கணவன் மனந்திறந்து தன்னிடம் பேசவேண்டும், இன்ப துன்பங்களைப் பகிர வேண்டும் என்றுதானே? அதைக்கூடப் புரிந்துகொள்ளமுடியாதவனா, இவன்?

இப்படி எத்தனையோ நிகழ்வுகள்! வேண்டுமென்றே பொய்க்கோபம் காட்டினாலும் அதையும் பொருட்படுத்துவதில்லை.

குப்புற விழுந்த குழந்தை, முதலில் அழும்; பின் தன்னைத் தூக்கிவிட, அருகில் எவருமில்லை என்று புரிந்தவுடன் தானே எழுந்து, மண்ணைத் தட்டிவிட்டு மீண்டும் விளையாடப்போகுமே, அதுபோல்தான் அவள் ஊடலும். ஒரு கெஞ்சலோ, கொஞ்சலோ, மிஞ்சலோ எதுவுமில்லாமல் வந்த வழியிலேயே திரும்பிவிடும். கொஞ்சகாலம் அவனுடன் அப்படி இப்படி செல்லச்சண்டையிட்டுக்கொண்டிருந்தவள், இப்போது அதையும் விட்டுவிட்டாள்.

ஆனால் அது எதையும் நினையாமல் இன்று அவள் மனம் குதியாட்டம் போடுவதென்னவோ உண்மை.

ஒவ்வொரு பிறந்தநாளும் அவளுக்கு மறக்கமுடியாத நினைவுகளைத் தரும். காலையில் அவளை எழுப்புவதே அம்மா, அப்பாவின் அன்பு முத்தங்களும் வாழ்த்துகளும்தான். இருவரும் அன்று கட்டாயம் விடுப்பு எடுத்துக்கொள்வார்கள். இவளும்தான். மூவரும் சேர்ந்து கோயில், சினிமா, பீச் என்று சுற்றிவிட்டு கைக்கொள்ளாத பரிசுகள் வாங்கிக்கொண்டு வீடு திரும்ப இரவு பதினொன்றாகிவிடும். படுக்கப்போகுமுன் மீண்டும் அம்மா அப்பாவின் முத்தங்களும், வாழ்த்துகளும் விடைகொடுக்கும்.

இதுதான் முதல்முறை, இவள் வீட்டிலிருக்கிறாள், அதுவும் தனியாக!

போகட்டும்! அலுவலகவேலை அதிகமாக இருக்கலாம். அதனால் லீவு போட்டுக்கொண்டு ஊர் சுற்றுவதென்பது சாத்தியமில்லாமல் இருக்கலாம். ஆனால்....ஆசையாய் ஒரு வாழ்த்து …..வாய் திறந்து சொன்னால்தான் என்ன? என்ன குறைந்துவிடும்?

பட்டென்று உச்சியில் பல்பு ஒளிர்ந்தது. ஒருவேளை, மாலைக் கொண்டாட்டத்தை மனதில் வைத்திருக்கிறானோ? மணக்க மணக்க, மல்லிகைப்பூவுடன் வந்து மகிழ்விக்கப்போகிறானோ? திரையரங்குச் செல்லலாம் என்று திடீர் அறிவிப்பு செய்து திடுக்கிடச்செய்வானோ? அவள் ஆசைப்பட்ட பிளாஸ்மா டிவி வாங்கித்தந்து அவளை வாய் பிளக்க வைப்பானோ?

சினிமாவில் காட்டுவதுபோல், ரகசிய ஏற்பாடுகள் செய்து, கண்களை இதமாய்ப் பொத்தி, இருட்டறை அழைத்துச்சென்று, படீரென்றுவிளக்குகளை எரியச்செய்து, பர்த்டே பாட்டுப்பாடி, கேக் எடுத்து அவளுக்கு  ஊட்டி…......என்னென்னவோ ஆசைகள்.......கனவுகள்!


அல்பமாய்த் தோன்றினாலும் தறிகெட்டு ஓரும் நினைவுகளை அடக்கமுடியவில்லை.இருப்புக் கொள்ளாதவளாய் தவித்தாள்.
இன்று அவனுக்குப் பிடித்த மட்டன் கறி, சிக்கன் ப்ரைடு ரைஸ், கேரட் ஹல்வா எனப் பார்த்துப் பார்த்து செய்தாள்.

ஒருபக்கம் கோபம் வந்தது. இன்று தனக்குப் பிறந்தநாள்!  தனக்குப் பிடித்ததை சாப்பிடாமல்.....தான் விரும்பியதைச் செய்யாமல்…...என்ன இது பைத்தியக்காரத்தனம்?

ஆனாலும் இதமான ஓர் இன்பம் இதயத்தை வருடவே செய்தது.

மாலை நெருங்க, நெருங்க, அவள் பரவசத்துடன் காத்திருந்தாள். எதிர்பாராத பரிசுக்காக அவள் மனம் ஏங்கியது.

போன் வரவும், படபடக்கும் இதயத்துடன் "ஹாய்!" சொன்னாள்.

"ஜானு! இங்கே கொஞ்சம் வேலை அதிகம். வர லேட்டாகும். சாப்பாடு எடுத்துவைக்க வேண்டாம். நீ சாப்பிட்டு படுத்துக்கோ!"

"..........."

"ஜானு.......கேக்குதா?"

"ம்"

சுயபச்சாதாபம் பீறிட்டு கண்ணீராய் வெளிப்பட்டது. போனை வைத்துவிட்டு ஓவென்று வாய்விட்டு கதறினாள்.

சமைத்ததை எடுத்து ப்ரிட்ஜில் வைத்து மூடினாள். குமுறிய மனதுடன் சோபாவில் சாய்ந்தவள், அப்படியே உறங்கிப்போனாள்.

சத்தம் கேட்டு கண் விழித்தபோது பிரபு கைலிக்கு மாறிக்கொண்டிருந்தான்.

"எப்போ வந்தீங்க?"

"இப்பதான்! நீ சாப்பிட்டியா?"

"ம்"

"ஏன் என்னவோ போலயிருக்கே?"

கேள்வி அவளைக்கூறுபோட்டது.  உண்மையிலேயே மறந்துதான் போய்விட்டான்போலும். இதற்குமேலும் வீம்பு ஆகாது என்று உணர்ந்தவள், மெல்லிய புன்னகையினூடே,
"இன்னைக்கு எனக்குப் பிறந்தநாள்!" என்றாள்.

"அட, அப்படியா? நீ இன்னுமா பிறந்தநாள் கொண்டாடிகிட்டு இருக்கே? அதெல்லாம் எனக்குக் குழந்தைப் பருவத்தோடவே முடிஞ்சிடுச்சி!"

சொன்னபின்பாவது வாழ்த்துவான் என்று எதிர்பார்த்தவளுக்கு அதிர்ச்சிதான் மிஞ்சியது. இனி இங்கு நிற்பதில் பயனில்லை என்று படுக்கையறை போக முற்பட்டவளை, "ஜானு" என்ற குரல் தடுத்தது.

ஆவலாய் திரும்பியவளிடம்,
 "குட்நைட், ஜானு! எனக்கு இன்னும் கொஞ்சம் வேலையிருக்கு, முடிக்கணும், நீ போய் படுத்துக்கோ!"

அவள் அசையாமல் நின்றாள்.

"என்ன, ஜானு?"

"எனக்கு 'ஹாப்பி பர்த்டே' சொல்றீங்களா?"

கேட்டேவிட்டாள். வாக்கியத்தை முடிக்குமுன்  துக்கம் பெருகி தொண்டையை அடைத்தது. கண்ணீரைக் கட்டுப்படுத்தினாள்.

"இதென்ன பெரிய விஷயம்? ஹாப்பி பர்த்டே! போதுமா?"

அவன் சிரித்தான். அவள் மெல்ல நடந்து அவனருகில் வந்தாள்.  தன் கரங்களை அவன் தோளில் மாலையாக்கி, அவன் கன்னத்தில் தன் இதழ்களைப் பதித்து, "தாங்க்ஸ்!" என்றாள். சொல்லிவிட்டு படுக்கையறை நோக்கி நடந்தவளைப் பார்த்து, சிரித்தபடியே சொன்னான்,

"நீ இன்னும் குழந்தையாவே இருக்கே, ஜானு!"